Sunday, July 25, 2021

நாடும் ஏடும் அண்ணாவின் உரை

"நாடும் ஏடும்”

தோழர்களே!
உங்களிடை இன்று எனது மதிப்பிற்குரியவரும், உங்கள் ஆசிரியரும் எனது முன்னாள் ஆசிரியருமான திரு. கந்தசாமி முதலியார் அவர்கள் தலைமையில் பேசும் பெரும்பேறு வாய்த்தமைக்குப் பெரிதும் இறும்பூதெய்துகிறேன். மற்றும் நான் கல்வி கற்றுத் தேர்ந்த இதே பச்சையப்பன் கல்லூரி மாணவத் தோழர்களாகிய உங்களிடையே பேச நேர்ந்த இவ்வாய்ப்பை நினைத்தும் மகிழ்கிறேன். இதுபற்றி மிகுதியும் பெருமையடைகிறேன். இவ்வாய்ப்பை எனக்களித்த இத்தமிழ்ச் சங்கத்தாருக்கு எனது மனமுவந்த நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது நன்றி அவர்க்குரித்தாகுக!

ஏடு எது?
நாடு மக்களால் நிறையப்பட்டிருக்கும் ஒன்று. ஏடு நாட்டு மக்களால் கற்கப்படுவது! கையாளப்படுவது! செய்யப்படுவது போற்றப்படுவது. அந்தந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பார்த்தால் அந்தந்த நாட்டு மக்களைப் பற்றி, வரலாறுகளைப்பற்றி, வாழ்க்கை வளங்களைப்பற்றி, நாகரிகத்தைப் பற்றி, குணங்களைப்பற்றி, பழக்க வழக்கங்களைப்பற்றி பாங்குற எளிதாக, ஏமாற மார்க்கமின்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆம்! நாட்டிலுள்ள ஏடுகள், நாட்டில் உள்ளதை, நடப்பதை, மக்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டும் கண்ணாடியாகக் காட்சியளிக்க வேண்டும். நாட்டு மக்களை மேன்மையுறச் செய்யும் தூண்டா விளக்காய் துலங்குதல் வேண்டும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பிருக்க வேண்டும். நாட்டோரை நடுநிலை பிறழா நல் நீதிபதிகளாக்க உறுதுணை செய்யும் ஊன்று கோலாக உதவ வேண்டும்.

தொல்காப்பியம்
நிற்க, நான் இன்று நாட்டோடு, நாட்டு மக்களோடு நீங்காத் தொடர்பு கொண்டு பழகி வருகின்றேன். நீங்களும் உங்கள் கல்வி முடிந்த உடன் அத்தகைய தொடர்பு கொள்வீர்கள் என்றும் துணிபுடையேன். மக்களுடைய அன்றாட வாழ்வை அலசிப் பார்“கின்றேன். அறிவோடு ஆராய்ந்து பார்க்கின்றேன். எனவே நாட்டாரோடு நாட்டானாய் நாட்டு மக்களை யறிந்த ஒருவனும், உங்களைப் போன்று கலை பயிலும் மாணவத் தோழர்களும் சந்தித்து அளவளாவுதல் முற்றும் முறையே. முயற்சியோடு நாளும் நாளும் நடாத்துதல் மிக மிக நன்றே.

நான் இன்று நாட்டில் நடமாடி வரும் நானாவித ஏடுகளில் சிலவற்றைப் படித்திருக்கின்கிறேன். சிலவற்றைப் பார்த்திருக் கின்றேன். பலவற்றைப் பற்றிப் பண்பாளர்கள் பன்னிப் பன்னிப் புகழ்வதைப் பல முறை கேட்டிருக்கின்றேன். அத்தகைய வித்தகரால் போற்றப்பெறும் பண்டை நூல்களில் ஒன்று, நந்தம் தொல்காப்பியம். நான் தொல்காப்பியம் தொன்மை நூலென்றும் தமிழரின் தனித்தமிழ் நூல் என்றும், விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியால் எடுத்தியம்பும் ஆற்றல் வாய்ந்த அரும் பெரும் பொக்கிஷம் என்றும், தமிழனின் தனி நாகரிகத்தை நாட்டோர் நன்கு உணர, நயமாக நவிலும் நிகண்டெனவும், தன்னேரிலாத் தமிழ் மொழி தரணியெங்குந“ தழைத்தோங்க தகுமுறை வகுத்த ஒப்பிலாப் பண்டைத் தமிழ் இலக்கணமென்றும் அறிவேன். எப்படி? படித்துப் பாங்குறச் சுவைத்ததனாலா? அல்ல. படித்த பண்டிதர்கள், நான் கூறுகின்றேன். சிறிதும் கூச்சமின்றிக் கூறுகின்றேன். நான் தொல்காப்பியம் படித்ததில்லை என்று தமிழநின் தொன்மைப் பெருநூலைப் படிக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன். அதுபற்றி நான் சிறிதும் வெட்கப்படவில்லை. வெட்கப்படக் காரணமுமில்லை, வெட்கப்பட வேண்டியதுமில்லை. ஏன்? தமிழே தம் தனம் எனக் கருதும் பற்பல தமிழ்ப் பண்டிதர்களிலேயே அநேகர் தொல்காப்பியத்தைப் பழுதற நன்குணர்ந்தோர் இல்லை. ஏன“ கிடையாது? தொல்காப்பியம், பழம்பெரும் நூல் என்றும், இன்னும் பலவிதமாகவும் புகழப்படுகின்றதேயன்றி அது மக்களுள் சிற்றறிவுடைய மக்களுங் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாய் நாட்டிலே, மக்களுடைய மார்க்கட்டிலே வந்து நடமாடவில்லை. நடமாடும்படி செய்ய பெரும் புலவர்கள் விடுவதில்லை அதற்காக பெருமுயற்சி எடுப்பதில்லை என்ற காரணத்தைதான் கூறமுடியும்.

