Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts
Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts

Monday, July 5, 2021

கச்சி ஏகம்பனே

உன்மத்தராயிருந்தோம்


"கச்சி ஏகம்பனே”

முறையிட்டுக்கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.

ஏகம்பனாம், ஏகம்பன்!

பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய, மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு 'கச்சி ஏகம்பனே' என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?

சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்!

கள்ளிப் புதரும் கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஓரிடமும் இல்லையா? இருந்தால் அதற்கு முறையிடும்! உம்முடைய கண்ணீரை அதற்குச் சொரியும்!

விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது - எல்லா ஆண்களையும்போல; ஆனால், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் - அவள்தான் சரசா - அவளுடைய மனசை ஒருகணமாவது அறிய, அறிய முற்பட, முயன்றிருக் கிறீரா?

கை கூசாமல் பேனாவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனால், இதை அவள் - அந்தப் பட்டுப் போன்ற உடலைப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் - பார்க்க நேரிட்டால்...!

நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?

சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்தபோது, நான் திடுக்கிட்டு விட்டேன்.



இப்படியும் ஓர் அழகா! சாதாரண புடவைதான் உடுத்தியிருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை, முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அந்தச் சாதாரண சேலை.

அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.

அந்தக் கண்கள் - அந்த நீல விழிகள் - அதன் விலை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. நிலமகள் ஒருத்திதான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.

பாவம், அவளுக்கு எப்போதுமே சேலை உடுத்தத் தெரியாது சிறு பெண்தானே!

'சடக், சடக்' என்று சேலை சத்தம்போட வெகு சிரமத்துடன் அவள் நடப்பாள்.

சிறு குழந்தைகள், 'குறு குறு'வென நடை பழகும்போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினால் அள்ளி அணைத்துக் கொள்வோமே, அத்தகைய வேட்கைதான் அவள் நடையைக் காணும் போதெல்லாம் தோன்றும்.

அந்தச் சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங்கள் அந்தப் பாதங்களின் கீழ் துடித்தவண்ணம் நசிகின்றனவோ என்று நான் வியப்பதுண்டு.

பொறாமை யாரைத்தான் விட்டது!

"சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறாள் போல இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறை யிட்டபோது நான் திகைத்து விட்டேன்.

சரசாவா? என்னால் நம்பவே முடியவில்லை.

ஆனால், அன்றிரவு, அந்தப் பாவ காரியத்தை நான் செய்ய வேண்டியதாகிவிட்டது.

மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே வந்தாள். அவள் கையிலே கனத்த சூட்கேவஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.

“மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?”

"சரசா... விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. பிரின்சிப்பல் 'கூட 'டிஸ்மிஸ்' பண்ணும்படி உத்தரவு கொடுத்து விட்டார். எனக்கும்தான் பரிதாபமாக இருந்தது. ஆனால், நான் என்ன செய்ய முடியும்!”

"மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?”

“என்னை விரும்பினார் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. 'குற்றம்' என்று உணர்ந்த பின்புகூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் நடந்துகொண்டோம்.

“மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்குப் பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என்னைப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள்...''

“ஆனால்... யோசித்துப் பாருங்கள் மிஸ்... நாளைக்கு சமு தாயத்தில் என்னை , காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக நடத்தப் போகிறார்களே, அது பரவாயில்லையா?”

"நீங்களும் ஒரு பெண்தான், உங்களைவிட யார் என் குறையை நன்றாக உணர முடியும்?"

அவள் கடைசியாகக் கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது!

"குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட்டதுதானா பள்ளிக்கூடம்? அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவல்லவா?"

நான் என்ன பதில் கூற முடியும்? "சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி நடந்தது?”

வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினாள் அவள்.

நான்தான் திணறிப் போனேன்.

“மிஸ், நான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை ... ஆனால், இன்னும் மூன்று நாட்கள்... மூன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?”

அவள் விம்மி விம்மி அழுதாள்.


இதோ... இந்த 'ஸ்வெட்டர் இதை எதற்காகப் பின்னுகிறாய்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறீர்கள்; நான் மறைத்துவிட்டேன். அவருடை பிறந்த தினம்.அது இன்னும் மூன்றே நாளில் வருகிறது.ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைக் இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?"

"இனிமேல் நான் அவரை எப்படிக் காண்பேனோ?” என்று அவள் விம்மிய போது என்னால் அவளைத் தேற்றக்கூட முடிய வில்லை .

நர்ஸ் படிப்புக்குப் போனாலும் அவள் என்னை மறந்துவிட வில்லை . அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம்...

“எதிர்காலம் இருள்; மனதிலே இருள்; வழியிலே இருள்; என் தந்தை முகத்தில் எப்படி விழிப்பது!

“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவது போன்று படலைக் காலைத் தள்ளினேன்.

“வாசல் திண்ணையிலே என் தந்தை - அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர் - சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரெண்டு வயதே ஆன என் அருமைத் தங்கை. அக்கா படிக்கவேண்டுமென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி - அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

"சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டபடி கைகளை என் பக்கம் நீட்டித் தடவினார்.

"ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய நெஞ்சம் சுக்கு நூறாகச் சிதறி நான் மாண்டு போகவில்லை?

"மூன்று மாதத்தில் சரசாவும் ஒரு நெசவு ஆசிரியை ஆகி விடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்” என்று இரவும் பகலும் கனவு கண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் - வெட்கமில்லாமல் - என் குற்றமெல்லா வற்றையும்


"அடித்து உதைத்திருந்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்

“கையிலே பிசைந்து கண்ணீர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி - அதையும் சகித்தேன்.

"என் தங்கை - அந்தச் சிறுமி - காரணம் விளங்காமலே என் கால்களைக் கட்டி அழுதபோது - அதையும் அந்தச் சிறுமி யின் விலையில்லாத கண்ணீரையும் சகித்தேன்!

"உயிரைப் போக்கிக்கொள்ள எனக்குத் தெரியாமலில்லை. ஆனால்... ஆனால்.....

"கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயுகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களை நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

"ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திரனை எட்டிப் பார்ப்போம்.

"கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகலவென்று காரணமின்றிச் சிரிப்போம்.

"திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக்கொள்வார். வானத்து நட்சத்திரங்களையெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார்.

"அந்த வானத்து மீன் மேலும், பூரண சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.

“உறுதிகள் கோடி செய்தோம்.

 "உன்மத்தராயிருந்தோம். 

"ஆமாம் - உன்மத்தர்தாம்.

"இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் நட்சத்திரக் கூட்டங்களும், இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக் கொண்டு கிடக்கின்றன?

"ஓ நட்சத்திரமே, நீ அவருடைய உறுதிமொழியை இன்னமும் நம்புகிறாயா?

“ ஏ,பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட----?“


"அந்த ராஜு - இந்தப் பேதையை மறந்துவிட்டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனோ உலகத்து அவதூறுகளையெல்லாம் எவருக்காக ஏற்றுக்கொண்டேனோ, அவருக்கு 'சரசா' என்பவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?

"கண்ணீரால் நான் வரைந்த அத்தனை கடிதங்களுக்கும் அவர் பதிலே எழுதவில்லை .

"காரணம் என்ன தெரியுமா? 

"மிஸ், எழுதவே கைகூசுகிறது.

"எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப் படுகிறாராம். ஊரிலே என் பெயர் கெட்டுப்போய்விட்டதாம்.

"ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக்கூடியதா?”

பயிற்சி முடிந்ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனிமேலாவது அவள் அவனை மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மையிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும்கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன செய்தி.....

"நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில்.... இத்தனை நாளில், என்னை ஒருமுறைகூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை . நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். நான் வேறு என்ன செய்ய முடியும்?”

"அவர் ஆண்! நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப்பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா, சொல்லுங்கள் மிஸ்!"

அவள் விசித்து விசித்து அழுதாள்.

என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினாள்.

என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக்கொண்டு 'இந்த விரல்களின் ஸ்பரிசத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா' என்று கூறியவர் கேவலம் இரண்டரை வருடத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?"

இன்னொரு நாள் வியர்க்க, வியர்க்க அவள் வந்திருந்தாள்.

"ஏது இந்த நேரம்?" என்றேன். 

“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று

மாற்றலாகிப் போகிறார்; அவருக்குப் பிரியா விடை நடநதது. இடையிலே வர முடியவில்லை" என்று கூறிவிட்டு, பெரியதொரு பெருமூச்சு விட்டாள்

தேர்தல் சமயம் அது; ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்பது,பத்து

அப்பரேஷன் கேஸ்களாவது வந்தவண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஓய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர் கூட லீவு போட்டுவிட்டார்.

இரவு ஒருமணி இருக்கும். பதினொராவது ஆப்பரேஷன் நடந்து கொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ்வொன்றாக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த்திருந்தது. கடமையைச் செய்ய வேண்டுமென்று ‘லின்ட்' துணியினால் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.

ஏனோ விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டுக் கூர்மை யான பார்வை ஒன்றை வீசினார் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒருகணந் தான்! ஒருவருமே பார்க்கவில்லை.

சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்றுதான் அந்த "டோம்' விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம்கூடத் தயங்கவில்லை. தான் இன்னொருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை . அவள் நினைத்திருந்தால்... ஒரு உதட்டின் அசைவிலே... ஆனால், அவள், அதை விரும்பவில்லை.

இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?

ஆனால் அவளுக்கு, அதை விளம்பரம் செய்யத் தெரியவில்லை. பெண் பேதையென்பதற்கிணங்க, நம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

வழக்கம்போலப் பருத்தித்துறை பஸ் அவளைக் கவ்வியங் காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து



அவள் வீடு வெகு சமீபத்தில்தான் இருந்தது. செங்குந்தான் பாட சாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப்போனால் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனால் அந்தப் பூனைக்கண் இரட்டையர்களின் கடை வாயில் அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.

அதை அவள் கடக்கும் போதெல்லாம் 'விசில்' சப்தமும் விரசமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பிவிடும் சரசாவுக்கு.

இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கிலியன் தோப்பு தென்கோடிப் பக்கமாகப் போவாள்.

அன்றும் அப்படித்தான்.

பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிராக சைக் கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒருகணம் 'திக்' என்றது.

அவன்தான். ராஜுதான்.

சந்தி கழித்து அவன் சமீபமாக வரும்வரைக்கும் படக் படக் கென்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ண க் குமுறல்கள். 'எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப்பார், யாராவது பார்த்து விட்டால், ' என்ன எண்ணங்கள் அவளை நிறைத்தன. நடையைத் தளர்த்திக்கொண்டு ஆசையோடு நின்றாள்.

இதோ ராஜு வந்து விட்டான். உற்றுப் பார்க்கிறான்' என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக் கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.

ஆனால், அவன் நிற்கவில்லை. போயே போய்விட்டான்!

அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து. சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாகவல்ல; பின்சீட்டில், பீடி குடிக்கும் ஓர் அருமையான நண்பனை ஏற்றிக்கொண்டு.

"உன்னை நான் அடையாளம் கண்டுவிட்டேன். இருந்தும் என் மன உறுதியைத் தளரவிடவில்லை . பார்த்தாயா? பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரைகுறை சிரிப்பில் இவ்வளவு வஞசனை எப்படி ஒட்டிக்கொண்டது?

சைக்கிள் மின்வேகத்தில் அவளைக் கடந்தபோது “நேர்ஸ் உடுப்பிலை சோக்காயிருக்கடா!” என்று அந்த அழகான நண்பன்


சொல்லியது நாராசமாய்க் காதில் விழுந்தது. 'கொல்' என்ற சிரிப்பு அதற்குச் சுருதி கூட்டியது.

"அருமை ராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத்திற்குப் பலியா

னாய்?"

"மிஸ், என்னுடைய ராஜு, அந்த அருமை ராஜு, அவர் எப்போதோ இறந்து விட்டார்...'' என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல் இருக்க முடியும்?

பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். நர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த்தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைந்திருந்தன. 'கடமை, கடமை' என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.

"மிஸ்! ராஜு வந்திருந்தார். சாதாரண காய்ச்சல்தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனால்... ஆனால்... நிரம்ப வும் மாறிவிட்டார்.

"நர்ஸ் என்றால் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றொரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றிவிட்டார்.

“நர்ஸ்' என்றால் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;

"அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வையிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே - இன்று வெறி - ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி

நின்றது.

"உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினார். மற்ற நோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.

"நர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானால் ஒரு சொல், ஒரேயொரு சொல் அப்போது கூறியிருக்கலாமே. உடனே


நின்றிருப்பேன்.இன்று, நோயாளிகள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.

“நான் அவர் சொல்லியபடி எப்படி நடக்க முடியும்?”

சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னைவிட வேறுயார் நன்றாக அறிய முடியும்! அவள் என்ன சொன்னாள்? அது எனக்குத்தான் தெரியும். “மிஸ் நான் இப்படித்தான் இருப்பேன்”

“என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித்தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் நான் கற்பனை செய்ய முடியும். ஆனால்... ஆனால்... என் பழைய ராஜு எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”

அதற்குப் பிறகு கண்ணீர்தான் அவள் உள்ளக்கிடக்கையை எனக்குக் கூறியது.

அவள் இனிமேல் மணமே செய்துகொள்ளமாட்டாள். அது எனக்குத் தெரியும்.

மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக்கொள்ள மட்டும் தெரிகிறது.

ஏகம்பனாம்! ஏகம்பன்

விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற்புதமாக வருகிறது.

சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய,அறிய முற்படிமுயன்றீரா?

இப்பொழுது கவலைப்பட்டு என்ன  ஆகப்போகிறது.?





Sunday, July 4, 2021

குந்தியின் தந்திரம்

குந்தியின் தந்திரம்

வானத்திலே -இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல் இது போல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச்சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த

அபூர்வமான யோசனை ஏன் அவளுக்கு முன்பே உதிக்க இல்லை. இத்தனை காலமும் அவளை ஆட்டிவைத்த சிக்கலுக்கு இவ்வளவு இலகுவான தீர்வா என்று அதிசயமாக இருந்தது.

சாலிவாகன தடாகத்தின் அருகில் குந்தி தன் குமாரர்களோடு ஒரு வருடம்வரை தங்கியிருந்தாள். இங்கேதான் பீமன் இடும்பனைக் கொன்றான். அவனுடைய தங்கை இடும்பியோ பீமனுடைய யௌவன உடல்வாகைக் கண்டு மயங்கி காதல் கொண்டுவிட்டாள். குந்தியிடமே வந்து தன் காதலை பிரகடனம் செய்து பீமனை யாசித்தாள். பீமன் என்றால் தரையைப் பார்த்துக் காலால் கற்களை உருட்டியவாறிருந்தான். யுதிஷ்டிரனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தடை சொல்லாமல் அவர்களுடைய விவாகத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டான். அப்போதுகூட குந்திதேவிக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே!

இந்த ஏகசக்கிரபுரத்து வாழ்க்கையும் அவர்களுக்கு அலுத்து விட்டது. அதிலும் மறைவாக வாசம் செய்யும்போது ஒரே இடத்தில் இருப்பது புத்திசாலித்தனமாகாது. ராஜகுமாரர்களாகப் பிறந்துவிட்டு பிராமண வேஷம் தரித்து, பிட்சை பாத்திரம் ஏந்தி எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் நகரத்தைச் சுற்றி வலம் வருவார்கள். குந்தியின் குமாரர்கள் எல்லாம் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

அதிலும் பீமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பகாசுரன் இருக்குமட்டும் பீமன் அவனை வதம் செய்வதிலேயே குறியாய் இருந்தான். இப்போது பகாசுரனும் இறந்துவிட்டான்; பிச்சையும் குறைந்துகொண்டே வந்தது. உணவு பற்றாமல் பீமன் மெலிந்து வருவதைப் பார்க்க குந்திக்கு வருத்தமாக இருந்தது.