தொல்காப்பியத்தைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் பேரறிவாளர்கள், பெரும்புலவர்கள், பண்டித மணிகள், நாவலர்கள் முதலானோர் சிறு சிறு நூல்களாகத் திரட்டி, சிறு சிறு வெளியீடுகளாக, சிறு சிறு வருவாயுள்ளோரும் வாங்கி வாசித்து வாழ்க்கை வளம்பெற உறுதுணை செய்தல் வேண்டும். அது அவர்தம் கடன், அறிவுக்கேற்ற வேலை, ஆராய்ச்சிக்கேற்ற பணி.

நல்ல தீர்ப்பு
வாழ்க்கையில் நாம் சிறந்த பொருள்களை, வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது. ஓயாத உழைப்பும், சலியாத முயற்சியும் வேண்டும். சான்றாக முத்துக்களைப் பெறவேண்டுமானால் கடலின் கொந்தளிப்பையும், சுறா மீன்களின் உபத்திரவத்தையும் அகற்றி ஆண்மையோடு முத்துக் குளிக்க வேண்டும். கண்ணைப் பறிக்கும் பற்பலவித ஆபரணங்கள் செய்ய தங்கம் வேண்டுமானால், பாறையின் வெடிப்பிற்கும் மணலின் சரிவிற்கும் துணிந்த பல்லாயிரவர் பொற்சுரங்கங்களிலே அல்லும் பகலும் அனவரதமும் பாடுபட வேண்டியிருக்கின்றது. அதுபோலவேதான், ஏடுகளிலும், இலக்கியங்களில் சிறந்தவற்றை, நாட்டுக்கு நலம் பயக்கும் ஏடுகளை மனிதனை மனிதத் தன்மையுள்ளவனாக விளங்கத் தூண்டும் இலக்கியங்களை அறிவை அகலப் பரப்பும் இடுக்கண்களோடு இடறி மோத நேரிடும். பலரின் பரிதாபத்திற்கும் கேலிக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக நேரிடும். அவற்றை அறிவாளர் அறமென மதியார். எடுத்த காரியத்தை எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அஞ்சாமல் புகழ்ச்சிக்கும் பூசலுக்கும் மண்டியிடாமல் தொகுத்து முடிப்பர். அது மனிதர் மனிதருக்கு மனிதத் தன்மையோடு செய்யும் நேரிய செல். அதுதான் முறை நல்ல தீர்ப்பு.

திருக்குறள்
நந்தம் தமிழ்நாட்டில் தமிழ்மறையெனப் பல்லோராலும் போற்றப்படும் திருக்குறளைத் திருத்தமாக அறிந்தவர் மிகமிகச் சிலர். அத்தகையோரை விரல்விட்டு எண்ணிவிடலாம். பலர் அதன் உள்ளுறை என்னவென்பதையும் அறியார். பண்டிதர்களிலும் பலர் அதனைப் பெருமைக்காகப் படிக்கின்றார்களே ஒழியக் கருத்தூன்றிக் கற்பவர் மிகச் சிலரே. நானும் திருக்குறள் அறிவேன் என்று பேசிப் பெருமிதம் அடைவோர் பலராவர். அவர்தம் நிலைகண்டு இரங்கார் எவரே!

போராட்டம்
இலக்கியங்கள் ஏடுகள், மக்களின் மார்க்கெட்டிலே மலிந்து நடமாட வேண்டுமானால், இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பை மேட்டுக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்காரனும் ஏழையும் படித்துணரும் பாங்கிலே, எளிய நடையிலே இயல்பான இயற்கைக் கருத்துக் கூறும் கருத்தைக் கவின்பெறச் செய்யும் கருத்துக்கள் நிரம்பியும் அமைய வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் செய்துள்ள இலக்கிய சேவை இதற்கு நேர்மாறானது. அதனைப் பண்டிதரும் பகுத்தறிய முடியாத பண்புடனே சமைத்துள்ளனர். சிற்றறிவினர் சிந்தனையில் சிந்திக்கவும் கூடாத சிறப்புற்று விளங்குகின்றன இந்நாட்டு ஏடுகள்.