அதிர்ஷ்ட வசமாக இந்தச் சமயத்தில் பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் தன்மகள் திரௌபதிக்கு சுயம்வரம் நிச்சயித்து விட்டதால் பிராமணர்கள் எல்லாம் கூட்டம் கட் போய்க்கொண்டிருந்தார்கள். ஐந்து தூண்களைப்போல குந்தியின் குமாரர்கள் இந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்ள சைப்பட்டார்கள். ஆனால், இதை எப்படிக் குந்தியிடம், சொல்வார்கள்? |

லௌகீகம் அறிந்த குந்திதேவி தன் நுண்ணிய மதியினால் இதை உணர்ந்துகொண்டாள். காம்பிலிய நகரத்துக்குச் செல்வதற்கு அனுமதி தந்துவிட்டாள. பாண்டு குமாரர்களுக்கு உற்சாகம் கரைகொள்ளவில்லை.எல்லோருமாக பலநாள். பயணித்துச் சுயம்வர நகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு குயவனுடைய யாகையில் இடம் செய்துகொண்டு தங்கி னார்கள்.

சுயம்வரம் நாளன்று பாஞ்சால தேசம் கோலாகலமான அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஆடவரும் பெண்டிரும் பட்டாடைகள் புனைந்து, தங்கள் தங்கள் வீட்டுப் பண்டிகைபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். குந்தியினுடைய ஐந்து குமாரர்களும் பிராமண வேடம் பூண்டு சுயம்வர மண்டபத்துக்குச் சென்று விட்டார்கள். குயவனும், மனைவியும்கூட போய்விட்டார்கள். குந்திமாத்திரம் வீட்டிலே தனியாக இருந்தாள்.

அவள் மனம் சஞ்சலத்தில் மீண்டும் உழன்றது. வெகு காலமாக மனதிலே கனன்றுகொண்டிருந்த தீ இப்பொழுது சுவாலைவட்டு எழும்பியது. அவளுடைய தீராத விசனத்துக்கு விரைவிலேயே விமோசனம் கிடைக்கக்கூடும்! தன் குமாரர்களின் பௌருஷத்தில் வைத்த நம்பிக்கை வீண்போகாமல் அவர்கள் வெற்றி வீரர்களாகத் திரும்புவார்களென்று காத்திருந்தாள்.

என்னதான் பிராமண வேடம் போட்டாலும் சத்திரிய சின்னங்களை முற்றாக மறைக்க முடியுமா! சிங்கம் போன்ற நடையும், நிமிர்ந்த செஞ்சும், தரை பார்க்காத தலையும் அவர்கள் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கட்டியம் கூறிவிடுமே. தோள்களில் நாண் உறைந்த காய்ப்புகளையும், பெரு விரல்கள் தடிப்புகளையும் எங்கே கொண்டுபோய் மறைப்பது. -குந்தி மறுபடியும் விசாரத்தில் ஆழ்ந்தாள்.

அர்ஜூனனுடைய வீர்யம் உலகப் பிரசித்தமானது. மனமதன கரும்புவில்லை எடுப்பதுபோல் அர்ஜூனன் தனுசை அநாயாசமாக வளைத்து. நாண் ஏற்றி, ஐந்து சரங்களையும் செலுத்தி மத்சயத்தை வெட்டி விடுவான் என்பதில் அவளுக்கு ஐயமேயில்லை. சுயம்வரத்திற்குக் காத்திருக்கும் திரௌபதி நெருப்பிலே பிறந்தவள். துருபதராஜன் செய்த பெரும் தவத்தினால் அர்ஜூனனை மணப்பதற்கென்றே அவதரித்தவள். தேவர்களுடைய அந்த வாக்கு பொய்யாகிப் போய்விடுமா? அங்கே வந்து கூடியிருக்கும் அரசர்கள் ஒரு பிராமணன் திரௌபதியை அபகரிப்பதை சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்களா? பீமன் தன் கோள் வலிமையைக் காட்டாமல் வரமாட்டானே!

இப்பொழுதெல்லாம் பீமனை நேரிலே பார்க்க அவள் கண்கள் கூசுகின்றன. நாணம் வந்து விடுகிறது. ஏதோ பெரும் குற்றம் புரிந்தது போல அவள் மனம் படபடக்கிறது.

அரக்கு மாளிகையில் இருந்து அவர்கள் தப்பி சுரங்க வழியாக வெளியேறி விட்டார்கள். பீமன் குந்தியை முதுகிலும், நகுல சகாதேவர்களை இடையிலும், யுதிஷ்டிரனையும், அர்ஜூன னையும் தோளிலும் வைத்துக்கொண்டு புயல்போல வேகமாக நடக்கிறான். எங்கே துரியோதனனுடைய ஒற்றர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கவலை வேறு. விதுரன் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்திருந்த படகுக்காரன் மூலம் கங்கையைக் கடந்து தென்திசையாக செல்கிறான். எண்பது யோசனை தூரம் கடந்தாகிவிட்டது. பயங்கரமான காடு. களைப்பே அறியாத பீமனுக்கு அப்போது களைப்பு மேலிட்டு விடுகிறது. சிறிது இளைப்பாறலாம் என்று பார்க்கிறான். பீமனுடைய வலிமையில் நம்பிக்கை வைத்து அவனுடைய தாயும் சகோதரர்களும் நிச்சிந்தையாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பீமன் தன் பிதாவை மனத்தினால் தியானித்தான். வாயு தேவன் அபபோது மென்தென்றலாக உருவெடுத்து வந்து பீமனை ஒரு குழந்தையை அணைப்பதுபோல வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டான். பீமனுடைய தேகம் பரவசமானது. ஒருவித புத்துணர்ச்சி வந்து புதுப்பலத்துடன் பிரகாசித்தான்.

வாயுதேவன் தான் வந்தகாரியம் முடிந்து திரும்பும்போது குந்திதேவியைப் பார்த்தான். அவள் அழகுற ஒரு மரத்தடியில் தன்னை மறந்து சயனித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய குறையாத சௌந்தர்யத்தில் தடுமாறிய வாயு அடக்கம் இழந்து அவளை இறுகத் தழுவிவிட்டான். எல்லாம் ஒரு கணம்தான. குந்திக்கும் பழைய ஞாபகம் வந்து ஒரு நொடிப்பொழுது அந்த பரிச இன்பத்தில் தன்னை இழந்துவிட்டாள். வாயுதேவன்

மறைந்துவிட்டான்.


கண்களைத் திறந்தபோது அவள் முன்னாள் பீமன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத ஓர் அருவருப்பு. குந்திதேவிக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்து ரகஸ்யமாகத் தன்னைக்கடிந்து கொண்டாள்.



சொந்த மகனையே நேருக்கு நேர் பார்க்க முடியாதபடிக்கு அவமானமாக இருந்தது. மனதிலே பெரும் சுமையொன் உட்கார்ந்து கொண்டது. துரியோதனாதியரும், சிசுபாலனும் அரசர்களும் அவளைத் தூற்றுவதை அவள் அறியமாட்டாளா? முறையற்ற முறையிலே கர்ப்பம் சுமந்தவள் என்று அவளை தூஷிக்கிறார்களே! முறைகேடாக பிறந்த குமாராகளுக்கு எப்படி ராஜ்யம் சித்திக்கும் என்று குதர்க்கம் பேசுகிறார்களே! திருதராட்டினான் பிறந்த முறையை மறந்துவிட்டார்களா?

இந்த அற்புதமான யோசனையைப் பரீட்சித்துப் பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது. சிறு பெண்ணாயிருந்தபோது துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்து சூரியனிடம் ஒரு மகவைப் பெற்றவள். நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கவச குண்டலத்தோடு ஜொலித்த அந்தக் குழந்தையை ஒரு பேழையிலே வைத்து ஆற்றிலே அனுப்பியவள். அந்த ரகஸ்யம் அவள் மனத்தின் அடியிலே மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்படித்தான் இந்த சோதனையும் அவள் மனத்தின் ஆழத்தில் புதைந்துபோய்விடும்.

பாண்டுவுடன் குந்தியும் மாத்ரியும் வனத்திலே வாழ்ந்த காலம். ஒரு ரிஷியும் அவர் பத்தினியும் காட்டிலே மான் உருவம் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதை அறியாத பாண்டு அம்பை எய்து ரிஷியைக் கொன்றுவிட்டார். அந்த ரிஷ இறக்குமுன் பாண்டு தன் மனைவியுடன் சேர்ந்தால் அக்கணமே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று சபித்துவிட்டார்.

பாண்டு மனம் உடைந்துபோனார். திரும்பவும் நகரத்துக்கும் போகாமல் வனத்திலேயே மீதி நாட்களையும் தவத்திலே கழிப்பது என்று தீர்மானிக்கிறார். இப்படியே காலம் போகிறது. மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.

திடீரென்று பாண்டுவுக்குத் தான் புத்திரபாக்கியம் இல்லாமல் இறந்து விடுவோமென்று வருத்தம் ஏற்படுகிறது. சந்ததியைச் சிருஷ்டிக்காமல் இறப்பவன் நரகத்துக்குப் போவான் என்ற வாக்கு பாண்டுவை இரவும் பகலுமாக வதைக்கிறது இந்த வேதனையில் பாண்டு பலநாட்களாக வருந்துகிறான், இறுதியில் குந்தியிடம் தன யோசனையை வைக்கிறான்

ஒரு ரிஷி மூலம் தனக்கு ஒரு மகவைப் பெற்றுத் தரும்படி யாசிக்கிறான்.அப்படியும் குந்தியின் மனத்தை அவனால் தளர்த்த முடியவில்லை . 

ஒருநாள் பாண்டு படும் வேதனையைக் குந்தி பார்த்தாள். அவனுடைய துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை . இறுகியிருந்த அவளுடைய மனது இளகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு துர்வாசர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைப் பற்றி பாண்டுவிடம் கூறினாள். பாண்டுவின் மனம் மீண்டும் துளிர்த்தது.

பாண்டுவின் ஆலோசனைப்படி தர்மதேவனை வேண்டி குந்தி ஒரு மகவைப் பெற்றாள். தர்மம் மறு உருவம் எடுத்து வந்ததுபோல வந்து பிறந்தவன்தான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது.

ஒரு வருடம் கழிந்தது; பாண்டுவுக்கு மீண்டும் ஆசை. குந்தியினால் மறுக்க முடியவில்லை. இம்முறை வாயு பகவானை வேண்டினாள். வலிமைக்கு ஓர் எல்லையல்லவா வாயு? அப்படிப் பிறந்தவன்தான் பீமன். தர்மதேவனிடம் குந்தி பக்தியுடன் நடந்து கொண்டாள் என்றால் வாயுவின் பலம் காரணமாக அவனை பயத்துடன்தான் சேர்ந்துகொண்டாள்.

ஆனால், பாண்டுவுக்கு இன்னும் ஆசை அடங்கவில்லை. இந்தமுறை குந்தி இந்திரனை நினைத்துக்கொண்டாள். அகலிகை மேல் காதல் கொண்டவன் இந்திரன்! தேவர்களுக்கெல்லாம் அரசன். குந்திக்குப் பெருமையாக இருந்தது. அவனிடம் அள வில்லாத காதலுடன் நெருங்கினாள். அப்படிப் பிறந்தவன்தான் அர்ஜூனன். கண்ணைப் பறிக்கும் வனப்புடன் ஜொலித்தான் அவன், 

கண்டவர்கள் எல்லாம் காதல் கொள்ளும் லட்சணம் கொண்டவன் அர்ஜூனன். அதற்குச் சமமான வீரமும் பராக்கிரமும் படைத்தவன். யுதிஷ்டிரனுக்கு வலது கரம் பீமன் என்றால் அவனுடைய இடது கரம் அர்ஜூனன். வஞ்சகமாக இழந்த ராஜ்யதை மீட்பதற்கு யுதிஷ்டிரன் இவர்களுடைய பராககிரமத்தைதான் நம்பியிருந்தான்.

அர்ஜூனன் பிறந்த பிறகுகூட பாண்டுவின் ஆசை தணிய வில்லை. மீண்டும் குந்தியை வற்புறுத்தினான். ஆனால், குந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தேவேந்திரனுடன் கூடிய பிறகு  அவளுக்கு வேறு தேவர்களை வரிப்பதில் நாட்டமில்லை. அவளே வலிந்து சென்று துர்வாசருடைய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். அந்த மந்திரத்தின் மகிமையில் மாத்ரிக்கும், அஸ்வினி குமாரர்களுக்கும் பிறந்தவர்கள் தான் இந்த நகுலனும், சகா தேவனும்.

அழகு என்று பார்த்தால் சகாதேவனுடைய அழகு யாருக்கு வரும்? எல்லோருக்கும் இளையவன். அவன் நிறமும் தாமரை போன்ற கண்களும் எவரையும் மயக்கிவிடும். அதிலும் மகாபுத்தி சாலி, வாக்குவல்லவன். உண்மையைச் சொல்வதற்கு அஞ்ச மாட்டான்.

இந்தச் சகாதேவன் சிறுவனாக இருந்தபோது என்ன கேள்வி கேட்டுவிட்டான்?

சதஸ்சிருங்க வனத்தில் குந்தியும் மாத்ரியும் ஐந்து புதல்வர் களுடன் கழித்த அந்த மகிழ்ச்சியான காலம். சிறுவர்கள் ரிஷி களிடம் பாடம் கற்று வந்தார்கள். அப்பொழுது ஒருநாள் சகா தேவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். குந்தி அவனை அள்ளி மடியில் இருத்தி, "குழந்தாய்! என்ன நடந்தது?” என்று கேட்கிறாள்.

அதற்குச் சிறுவன் சகாதேவன் சொல்கிறான்: “தாயே! என்னால் இந்த ரிஷி குமாரர்களின் பரிகாசத்தை இனிமேலும் தாங்க முடியாது. என் தந்தை யார்? என் உடன் பிறந்தவர்களின் தந்தையர் யார்? யுதிஷ்டிரனுடைய பிதா தர்மதேவன் என்று சொல்கிறார்கள். பீமனுக்கு வாயுதேவனாம். அர்ஜூனனுக்கு இந்திரனாம். எங்கள் பிதாவோ அஸ்வினி குமாரர்கள். ரிஷி குமாரர்களுக்கோ ஒரேயொரு தந்தைதான். எங்களுக்கோ பல தந்தைகள்! என்னால் இந்த அவமானத்தை எப்படித் தாங்க முடியும்? எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் என்னை இம்சித்தபடியே இருக்கிறார்கள்."

குந்தியினால் பதில் சொல்ல முடியவில்லை . அவள் முகம் தரை பார்த்தது. கண்களில் நீர் கோத்துவிட்டது. அன்று தொடங்கிய இழுக்கு இன்றுவரை இழுத்துக்கொண்டே போகிறது. ரிஷி குமாரர்கள் மாத்திரமா? எல்லோரும்தான் அவளைத் தூற்றுகிறார்கள்.

அவளுடைய துயரம் எல்லாம் இந்தச் சுயம்வரத்தில் நிச்சயமாக தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு குந்தியை யாரும் நூதனப் பிறவிபோலப் பார்க்க மாட்டார்கள் இழித்துக் கூறார்கள், பாண்டு இருக்கும்போதே புருஷாகளை வரித்தவள் என்று வசைபாட மாட்டார்கள்

தூரத்திலே கேட்ட அந்தச் சத்தம் ஓங்கி வளர்ந்து வாசல் வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பெரிய ஆரவாரமும்,சனங்களின் சிரிப்பொலியும் கேட்டது. குந்தி தான் செய்ய வேண்டியதை இன்னொருமுறை மனதிலே நன்கு தீர்மானித்துக்கொண்டாள். சோதனைக்கான சமயம் வந்துவிட்டது. வாசல் பக்கம் போகாமல் குந்தி நன்றாக உள்ளேபோய் உட்கார்ந்து

கொண்டாள்.