இன்றைய இலக்கியங்களிலே சிலவற்றிற்கு மூலத்தைவிட அவற்றின் விரிவுரைகளும், விருத்தியுரைகளும“ பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன. மற்றும் இக்காலப் பண்டிதர்கள் தம் காலத்தை இந்த உரை நல்லது அல்லது அந்த உரை நல்லது. இது இன்னாரால் கொள்ளப்படுவதால் சிறப்புடையது. அது அன்னோரால் கொள்ளப்பட்டமையால் ஒவ்வாதது என இத்தகைய போராட்டங்களிலே கழிக்கின்றனர். சிறிதும் நாட்டைப் பற்றிய நாட்டமின்றி கடமை பற்றிய கருத்தின்றி மற்றும் இத்தமிழ் பண்டிதர்கள் ஒருவர் மீதொருவர் பொறாமையும் பொச்சரிப்பும் பூண்டு ஒருவரையொருவர் தாக்கிப் பேசி எழுதும் இழிகுணத்தையே மேற்கொண்டுள்ளனர். எனது மதிப்பிற்குரிய தலைவர் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் கூறுவார். சில சமயம் இந்தத் தமிழ்ப் பண்டிதர்கள் ஒரு பன்னிருவர் சேர்ந்து ஒரு சிறு மாநாடு நடத்தினாலும், அருகே ஒரு ஸ்பெஷல் போலீஸ் வேண்டும். அவர்களிடை நிகழும் சண்டை சச்சரவை தீர்ப்பதற்காக என்பதுதான் அது. அது கேட்டு நாம் மனம் மிக மிருளுவதுண்டு. ஆனால் சென்ற திங்கள் காஞ்சியிலே பொங்கல் விழாக் கொண்டாடினர். நானும் போயிருந்தேன். திரு.மே.வீ. வேணுகோபாலன் என்பார் தலைமை தாங்கினார். நம் மதிப்பிற்குரிய நண்பர் திரு.மா. இராசமாணிக்கம் அவர்கள் சொற்பொழிவு ஆற்றுங்கால் ஓர் ஐயவினா தரப்பட்டது கூட்டத்திலுள்ள சிலரால். சிவம் என்னும் சொல் வடமொழியா? அன்றித் தமிழா என்பதே அவ்வையவினா. அதற்கு திரு.இராசமாணிக்கம் அவர்கள் சிவம் என்பது தனித் தமிழ்ச் சொல் தான் என்றார். தலைவர் திரு. வேணுகோபாலன் அவர்கள் தன் முடிவுரையில் சிவன் என்னும் சொல் தமிழல்ல. அது வடமொழிதான் என்று வன்மையாகக் கூறினார். உடனே இராசமாணிக்கனார் எழுந்து வேணுகோபாலரைப் பார்த்து அது தமிழ்ச் சொல்தானே. மற்றும் அது மறைமலையடிகள் கருத்தாயிற்றே என நவில வேணுகோபாலர் சபையோரைப் பார்த்து அந்த மறைமலையடிகள் கருத்திருக்கட்டும். இந்த வேணுகோபாலன் சொல்லுகின்றேன் சிவம் என்னுஞ் சொல் வடமொழிதான் என்று, என்று கூறிமுடித்தார். இவ்விதம் வழக்காடும் வழக்கத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு மீளாக் குழப்பத்தில் திளைக்கின்றனர். அவர்களின் பெருமையெல்லாம் பன்னூற் பாண்டித்ய மெல்லாம் மற்றவர்களின் நூல்களில் குற்றங் குறை காண்பதில் உளதென உள்ளத்தில் உறுதி கொண்டுள்ளனர். மற்றொருவர் சொல்லில், நூலில் காவியத்தில் குறைகாணாவிடில் தம் திறமை முற்றும் முதிர்ந்ததல்ல என்ற மூடநம்பிக்கையை மூல மந்திரமாகக் கொண்டிருக்கின்றனர். என்னே! இவர் தம் அறிவும், ஆற்றலும், படிப்பும் பண்பும் செல்லுமாறு? மற்றும் ஒருவர் எழுதும் ஏட்டிற்கும் மற்றொருவர் மறுப்பும் அம் மறுப்பிற்கு மறுப்பாகப் பிறிதொரு ஏடு எழுதுவதும் இந் நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாக நீடிக்கின்றன. சான்றாக இன்று தலைமை தாங்கும் அறிஞர் ஒரு நல்ல ஏட்டை நாட்டிற்கு நல்கினார் என நினைமின்.

மற்றும் அதில் யாதொரு குற்றங்குறைகளுமில்லை யெனவும் கொள்மின். அதிலே சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்தி இருக்கலாம். இலக்கிய ரசமும் காவியக் குழைவும் எதுகை மோனைகளின் இயற்கை யமைப்பும் சரிவர அமைக்கப்பட்டிருக்க லாம். கலைப் பண்பாடு மிகுந்திருக்கலாம். கருத்துப் பிழை கடுகத்தனையும் காணக் கிடைக்காதிருக்கலாம். என்றாலும் புலவர் எவரையேனும் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டால் அவர் அது முற்றும் நல்ல நூல் என்று தீர்ப்பு கூறார். குறையேதேனும் காண்டல் அன்றோ அவர்தம் அறிவுடைமைக்குப் பூஷணம், புலமைக்கு அணிகலன், ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டு. எனவே அவர் இந்நூலாசிரியர் செய்ததெல்லாம் சரிதான் ஆனாலும் நூல் முற்றிலும் அவருடைய சொந்தமன்று. முற்றும் இரவல். அதில் 100க்கு 20 பாகம் திருக்குறளையும் 20 பாகம் சிலப்பதிகாரத்தையும் 20 பாகம் சங்க நூற்களையும் 10 பாகம் மணிமேகலையையும் இவ்வண்ணமாக ஒரு நூலிலிருந்து ஒரு முத்தையும் மற்றொரு நூலிலிலிருந்து மாணிக்கத்தையும் பிறிதொரு நூலிலிருந்து பிறிதொரு வைரத்தையும் பொறுக்கிக் கோத்திருக்கின்றார் என்று அவர்பால் குற்றங் காண்பர். இதுவே தம் கடன் என்று பணியாற்றும் புலவர் பெருமக்களை என்னென்று இயம்புவது.

இலக்கியப் பண்டிதர்களும் பண்டித மணிகளும் பாவலர்களும் மற்றுமுள்ள கலைஞானிகளும் கலா ரஷகர்களும் நாட்டைப்பற்றி, நாட்டிலேவதியும், தமிழ் நாட்டிலே வாழும“ நாலரைக்கோடி மக்களைப் பற்றிக் கவலையுற்றார். எண்ணியும் பாரார். எவர் சொல்லையும் கேளார். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு கலப்பு உண்டா? இல்லையா? என்றும் தம் கண் கொண்டு பாரார். எ“லலாமறிவோம் யாம் என இறுமாந்து இன்புறுவர். நாட்டில் நடமாடும் ஏடுகளின் வழி, ஊட்டும் உணர்ச்சிகள் ஊடே, ஏற்றும் எண்ணங்களின் ஏவற்படிதான் நாட்டு மக்கள் செயலாற்றுவர் என்பது இவர் தம் சிந்தனைச் சுடரிலே சிறிதும் தோன்றுவதில்லை. நாட்டின் நிலைக்கேற்ற நிகண்டுகள் நிச்சயம் தேவை என்பதை நினைத்துப் பார்ப்பதும் இல்லை. நாட்டு ஏடுகள் எடுத்தியம்புவது என்ன? நகரிலே வீட்டிலே நடப்பது என்ன என்பதை ஊர்ந்து உணர்கின்றார்களில்லை.

வீரம் விளைக்கும் காவியங்களும் கற்பின் மாட்சி விளக்கும் கதைகளும் நீதி நடுநின்று நவிலும் நிகண்டுகளும் நந்தம் தமிழ்நாட்டிலே உண்டு என்று உள்ளங் குளிரும் புலவோர் அந்த நிகண்டுகள் அந்த வீரம் விளைக்கும் காப்பியங்கள் மக்களிடை, எத்துணை மலிவாக எளிதாக நிலவுகிறது. நிலவச் செய்கின்றனர் அல்லது மலிவாக எளிதாக இவ்விலக்கியங்களை மக்கள் கடைவீதியிலே நிலவும் நிலைதான் நாட்டில் உண்டா என்பதுபற்றிக் கனாக் காண்பதும் கடினம். கற்றோரின் கவிதாத் திறனும் ஆராய்ச்சி அறியும் புலமையின் பூஷணமும் சிந்தனையின் சிறப்பும் ஏற்றத்தின் எடுத்துக்காட்டும் மற்றும் எல்லாம் பழங்காவியங்களுக்குப் பதவுரை பகருவதோடு சரி. நிகண்டுகளுக்கு நித்தநித்தம் புத்தம் புதிய உரைகளும் விளக்கங்களும் அள்ளியள்ளித் தெளித்து அதனை எவரும் அறிய முடியாத அகராதி வைத்துத் தான் படிக்க நேரும் பரிதாப நிலைக்கு மக்களை இழுத்துச் சென்று மயங்க வைப்பதே மாண்பு. பழமையோடு அன்றாடம் தோன்றும் புதுமைக் கருத்துக்களை ஒட்ட வைத்து என்னே எந்தம் முன்னோர் மூதறிவு என்று பழமையில் புதுமை கண்டு பூரிப்படைவதே புலமையின் பொக்கிஷம் என்ற நிலைமை தான் இன்று நாட்டிலே நர்த்தனமாடுகின்றது. மக்கள் மருளும் படியான மகா கடின நடையையே பின்பற்றுகின்றனர். பழையனவற்றிற்குக் கூறும் தத்துவார்த்தங்களும் விளக்கங்களும் எளிதிலே புரியாதவை. அவற்றை விளங்கத் தெரிந்து விழைவோர் இப்புலவர் குழாத்தை அண்டுவதே ஆகாத காரியம் ஏன்? இலக்கியம், புலமை எனும் அரியணையிலே அரசோச்சும் செம்மல்கள் பால் ஏதோ சிறிதுதெரிந்தவர் செல்வது எளிதல்லவே! மற்றும் தம்மோடு ஒப்பாருடனும் மிக்காருடனுந்தான் வாதம் நிகழ்தல், ஆராய்ச்சியுரை ஆற்றல், வினா விடை யிறுத்தல் முறையென அம்மூதறிஞர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தடுத்துக் கேட்பது ஆகாது. அது ஆசான்-மாணாக்கன்-குரு-சிஷ்யமுறைக்குப் பங்கம் விளைக்கும் செயல். அடக்க ஒடுக்கமாய் ஆசான் அறிவுரை கேட்டு வாளாயிருப்பதே வணக்கத்திற்கறிகுறி. அன்றிக் குறுக்கே கேட்பது குதர்க்கம். குறும்புக்காரன் செயல் அது என்ற கருத்துடையவர்கள்தான் அவர்தம் சீடராகிச் செம்மையுறலாம். அவ்விதம் இருந்தும் தப்பித்தவறி எவனாவது சந்தேகம் சரிவரத் தெரியவில்லை, புரியவில்லை என்று கேட்டு விட்டால் அப்பா! உனக்கு அந்தப் பக்குவம் இதனை புரிந்து கொள்ளும் நிலைக்கு நீ இன்னும் வரவில்லை. அந்நிலையை அடைந்த பின் வா என வாயுறை வழங்குவர். எந்நிலை அந்நிலை என உசாவினால் உறுமுவர். அந்தோ! அந்நிலை அவனருளின்றிக் கிட்டாது. அவனை (கடவுளை)த் தொழு என்று திருவாய் மலர்ந்தருளுவர்.