வாசலில் இப்போது காலடிச்சத்தம் வெகு துல்லியமாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தபோது வளையல் குலுங்கும் ஓசையும் கேட்டதுபோல இருந்தது.

யுதிஷ்டிரன்தான் பேசினான். வாசலில் இருந்து கொண்டே மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் கூறினான்.

"தாயே! பிட்சை கொண்டு வந்திருக்கிறோம்”

குந்திதேவி உடனேயே பதில் கூறவில்லை . இந்தத் தருணத்திற்காக அவள் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாள்!

சிறு பெண்ணாக இருந்தபோது குந்தி சூரியனை வேண்டி கர்ப்பம் திறந்து கர்ணனைப் பெற்றாள். உலகறிய சுயம்வர மண்டபத்தில் பாண்டுவுக்கு மாலையிட்டாள். சதஸ்சிருங்க வனத்தில் பாண்டுவின் ஆணைப்படி மூன்று தேவர்களை வரித்து பிள்ளை களைப் பெற்றாள்; எல்லாமாக அவளுக்கு ஐந்து புருஷர்கள்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு குந்தி யுதிஷ்டிரனுக்குப் பதில் கூறினாள்.

"என் குமாரர்களே! பிட்சை கொண்டு வந்திருக்கிறீர்களா? வழக்கம்போல ஐவரும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள்.”

தாயாருடைய வாக்கை தேவவாக்காக எடுத்துக்கொள்ளும் பாண்டவர் ஐவரும் திரௌபதியைத் தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டனர்.

குந்தி தன் மனதிற்குள்ளே மெல்ல நகைத்துக்கொண்டாள்.

இனிமேல் யாரும் அவளை ஓர் அவச்சொல் சொல்லப் போவதில்லை. நிம்மதியான பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியே வந்தது.


பி.கு. நான் காலையில் எழுவதற்கு ஐந்து நிமிடம், முன்பே என் மனமானது எழுந்துவிடும். எழுந்து எனக்காகக் காத்திருக்கும். இந்த மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது அன்றாடம் நடக்கும் சங்கதி.

இப்படியான ஒரு காலை வேளையில் என் மனம் கேட்ட கேள்விககளில் எனது கற்பனை விரிந்தது. அதில் பிறந்தது தான் இந்தக் கதை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப் பார்களாக.



Wednesday, June 30, 2021

திகடசக்கரம்

 

திகடசக்கரம்

எரிச்சல் ஊட்டுவதற்கென்றே பிறவியெடுத்தவன் 'எரிக்ஸன்', முந்திய பிறவியில் நான் செய்த வினைப்பயனால் அவனுடன் எனக்கு ஒரு தொந்தம் ஏற்பட்டுவிட்டது.நான் எங்கே போனாலும் அவனும் அங்கே என் பின்னால் வந்து சேர்ந்து விடுவான்

ஸ்வீடன் தேசத்து அரசாங்கத்துக்காக இவன் வேலை செய்க வந்தான். ஆள் உயரமாகவும் வசீகரமாகவும் இருப்பான். அவன் ஆங்கிலம் கதைப்பது கேட்க ஆனந்தமாக இருக்கும். 'ஸ்வீடிஷ்' மொழியிலே சிந்தித்துப் பின் அதை ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்துப் பேசுவான். ஆகையினாலே, அவனுடைய ஆங்கிலம் நெளிந்து, நெளிந்து வரும். சுருக்காக ஒரு விஷயத்தைப் பேசினோம் என்பது அவன் ஜாதகத்திலேயே கிடையாது. நீண்டு வளைத்துத்தான் கதைக்கு வருவான்.

அவன் வடதுருவம் என்றால், நான் தென் துருவம் அவன் நெருப்பு என்றால் நான் ஐஸ். அவன் நீட்டி நீட்டிப் பேசினால் நான் சுருக்கமாகத்தான் பேசுவேன். எப்பவும் அவசரப்பட்டு ஓடிய படியே இருப்பான். நான் அப்படி இல்லை . குழாயில் வரும் நீர் போல மளமளவென்று சிந்தனைகளை வரவரக் கொட்டிக் கொண்டே இருப்பான். நானோ ஆற அமர யோசித்து ஒரே ஒரு வசனம் பேசினாலே அது பெரிய காரியம். இப்படியாக நாங்கள் முற்றிலும் எதிர்மறையானவர்கள். எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் எப்படியோ ஒரு முடிச்சைப் போட்டுவிட்டார்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் யாரும் எரிக்ஸனுடன் தொடர்ச்சியாகப் பேசமுடியாது. எப்படியும் எரிச்சல் மூட்டி விடுவான.

அப்படி ஓர் அசாத்தியமான சாமர்த்தியம் அவனிடமிருந்தது.

எங்கள் இருவருக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி - எங்கள் பணியின் நிமித்தம் நாங்கள் இப்படி அடிக்கடி சந்திக்  வேண்டிவரும். ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறோம். ஒரு விசேஷ கூட்டத்திற்காக நாங்கள் வரவழைக்கப்பட்டிருந்தோம்.

விஷயம் இதுதான். ஸ்வீடன் நாடு பன்னிரெண்டு மில்லியன் டொலர் ஓர் அணைக்கட்டு விஷயமாகக் கொடுப்பதாக இருந்தது இந்த அணைக்கட்டினால் மின்சக்தியும் விவசாயமும் பெருகி நாடு பெரும் சுபிட்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சில குழுக்கள் இந்த அணைக்கட்டு சம்பந்தமாக ஆராய்ந்ததில் பல அனர்த்தங்கள் விளையும் என்பதைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேண்டு கோளின்படி நாங்கள் ஆராய்ச்சி செய்து 96 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்திருந்தோம்.

மறுநாள் ஒன்பது பேர் கொண்ட குழுவின் முன் எங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து அணைக்கட்டினால் ஏற்படக் கூடிய பாதகங்களைக் கூறி அணைக்கட்டு பிளானை முற்றிலும் முறியடிக்க வேண்டும்.

எரிக்ஸன் நெருப்புக்கு மேலே நின்றான். எங்களுடைய அறிக் கையை எப்படியும் வெற்றிகரமாக ஒப்பேற்றிவிட வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. ஆனால், ஆர்வம் இருந்தால் காணுமா? எங்களுக்குச் சில வில்லங்கங்களும் இருந்தன.

குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஓர் ஓய்வு பெற்ற நீதிபதி. அனாவசியப் பேச்சு அவருக்குப் பிடிக்காது. ஆனால், 'சரி' என்று பட்டதை நேரே பயமின்றி சொல்லக்கூடியவர். மற்றது ஒரு பாதிரியார். அவராலும் எங்களுக்கு இடைஞ்சல் இல்லை.

'சாயத் தான் எங்கள் முதல் எதிரி. மிகப்பெரிய பணக்காரன். முக்கால்வாசி மந்திரிமாரைக் கைக்குள்ளேயும், மீதியுள்ளோரை பைக்குள்ளேயும் வைத்துக்கொண்டு திரிபவன். பணத்தின் பலத்தினால் ஆடம்பரமாகப் பேசப் பழகிக்கொண்டவன். குழுவிலே இருந்த மற்ற ஆறு பேரையும் அவன் 'வாங்கிவிட்டான்' என்றுதான் கதை. இந்த அணைக்கட்டு திட்டம் அங்கீகாரம் பெற்றால் அதனால் வரும் ஒப்பந்தங்கள் எல்லாம் இவனிடம்தான் போய்ச்சேரும்; நிராகரிக்கப்பட்டாலோ அவனுக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம்.