பழமையில் மூழ்குதல்
பழையனவற்றிற்கு விளக்கம் விருத்தியுரை கூறுதலின்றி வேறு நூல்கள் இந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்ற முறையிலே, நடையிலே செய்து தர இக்காலப் புலவர்களால் முடியாதா? முடியும். ஆனால், அவர்கள் பழையனவற்றைப் புது மெருகிட்டுப் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதம் அடைவதே தம்செயற்கருஞ் செயலெனக் கருதுகின்றனர். மக்கள் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் இயற்றுவதற்கு மக்கள் வீரம் அடைவதற்கு, நீதியை நடுநின்று நோக்குதற்கு சாதி பேத சமயச் சண்டைகளை ஒழிப்பதற்கு, பொருளாதார மாறுபாட்டை மடிப்பதற்கு, புத்துலகம் சமைப்பதற்கு, கயமைத்தனமான கண்மூடி கபோதி பழக்க வழக்கங்களை மதத்தின் பேரால், சமயத்தின் பேரால், சாஸ்திரத்தின் பேரால், பழமையின் பேரால் பின்பற்றி வறுமையில் மடமையில் கண்மூடித்தனத்தில் மக்கள் மருண்டு, உழலும் மாயா மார்க்கத்தை வேரறுப்பதற்கு அவசியமானவற்றை அணைந்து பற்றி அல்லாததையகற்றி, எதையும் பகுத்துணர்ந்து பார்க்க வழிகோலும் ஏடுகள் இயற்றினார்களா? இயற்றுகின்றார்களா? இக்கால இலக்கியக் கர்த்தாக்கள் இனியேனும் இயற்றுவார்களா? நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லா வகையிலே நாட்டின் இனத்திற்கு இம்மியும் பயன்படாக் காவியங்களும் ஏட்டில் எடுத்தியம்புவது ஒன“றாயும் எண்ணத்திலே வேறாயும் அன்றாட வாழ்க்கையில் நாட்டில் நடப்பது பிறிதொன்றாயும் ஏடுகள் அøக்கப்படும்வரை இனம் எழுச்சியுறுமா? மக்களிடையேயுள்ள மடமைத்தனம் மறையுமா? ஏட்டின் மூலம் நாட்டின் நிலையறியலாம் மேனாடுகளிலே இது சர்வ சாதாரணம். அவ்விதம் நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும், கலை கலையட்டும். நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்மக்கள், மக்கள் வாழ்க்கை, அவர்தம் வாழ்க்கை வளன், நாகரிகம் இன்ன பிற யாவும் தெள்ளிதின் விளங்குதல் வேண்டும். அது ஏட்டோடு நிற்றல் சாலாது. நடைமுறையில் நடப்பதையே நவிலும் நூலாதல் வேண்டும்.

ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தின் நிலைக்கு, கருத்திற்குப் பொருந்தாவெனின் அது மாற்றப்பட வேண்டும். இன்றேல் அந்தந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். மக்கள் உள்ளதை உள்ளவாறு உணரச்செய்யும் ஏடுகள் தேவை. மடமையை மடியவைக்க வழிகோலும், வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்கள், கதைகள் தேவை. மக்கள் நிலையை உயர்த்த உறுதுணையாகும் ஏடுகள்தான் தேவை. இன்றேல் நமக்கு ஏடுகள் வேண்டாம். அவற்றால் இனம் இழிவுற வேண்டாம். மடமைக்கு வித்திடும் மாண்புள்ள மறைகள் வேண்டாம். ஏன்? பண்டை இலக்கியங்களில்லாமல் எந்த நாடும் முன்னேறவில்லையா? உலகத்தாரால் உயர்ந்த நாடு என்று உரைக்கப்படவில்லையா! இலக்கியத்தால்தான் நாடு முன்னேற முடியுமா? சான்றாக, துருக்கியும் ஆஸ்திரேலியாவும் பண்டை இலக்கிய பெருமை வாய்ந்த நாடுகள் அல்லவே! மக்கள் அங்கு மாக்களாகிவிட்டனரா, இலக்கிய மில்லாத காரணத்தால். கருத்துக்கினிப்பூட்டும் காவியங்களோடு காலத்துக்கேற்ற கதைகளும் நாளடைவில் தோன்றத் தான் செய்யும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்புள்ள நாடுகள் என்றும் நலியாது. நாட்டிலே சிறந்த ஏடுகள் எல்லையற்றவையிருப்பினும் அந்நாட்டிற்கும் அவ்வேடுகட்கும் சிறிதும் சம்பந்தமின்றிச் சதுர் ஆடிக் கொண்டிருந்தால் அந்நாடு நாளடைவில் நசித்துப் போகும். கலை நாகரிகம் யாவும் மறைந்தொழியும், பண்டைமாண் தமிழும் இங்ஙனம் தொடர்பற்றே செல்லுமானால் மடமைக்கு மண்டியிடும் எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏங்கித் திரியும் என்பது திண்ணம்.

சான்றாக இன்று பழம் பெரும் இலக்கியங்களைப் பெற்றுள்ள கிரீஸ், சைனா தேசத்தைப் பாருங்கள். அந்நாடுகளிலேயுள்ள ஏடுகள் மிகச் சிறந்தவை. தத்துவத்திலே தரணி முழுதும் ஆள்பவை. எனினும் அந்நாடுகள் சிறப்பற்றுச் சீர்கேடுற்றிருப்பதேன்? இலக்கிய மெல்லாம் இனத்தை மறந்ததுதான் காரணம். ஏடுகள் எல்லாம் நாட்டின் நிலையை எண்ணாத ஏமாளித் தனத்தினால்தான் என்றால் அது மிகையாகாது. முறை முற்றும் உண்மைகூட.

வாழ்வையும் தாழ்வையும் வளர்ப்பது ஏடே
நாடு மேன்மையுறுவதும் தாழ்வுறுவதும் ஏட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பொறுத்துத்தானிருக்கிறது. நாட்டிலே நலிந்தோர் மிகுதியாயினகாலத்து, ஏட்டில் அவர் தம் வறுமைக்கு காரணம் கூறாது, இழிவுக்கு மருந்து இயற்றாது, பூங்காவையும், கோயிலையும் இளங்காதலரையும், காதல் நெறியையும் அரசரையும் அந்த உலகத்திலே (தேவ லோகத்திலே) அநுபவிக்கப்போகும் இன்பத்தையும் பற்றி இணையிலாக காவியங்கள் எண்ணிறந்தன இயற்றப்படுமேல் அவ்விலக் கியங்களால் எவர்க்கு என்ன பயன் விளையும்? வறுமையால் வாடும் மக்கள் அதனைப் படித்தால் அவர்தம் வாட்டம் வாடுமா? அன்றி வளருமா? என்று சிந்தியுங்கள். தோழர்களே! அரசபோகம் அதிகமாகுமா? அன்றி அரசர் நாட்டு வறுமையாயினர் வாட்டம் போக்க நாட்டம் உறச் செய்யுமா? அதற்கு வழிகாட்டுமா? வாழ்வில் சலிப்பூட்டுமா? அன்றி முயற்சி திருவினையாக்கும் என்று முயன்று வாழ்க்கையை வளம்படுத்தி வாழ வகை சொல்லுமா? என்றுதான் உங்களைக் கேட்கிறேன்.

இந்நாட்டு ஏடுகள்
நம் நாட்டு இலக்கியங்களிலே காண்பது ஒன்று. நாட்டிலே நடப்பது பிறிதொன்று. நான் ஊர் சுற்றிச் சுற்றி களைப்பால் கால்வாய் ஓரங்களிலே களைப்பாறும்போதும், இரயிலிலே பிரயாணம் செய்யும் போதும் மற்றும் பலப்பல காலங்களிலும் சிந்தித்திருக்கின்றேன். சிந்தித்து வருகிறேன். பல நாட்கள் தூக்கம் வராமல் துன்பப்பட்டிருக்கிறேன். இந்த நாட்டு ஏடுகளில் காணும் கவின் பெறும் காட்சிகளை நாட்டிலே ஏன் காண முடியவில்லை? காணப்படாததற்கு காரணம் என்ன? என்பன பற்றித் துருவித்துருவி ஆராய்ந்து ஆயாசமடைந்த காலமுண்டு. இந்த நாடு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏமாளித்தனம் மிகக் கொண்டு இருப்பதே அடிப்படையான காரணமாகலாமோவென ஐயுற்ற காலமுமுண்டு.

நான் நம் நாட்டு ஏடுகளிலே படித்திருக்கின்றேன். நம் நாடு நன்செய்யாலும் புன்செய்யாலும் நாற்புறமும் சூழப்பட்ட தென்று நாடெங்கும் செந்நெல்லும் செங்கரும்பும் மற்றும் விளை பொருள்களும் மலிந்து கிடக்குமென்று ஆனால் ஊரிலே, நாட்டிலே, நகரிலே நாம் காணுவது நேர்மாறான காட்சிகள். படிப்பது பசிப்பிணி யறியா மக்கள் பார்ப்பது பசியால் மிக நொந்து மெலிந்து வாடி வதங்கும் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகள். ஏட்டில் காண்பது கண்ணுக்கினிய காட்சி தரும் கூட கோபுர மாடமாளிகைகள் அலங்காரமான ஆபரண வகைகள். இன்ன பிறவற்றை இன்பம் நுகரும் மக்கள். ஆனால் கண்ணால் காண்பது காதால் கேட்பது யாவும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கும் பரிதாப நிலைமை. நீர் நிலவளம் மிகுந்த செல்வமுடைத்தாய் சீர்பெற்றிலங்கும் நாடு என ஏட்டிலே நவிலப்படும் நாட்டிலே ஏன் இந்தத் தோற்றங்கள். எண்ண முடியாத ஏழைமக்கள், பசிக்கு உணவில்லாத பச்சிளம் குழந்தைகள் என்று கேட்கின்றேன்.

ஏன் பல இலட்சக்கணக்கானவர் சிங்கப்பூர், மலாய், நெட்டால் முதலிய நாடுகட்குத் தத்தம் பெண்டுபிள்ளைகளோடும் தன்னந்தனியராகவும் தாம் பிறந்த நாட்டைவிட்டு அல்லல்பட்டு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி கிடைக்காதா என்று வாட்டத்தோடு போகின்றனர்? இறைவனைப் பாடும் இலக்கிய கர்த்தாக்கள், பகலவனைப் பாடும் பண்டிதர்கள், காதலைப்பாடும் கலைவாணர்கள், இயற்கை எழிலையும், நட்பின் மேன்மையை நாடறியச் செய்யும் நாவலர்கள், பண்டைப் பெருமையைப் பாடும் புலவர் குழாங்கள், பரமன் திருவிளையாடலைத் திருத்தமாகப் பதிப்பிக்கும் திருக்கூட்டத்தார்கள் அய்யன் உலா அம்மை அந்தாதி பாடி எல்லாம் வல்ல எம்பெருமானை ஏத்தியேத்தித் தொழும் பணியிலேயே ஈடுபட்டு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடியை இழைத்து இழைத்துப் பாடிச் சுவைக்கும் பக்திமான்கள் மற்று எவராவது இந்த நாட்டிலே செல்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக்கோயில்கள் எழுப்பப்பட்டு அன்றாடம் ஆறுகால பூசை தவறாது நடந்துவர அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக் கிடக்க, இத்தனை குடும்பங்கள் மண்ணோடு மண்ணாய்ப் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சில் ஈரம் இருந்து கைவைத்துச் சொல்லத் துணிவுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா?