எரிக்ஸன், நாங்கள் தயாரித்த அறிக்கையை கர்மசிரத்தையாக படித்துக்கொண்டிருந்தான். சிவப்புக்கோடு, மஞ்சள் கோடு, நீலக் கோடு என்று எங்கும் மூவர்ணக் கொடிபோலக் கீறி வைத்திருந்தான்.

 

அறை முழுக்க சிகரட் புகையும், பீர் போத்தலும் 'பைல்  கட்டுகளும்தான். என்மேல் அவனுக்கு எரிச்சலுக்கு காரணம் நான் அன்றைய தினசரியை சாவதானமாக கொண்டிருந்ததுதான்.

எரிக்ஸனுக்கு குட்நைட் சொல்லிவிட்டுப் படுப்பதற்கு விரைந்தேன். அவன் "V.D, என்ன? எட்டு மணிக்கே படுக்கப் போறாயா? நாளைக்கு ஒன்பது மணிக்கல்லவா கூட்டம்? எவ்வளவோ குறிப்புகள் தயார் பண்ண வேண்டியிருக்கிறதே?” என்றான்.

('வைத்தியநாதன்' என்று என் பெற்றோர் சூட்டிய அழகிய பேரை இவனுக்காகச் சுருக்கி 'வைத்தி' என்று மாற்றினேன்: . அதையும் குறுகத் தறித்து 'V.D' என்று என்னைச் செல்லமாகக் கூப்பிடத் தொடங்கிவிட்டான், கொலை பாதகன்.)

நான். "எரிக்ஸன், நாளை காலை எட்டுமணிக்கு இங்கே சந்திப்போம். எங்கள் அணுகுமுறையை இன்னொரு தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லைஎன்றேன்.

எரிக்ஸனுக்கு ஆத்திரமான ஆத்திரம். “சாயத்தோடு சேர்ந்து ஏழு பேர் ஒரு பக்கம். பாதிரியார் ஒருவரைத்தான் நாங்கள் நம்பலாம். இது எங்களுக்கு முழுத் தோல்வி. சந்தேகமே இல்லை . நீ போய் ஆனந்தமாக சயனிஎன்றான் கோபத்துடன்.

இப்படி எத்தனை எரிமலைகளைக் கண்டவன் நான். விர் ரென்று என் படுக்கையறைக்குப் போனேன்; படுத்ததும் தூங்கியும் விட்டேன்.

அடுத்த நாள் விடிகாலை ஆறு மணிக்கே கதவைப் படபட வென்று தட்டினான், எரிக்ஸன். நான் அந்த நேரம் வழக்கமா ஸ்நானம் செய்து ஸ்தோத்திரங்களை முடித்துவிட்டுக் கை விரல் எண்ணிக்கொண்டே காயத்ரி ஜபம் செய்துகொண்டிருந்தேன். அவனும் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தான்.

இறுதியில் நான் ஜபங்களை முடித்த பின் கதவைத் திறந்தேன்.

எரிக்ஸன் முற்றிலும் உடுத்தித் தயாராகி வந்திருந்தான் நாங்கள் காலை உணவை முடித்துவிட்டு ஒரு மூலையில் இருந்து எங்கள் அணுகுமுறையைச் சரிபார்த்துக்கொண்டோம்.

 

எரிக்ஸன், இன்று நடக்கும் கூட்டமோ மூன்று மணித் தியாலத்திற்கு மேல் நீடிக்க முடியாது. தலைவர் முடிவை இன்றே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எங்களுடைய அறிக்கையிலே இன்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிலும் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே மூன்று தாக்கமான கேள்விகள் வரும். நீ அயர்ந்து விடாதே. உன் வித்தை எல்லாத்தையும் காட்டி பதிலை அவசரமின்றி எடுத்துக் கூறு. எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவு நேரத்தையும் கடத்து. உன் பதில் முடியும் தறுவாயில் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன்.''

என்ன VD? அவ்வளவுதானா?” என்றான். "அவ்வளவுதான்.''

தலையிலே இரு கைகளையும் வைத்து மேலே ஆண்ட வனைப் பார்த்தான், எரிக்ஸன்.

ஒன்பது மணி நெருங்கிக்கொண்டிருக்கிறது. எரிக்ஸன் இரண்டு கைகளிலும் மலைபோல் குவித்து, கட்டுக்கட்டாகப் புத்தகங்களும் அறிக்கைகளும் கோப்புகளுமாகக் கொண்டுபோய் மேசை மேல் கண்காட்சிக்கு அடுக்கி வைப்பதுபோல் அடுக்கி வைக்கிறான். நான் நாலு தாள்களை மாத்திரம் ஒரு வெறும் கோப்பில் மறைத்து வைத்துக்கொண்டு வருகிறேன்.

சாயத் ஆடம்பரமாக உரத்துப் பேசிக்கொண்டு நுழைகிறார். அவருக்குப் பின்னால் நாலு பேர் ஓடாத குறையாக வருகிறார்கள். சபைத்தலைவர்கூட எழுந்து அவருக்கு மரியாதை செய்கிறார். நாங்களும் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்.

தலைவருடைய சிறு உரைக்குப் பிறகு எரிக்ஸன் தன் கட்சி வாதத்தை ஆரம்பித்து வைக்கிறான்.

எடுத்த வீச்சிலேயே எரிக்ஸன் அறிக்கையில் கண்டுள்ளபடி இந்த அணைக்கட்டினால் 47,000 ஏக்கர் காடுகள் தண்ணீரில் மூழ்கி விடும் என்கிறான்.

சாயத் உடனேயே எதிர்ப்புக் குரல் தெரிவிக்கிறார். "இது என்ன குப்பை? எங்கே இதற்கான ஆதாரம்?” என்று கேட்கிறார். எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப்போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பித் தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன. அவனோ களைப்படையாமல்

தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். இதற்கிடையில் சபையி லுள்ள மற்றைய உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்ததைக கூற வாதம் சூடுபிடித்தது. இப்படியாக முதல் கேள்வியிலேயே முக்கால் மணிநேரம் செலவழிந்துவிட்டது.

அப்போது நான் எரிக்ஸனுக்கு சாடை காட்டிவிட்டு சொன்னேன்:

"பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரசு அமைத்த  விசாரணைக் குழுவில் தலைவர் அவர்களே ஓர் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். அந்த அறிக்கையில் 47,000 ஏக்கர் என். பிரஸ்தாபித்தது ஞாபகமிருக்கிறது" என்று கூறிவிட்டு எரிக்ஸன் கொண்டு வந்த பைல் கட்டுகளையும் புத்தகத்தையும் சிதற அடித்து தேடுவதுபோலத் தேடி சிறிது நேரம் கடத்திவிட்டு, "ஆஹா, இதோ அதற்கான படிவம்என்று நான் தயாராகக் கொண்டுபோன ஏட்டில் இருந்து தாளை உருவிக் கொடுத்தேன். தலைவர் அதை வாங்கிப் படித்துவிட்டு தலையை ஆட்டினார்.

சாயத் தாளைப் பிடுங்கி உற்று உற்றுப் பார்த்தார். பார்த்து விட்டு மேசை மேலே போட்டார். மற்றவர்களும் எடுத்து காயதத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார்கள்.

எரிக்ஸன் மீண்டும் பேசத் தொடங்கினான். ஆனால், மூன்றாவது நிமிடமே இன்னுமொரு இடைஞ்சல் வந்தது. சாயத் சொன்னார். "1,16,000 பேர் குடிபெயர்வதாகச் சொல்கிறீரே? அரசாங்கம் அவ்வளவு பேருக்கும் புது வீடுகள் கட்டித்தருவதாகக் கூறியிருக்கிறதே! இதில் என்ன நஷ்டம்?” என்றார்.

எரிக்ஸன் இதற்கும் பதில் அளிக்கத் தொடங்கினான். சொல்லி வைத்தபடி பதிலும் நீண்டுகொண்டேபோனது. தலைவர் தண்ணீர் குடித்தார். பாதிரியார் கொட்டாவி விட்டார். சாயத் தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக்கொண்டே இருந்தார்.