பாடிப் பாரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா? வறுமையை நீக்க வழி கோலினதுண்டா? வறுமை தாண்டவமாட, நாடு நலிந்து கொண்டே போக, அடிமைத்தளை அழுந்திக் கொண்டே செல்ல, பழையை பிடித்துக்கொண்டு, மக்கள் பக்குவமடைய, மனோ உறுதிகொண்டு வாழ்க்கையில் வழுக்காது விழிப்போடு செல்லச் சமுதாயத் தொண்டு செய்யும் ஏடுகள் தேவையாகும் நேரத்திலே, இதிகாச புராணங்களைப் பிடித்துக்கொண்டு அல்லியரசாணி மாலை பாடிக்கொண்டு, கம்பன் கா‘யரசனையில் கருத்தைச் செலுத்திக்கொண்டு மதத்திற்கு மாசுவரா வகையிலே, ஆண்டவன் லீலையை அப்பழுக்கின்றி உள்ளதுள்ளபடி நவிலும் நல்லெண்ணம் ஒன்றை மட்டும் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, காலத்திற்கும், கருத்திற்கும் நிலைமைக்கும் சுற்றுமுள்ள சூழ்நிலைக்கும் ஏற்ப ஏடுகளை உண்டாக்காது, பழமையில் கண்மூடி மோகம் கொண்டு இனத்தை இழிவு செய்யும் இலக்கிய ஏடுகளை ஏத்தி ஏத்தித் தொழும் இலக்கிய வீரர்களே! உங்கள் கடமை இதுவா? இது முறையா? அடுக்குமா? என்றும் நிலைக்குமா இந்த நீதி? நீங்கள் சிந்தியுங்கள், நாட்டுக்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லாவிட்டால் நாட்டு மக்களுக்கு வழி காட்டும் வகை யென்னவென்று, இனநலனை கருதா இலக்கிய பணியால் இனம் இன்புறுமாவென்று. இனத்திற்கு நலம் பயக்கும் ஏடுகளை இயற்றுதலே நம் கடமை. அதுவே நம் வேலை. அதுவே மனித சமுதாயத் தொண்டு முற்காலத்தில் தமிழன் தன்னலங்கருதாது உழைத்தான் தாரணியிலுள்ளோர் தம் நலனுக்காக என்பர். சூதும் வாதும் விருப்பும் வெறுப்பும் அறியான் தமிழன். மானமே பெரிதென மதித்தான் தமிழன். கப்பலோட்டி னான் தமிழன். கடாரம் வென்றான் தமிழன். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் காத்து வந்தான் தமிழன் என்று புலவர் பெருமக்கள் இஞ்ஞான்று பறை சாற்றுகின்றனர். உண்மை. மேலும் முற்கால தமிழர் வாழ்ந்த வகையை கூறுங்கால் நமது திரு.வி.கலியாணசுந்தரனார் நடையிலே கூறவேண்டுமானால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறலாம். இவ்வரிய உண்மைகளுக்கு நந்தம் பண்டைய இலக்கியங்களிலே தக்க சான்றுகள் உள. ஆராய்ச்சி வல்லுநரின் முற்ற முடிந்த முடிபுகளும் உள. 

மதம்பிடியா ஏடுகள்
நமது பண“டிதர்கள் இலக்கிய ஏடுகளை மதம் எனும் போர்வையால் மறைத்துள்ளார்கள். இந்த நாட்டு ஏடுகளால் நாட்டு மக்கள் பயனுறவேண்டுமாயின், இந்த நாட்டு மக்கள் நற்பண்புள்ள ஏடுகளைப்பெற்று வாழ்வில் ஏற்றமுற வேண்டுமானால், இந்த மதப்போர்வையைக் கிழித்தெறிய வேண்டும். இந்த மதமெனும் மாசு இலக்கியங்களைவிட்டு அகலாமுன்னம் நமக்கு நன்மை பயக்கும் நல்ல இலக்கியங்களோ ஏடுகளோ இல்லாமல்போகும். இலக்கியமின்றி நிலைத்திராத மதம் மதமல்ல. இது வெறும் மதந்தான். மக்களுக்குள்ள மதத்தின் எடுத்துக்காட்டுதான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இலக்கியமின்றி இலங்கமுடியா மதம் வேண்டாம் நமக்கு. மதமின்றித் திகழ வொண்ணாத இலக்கியமும் வேண்டாம் நமக்கு. இந்த மதப் போர்வையைப் போர்த்துப் போர்த்து மக்களை மடையர்களாக்கிவிடுகின்றனர் இந“நாட்டு ஏடுகள். இந்த ஏடுகளைப் படித்துப் படித்து மக்கள் வாழ்வை பெரிதென எண்ணாது, மகேஸ்வரன் முன் மண்டியிட்டு மாலை பாடினால் மட்டும் போதும். மண்டபங்கள் கட்டினால் மட்டும் போதும், திருவிழாக்கள் தினந்தினம் நடத்தினால் தான் நாட்டுக்கு நன்மை என்று நம்பி தம் அறிவு ஆக்கம், சொல், செயல், சிந்தனை, சிறப்பு, ஊக்கம்-உறுதி-உழைப்பு, கல்வி கேள்வி முதலிய எல்லாவற்றானும் முற்போக்கடைய முற்படாமல் அவைகளை, வீணே, ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைப் படிப்பதிலும், பாடுவதிலும், விழாக்கொண்டாடுவதிலும், காலத்தை, கருத்தைச் செலவிடுகின்றனர். ஸதல புராணங்களைப் படித்துப் படித்து ஸ்தோத்திரத்திலே மூழ்கிக் கிடக்கின்றனர்.