அப்போது, சமயம் பார்த்து நான் குறுக்கிட்டு, "தலைவரே மதிப்பிற்குரிய எமது முதல் மந்திரியாரும், திரு சாயத் அவர்களும் இன்னும் சிலரும் கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி ஸ்விடன் போனபோது மேற்படி விஷயம் மிகவும் விஸ்தாரமாக பேசப்பட்டது. குடிபெயர்வால் ஏற்படும் சமுதாய இன்னல்கள் புது வீடுகள் கட்டுவதனால் மட்டுமே தீரக்கூடிய காரியமல்ல. இதை ஸ்வீடன் அரசாங்கமே ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறது ' என்று கூறி அவர்கள் எழுதிய கடிதத்தின் நகலை சபையின் முன் வைத்தேன். எல்லோரும் பாய்ந்து எடுத்து அந்தக் கடிதத்தை படித்தார்கள்.

 

தலைவருடைய நம்பிக்கை இப்போது பரிபூரணமாக எரிக்ஸனுடைய பக்கம் திரும்பிவிட்டது. இதற்கிடையில் இரண்டு மணி நேரம் ஓடிவிட மீதி நேரத்தில் எரிக்ஸன் சொல்ல வேண்டிய தெல்லாவற்றையும் நேர்த்தியாகச் சொல்லி முடித்தான். இம்முறை அவனுக்குத் தடங்கலே இல்லை.

அவன் பேசி ஓய்ந்ததும் தலைவர் இன்னும் யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்டார்.

என் மடியில் இன்னுமொரு ஆணி இருந்தது. கடைசி ஆணி. நான் சொன்னேன்.

"தலைவரே, எல்லோரும் களைப்பாகி இருக்கும் இந்தச் சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருகிறேன். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் நல்ல விளைவுகளும் கெட்ட விளைவுகளும் கலந்தே இருக்கும். நல்ல விளைவுகள்கூட இருப்பின் நாங்கள் அந்தக் காரியத்தைச் செய்கிறோம்; இல்லா விடில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.”

"இந்த அணைக்கட்டினால் எங்களுக்கு அதிகப்படியான மின்சக்தியும், நீர்ப்பாசன வசதிகளும், கிராமங்களுக்குக் குடி தண்ணீரும் கிடைக்கிறது. அத்துடன், அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகளையும் இது தடுக்கிறது. இது எல்லாம் நல்ல விளைவுகள்தான்.”

"ஆனால், இதனால் ஏற்படும் பாதகங்களையும் நாங்கள் கணக்கு பார்க்க வேணும். சுற்றுச்சூழல் முற்றிலும் அழிந்துவிடு கிறது. 1,16,000 பேர் குடிபெயர்வதினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், காடுகளின் அழிவு; மீன் முதலிய உயிரினங்களின் புலம் பெயர்வு (migration) தடை; ஆற்றிலே வண்டல் தன்மை குறைந்து விடுவதால் நசிந்துவிடும் விவசாயம்; இவையெல்லாம் பாதகமான விளைவுகள்

இந்த அறிக்கையின் 46ஆம் பக்கத்திலே கொடுத்திருக்கும் விபரங்களின்படி, நன்மைகளுக்கு 370 புள்ளிகள் என்றால் தீமை களுக்கு 520 புள்ளிகள் விழுகின்றன.”

"ஆனால், இந்தக் கணக்கிலே நாங்கள் ஒரு மிகப்பெரிய தப்பு செய்து விட்டோம்.

"இந்த இடத்தில் வாழும் 16 வகையான உயிரினங்கள் இந்தப் பிராந்தியத்திலேயே பிரத்தியேகமாக வாழும் தன்மை பெற்றவை. இந்த உலகின் வேறெந்த மூலை முடுக்கிலும் இந்த உயிரினங்களைக் காண ஏலாது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும்; பூண்டோடு போய்விடும்.”

"இந்த உயிரினங்களின் அழிவுக்கு மதிப்புப் புள்ளிகள் போட முடியுமா? கோடி புள்ளிகள் போட்டாலும் அவை ஈடாகுமா?”

"கடவுள் இந்த உயிரினங்களைச் சிருஷ்டித்தார். எத்தனையோ கோடி ஆண்டுகள் இதே இடத்தில் உயிர் வாழ்ந்தன ஆனால், இனிமேலும் அவை உயிர் வாழும் பொறுப்பு கடவுள் கையில் இல்லை; உங்கள் ஒன்பது பேருடைய கைகளில் தான் இருக்கிறதுஎன்றேன்.

கூட்டத்தில் சிறிது நேரம் சலனமில்லை . சாயத்தின் முகம் பேயறைந்தது போலிருந்தது. பாதிரியாரின் முகத்தில் புன்சிரிப்பு

தலைவர் ஐந்து நிமிடங்களில் தன் முடிவுரையைக் கூறினார். அதன் கடைசி வாசகம்:

"தகுந்த ஆதாரங்களினாலும், ஆணித்தரமான வாதங்களாலும் இந்த அணைக்கட்டு மனித மேம்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது தீர்மானமாகிவிட்டது. ஆகவே இதைக் கைவிடும் ஆலோசனையை இன்றே அரசாங்கத்துக்கு அறிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”

வெளியே வந்ததும் எரிக்ஸன் என்னைக் கட்டிப்பிடித்து மேலே தூக்கினான்.

எப்படிச் செய்தாய்? எப்படிச் செய்தாய்?' என்று துளைத்து எடுத்தான். நான் "கச்சியப்பருக்கு நன்றிஎன்று கூறினேன. "யாரிந்தக் கச்சியப்பர்?” என்று நச்சரித்தான். நான்பிறகு சொல் கிறேன்என்று கூறி அவனிடமிருந்து மெள்ளக் கழன்றுகொண டேன்.

அன்று பின்னேரம் எரிக்ஸன் மறுபடியும் என் அறை கதவை விடாமல் தட்டியபடியே இருந்தான். நான் சாயங்கால பூசையை முடித்துக்கொண்டு கதவைத் திறந்ததும் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தன் ரூமுக்கு அழைத்துப் போனான்.

அங்கே இருந்த வசதியான கதிரையில் அவன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னையும் இருக்கச் சொன்ன

பணிப்பெண்ணிடம் பீர் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவள் அசைந் அசைந்து அசைந்து பீரைக் கொண்டுவந்து வைத்தாள்; கண்களைச் சுழட்டி ஒரு வீசு வீசிவிட்டுப் போய் விட்டாள். எரிக்ஸனுடைய கண்கள் அவளைத் தடவிக்கொண்டே கொஞ்ச தூரம் பின்சென்று மீண்டும் திரும்பியது.

பீரை ஊற்றிச் சுவைத்துக் குடித்தான். பிறகு என்னைப் பார்த்து, "யார், அந்தக் கசியப்பா, சொல்என்றான். அவனுடைய ஆவலும் பீருடைய நுரைபோலப் பொங்கிக்கொண்டு நின்றது.

நான் சொன்னேன்: “எரிக்ஸன், 'கசியபா' இல்லை ; கச்சியப்பர் உனக்கு இது விளங்காது. எங்கள் பழக்க வழக்கங்கள், சமயக் கோட்பாடுகள் இவற்றை அறிந்த ஒருவரால்தான் நான் சொல்லப்போவதை உண்மையில் புரிய முடியும்; இது வீண் நேரம்.”

அதற்கு எரிக்ஸன், “எந்த ஒரு விஷயமும் அதைச் சொல்லும் விதத்தில் இருக்கிறது. சொல்கிறவர் கெட்டிக்காரர் என்றால், புரிகிறவர் புரிந்து கொள்வார். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு, நான் புரியும்வரை புரிந்துகொள்கிறேன்என்றான்.

காலைத் தூக்கி மேலே போட்டுக்கொண்டு, பீர் குடித்தபடி கந்த புராணம் கேட்கும் முதல் மனிதன் இவனாகத்தானிருக்கும் என்று நான் என் மனதிற்குள் நினைத்துக்கொண்டு சொன்னேன்:

"கச்சியப்பர் என்பவர் கந்த புராணம் என்ற பெருங்காப்பியத்தை தமிழிலே பாடினார். அதை அரங்கேற்றும்போது, ஒரு இலட்சம் கிரந்தங்கள் கொண்ட அந்த நூலில் முதல் செய்யுளில், முதல் வரியில், முதல் வார்த்தையிலேயே ஒரு சிக்கல் வந்து விட்டது. சிக்கலோ பெரிய சிக்கல். ஆனால், கச்சியப்பர் ஆணித் தரமான ஆதாரத்தோடு அந்தச் சிக்கலை அவிழ்க்கிறார். சபையோருக்கு அவருடைய ஆழ்ந்த புலமையிலே அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் பிறக்கிறது. (the credibility is established)."

அதற்குப் பிறகு கச்சியப்பர் மீதி செய்யுள்களையெல்லாம் தங்கு தடையின்றிப் படித்து, பொருள் கூறி வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார்.”

"என்னுடைய அபிப்பிராயம், அந்த முடிச்சைக் கச்சியப்பர் வேண்டுமென்றே வைத்தார் என்பதுதான். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பாடல்களில் முதல் செய்யுளில், முதல் வரியில் ஒரு எக்கச்சக்கமான வார்த்தையை முதல் வார்த்தையாக யாராவது வைத்திருப்பார்களா?"

"V.D. இது நல்லாயிருக்கு : விபரமாய்ச் சொல்என்றான் எரிக்ஸன்.

 

தொண்டை மண்டலத்திலே சிறந்து விளங்கும் காஞ்சிபுரத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியாருக்குப் புத்திரராகப் பிறந்தார். கச்சியப்பர். அவர் தன் ஐந்தாவது வயதிலேயே வித்தியாரம்பம் செய்யப்பெற்று தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகள் கற்றுத் தேர்ந்து வல்லுநரானார்.

ஒருநாள் குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் இவர் கனவிலே தோன்றி, "அன்பனே, நீ நமது சரித்திரத்தைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டு தமிழிலே பெருங்காப்பியமாகச் செய் அதற்கு முதல் அடியாக 'திகட சக்கரச் செம்முக மைந்துளான், என்று தொடங்குவாயாக" என்று கூறி மறைந்தார். இவரும் அப்படியே கந்த புராணத்தைப் பாட ஆரம்பித்து நாளொன்றுக்கு நூறு பாடல்கள் பாடி அந்தக் காப்பியத்தை குறைவற முடித்தார்.

இந்த நூலை அரங்கேற்றும் பொருட்டு தமிழ் புலவர்களுக்கும், வேத வேதாங்க பண்டிதர்களுக்கும், சிவாகம விற்பன்னர்களுக்கும் தேவார திருவாசக வல்லுநர்களுக்கும் ஓலை விடுத்துச் சபையைக் கூட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சுபதினத்தில் கந்த புராணத் திருமுறையை குமரக்கோட்டத்து சுப்பிரமணியக் கடவுள் முன் வைத்துத் துதித்துப் பின்னர் முதற் செய்யுளை உரைக்கலானார்:

'திகடசக்கரச் செம்முகமைந்துளான் என்று வாசித்து, அதாவது 'திகழ்+தசம்+கரம்', விளங்குகின்ற பத்து திருக்கைகளும் செவ்விய ஐந்து முகங்களுமாகவுள்ள சிவ பெருமான்' என்ற பொருள் கூறித் தொடங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த புலவர்களிலே மூத்த புலவர் ஒருத்தர் எழுந்து, "நில்லும், நில்லும்; திகழ் தசம் கரம் 'திகடசக்கரம் என்று புணர்வதற்கு விதி தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் இல்லையே? இது எப்படிப் பொருந்தும்என்று கூறினார்.

அதற்குக் கச்சியப்பர் திகைத்து நின்று, "இது முருகனே எடுத்துக் கொடுத்த அடியல்லவா? இதற்குக்கூட இலக்கண விதிகள் உண்டா?” என்று கேட்டார்.

அபபோது அந்தப் புலவரானவர் புன்முறுவல் பூத்து "உமக்கு அடியெடுத்துக் கொடுத்த முருகன் இவ்விடம் வந்து சாட்சி சொல்வாரானால் நாங்கள் அக்கணமே இதனை அங்கீகரிப்போம்;

 

அன்றேல் இதற்கு யாதேனும் ஒரு பிற இலக்கண நூலில் விதி காட்டினும் அங்கீகரிப்போம், அல்லாவிடில் அரங்கேற்ற ஒப்புக்

கொள்ளமாட்டோம்" என்றார்.

இக்கருணத்தில் ஏனைய புலவர்களும் இரு கூறாகப் பிரிந்து தந்தமக்கு தோன்றியபடி விவாதம் செய்ய அன்றைய போதில் முக்காப் போதும் கழிந்தது; கச்சியப்பரும் 'இதற்கு முடிவு நாளை தெரியும்' என்று கூறி சபையைக் கலைத்தார்.

கச்சியப்பர் முருகனிடம் நேரே போய், "அப்பனே, உன்னா லன்றோ நான் கந்தபுராணம் பாட முற்பட்டது. அதற்கு, நீ எடுத்துக் கொடுத்த அடியிலேயே இழுக்கு வந்துவிட்டதே. இது தகுமா?” என்று குறையிரந்தார்.

 முருகன் அவர் கனவிலே தோன்றி, “கச்சியப்பரே, பயப்பட வேண்டாம். சோழ தேசத்திலிருந்து ஒரு புலவர் நாளை வருவார். அவரால் சபையோருடைய ஐயம் தெளிவுறும்என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் சபை கூடியது. அப்போது சோழ தேசத்தி லிருந்து வந்த புலவர் ஒருத்தர் வீரசோழியம் என்ற இலக்கணநூலை சபையினரின் முன் சமர்ப்பித்து, சந்திப்படலத்தில் பதினெட்டா வது செய்யுளில் திகழ் தசம் என்பது திகடசம் என்று புணர்வதற்கு விதியிருக்கிறதைக் காட்டினார். முன்னாளில் ஆட்சேபித்த புலவரும் அதனை வாங்கிப் படித்து 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சிக்கு விதி சரியாயிருக்கக் கண்டு விம்மிதமும், மகிழ்ச்சியு முற்றார்; மற்றைய புலவர்களும் ஒருவர் பின் ஒருவராக நூலை வாங்கிப் படித்துத் தங்கள் சந்தேகம் தெளிவுபெற்றனர்.

தடை பெற்ற அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. சபையோருக்குக் கச்சியப்பரிடத்தில் நம்பிக்கையும் மரியாதையும் பக்தியும் பெருகியது.

அதன் பிறகு தங்குதடை எதுவுமின்றி கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை வாசித்து பொருளும் கூறி அரங்கேற்றி முடித்தார்.

எரிக்ஸன் கதையை நன்றாக அனுபவித்துக் கேட்டான். விழுந்து சிரித்தான். பிறகு, "உன்னுடைய கச்சியப்பர் பெரிய ஆள்தான்என்றான்.

"இதை இனிமேல் 'கச்சியப்பரின் யுக்தி' (The Kachiyapar's strategy) என்று நாங்கள் எங்களுக்குள்ளே கூறிக் கொள்வோம்என்றான்.

சிரித்துக்கொண்டே, “சரிஎன்றேன் நான்.

" V.D, அவுஸ்திரேலியாவில் நடக்கப் போகும் சம்மேளனத் துக்கு நீயும் வருகிறாயல்லவா? அங்கேயும் இதே யுக்தியைக் கையாளுவோம். அசந்து விடுவார்கள்என்றான்.

நான் "ஒரு யுக்தியை ஒருமுறை கையாளலாம். இரண்டா வது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால், மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறைக்கு புதிதாக ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான். கந்த புராணம் போனால் என்ன? சிவபுராணம் இருக் கிறதே! ஏதாவது தோன்றாமலா போய் விடும்!” என்றேன்.

"அதுவும் சரிதான்என்றான் எரிக்ஸன்.