மக்கள் மனத்தாலும் நினைக்கொணாத மாசுமிக்க மடத்தனங்களை மகேசுவரனுக்கேற்றி மனங்குழைந்து மகிழ்கின்றனர். கடவுள் பேரால், சாஸ்திரத்தின் பேரால், சாதிமதப் போராட்டங்கள் சர்வ சாதாரணமாய் நாட்டில் நடைபெறுகின்றன. மக்களை மக்கள் மதியாத மனப்பாங்கும் ஒருவனை ஒருவன் தொடாத, தொல்லை தரும் தொட்டில் பழக்கமும், சாதிச் சண்டை, சமயச் சண்டை, கண்மூடி கபோதி வழக்கங்களும் மக்களிடையே மலிந்து கிடக்கக் காரணம் ஏடுகள் எல்லாம் எம்பெருமான் லீலைகளையும் இலக்கியமெல்லாம் இதிகாசங்களையும் புராணங்களெல்லாம் கடவுளரைப்பற்றிய மாயத்தனமான கதைகளையும் எடுத்தியம்பிமக்களின் மதியை மதம் எனும் மாசால் மறைத்து மடித்து மாபாதகஞ்செய்வதல்லால் வேறு காரணமும் உளதோ? கூறுமின்? இவ்விதம் கேட்பதில் குற்றமென்ன தோழர்களே! நாட்டில் நடைபெறும் நாசவேலைகள் எல்லாம், கடவுளை, மதத்தை முன்வைத்தல்லது மற்றெதன் வாயிலாய் நடைபெறுகின்றன. நாட்டிலே பலர் தீண்டாதார். நாட்டிலே அன்பே வடிவமாய் அனைத்துலகும் படைத்துக் காத்தழிக்கும் அண்ணலார் கோயில்கள் அநேகம். அந்தணருக்கு அவர் அண்மையிலே இருக்க இடம். ஆனால் அக்கோயிலைத் திருத்தமாய்ச் சமைத்த சிற்பிக்கு இடம் வெகு தொலைவிலே. நந்தி தேவர் அருகிலே. மேலும் தீண்டாதார் அருள் திரு ஆண்டவன‘ன் அருள் திருக்கோவிலைத் தீண்டவும் தகுதியற்றார். அத்தீண்டாத வரைக் கோவிலுக்குள் நுழையவைக்க வேண்டுமென விழைந்தால் அதற்கு மறுப்பு, வேத ஆகம சாஸ்திரங்களிலிருந்து தரப்படுகின்றது. இதனையும் ஐயங்கொள்ளாமல் அறியாமல் சிறிதும் ஆராய்ச்சி செய்யாமல் மதத்தால் அவர் தம் மதி மந்தமடைந்திருப்பதால் பெரிதும் மதிக்கின்றனர். இதுதானா ஏடுகளின் இணையில்லாத் தொண்டு.

ஏடுகளிலே மதம், அங்கும், இங்கும், எங்கும், என்றும், அநுதினமும் காட்சியளிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். மாற்றித்தான் தீரவேண்டும். நாம் பிற நாட்டு நூல் நிலையங்களைச் சென்று பார்ப்பின் ஆங்கு கற்றறிந்த, நல்லோரால் இயற்றப்பட்ட மத நூல்கள் மிக சிலவாகத்தானிருக்கும். அறிவுரை பகரும் ஏடுகள் எண்ணற்று மிளிரும். மதங்கலவாத ஏடுகளின் எண்ணிக்கை எண்ணற்கரியன.

ஒவ்வொரு வீட்டிலுமுள்ள படிப்பறையிலும் இத்தகைய நிலைமைதான் உண்டு. ஆனால் இங்கோ! இதற்கு நேர்மாறான நிலைமை. இந்த நாட்டிலே வீடு கட்டுவார். அதிலே பலப்பல அறைகளும் அமைப்பார். மாட்டுக் கொட்டைகை ஒருபால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் பெண்டிர் வீட்டுவிலக்கமானால் வதிய மற்றோர்பால் அறை அமைப்பர் வீட்டினிலே. மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மறவார். ஆனால் அறிவூட்டும் அறவுரை மிக்க ஏடுகள் நிறைந்த படிப்பறையைப்பற்றி பகற் கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப் படுத்தக்கூடியதன்று. ஆயினும் அது அவர் தம் சிந்தனையில் தோன்றாது. யாவும் மதப் பயித்தியத்தின் விளைவுதான் எனில் மிகையாகாது. வீட்டிலே ஏடுகள் என வைத்திருப்போர் நம் தமிழ் பண்டிதராவர். அவையும் அவர்தம் சொந்தமல்ல. கலாசாலை நூல் நிலையங்களிலிருந்து இரவலாகப் பெற்றவைதான். (தமிழாசிரியர்கள் தாமே ஏடுகள் வாங்கும் நிலையிலே அவர் தம் வருவாய் நிலை இல்லையென்பதை நாமறிவோம்) அவை அடுக்காக அவர் தம் மனையிலே மாண்புற விளங்கும். அவையாவும் மத நூல்களாகவே விளங்கும். மதம் கலவாத நூல்கள் யாதொன்றும் அவர் தம் மனையில் காணக்கிடைக்கா. நூல்களின் அருமை பெருமை தெரியாத பள்ளி நூல் நிலையங்களிலே அவை கிடப்பதைவிட நமது இல்லத்தில் இனிது வீற்றிருக்கட்டுமே என்று அவற்றைப் பூரிப்போடு போற்றி வைத்திருப்பர்.

இந்த மத நூல்கள் கடவுளரைப்பற்றிக் கூறும் கருத்துக்கள் முன்பின் முரண்பாடுடையனவாயுளவே. மூடனும் கண்டு ஏளனம் செய்யும் ஏமாற்றங்கள் நிறைந்துள்ளனவே! நீக்குரோவும்கூட தன் கடவுளுக்கு இத்தகைய அநாகரிக, அற்புத, ஆபாச லீலைகள் வேண்டாம் என்று வெறுத்துத்தள்ளும் அளவுக்கு ஆபாசங்கள் ஆசார சீலமென்றும் கடவுள் திரு அவதார லீலை யென்றென்றும் கடவுளரைக் கயமைக் குணத்திற்கு உட்படுத்தியுள்ளனவே இந்த ஏடுகள், இவை வேண்டுமா? அவசியமா? என்று எண்ணுங்கள். சிந்தியுங்கள். சீர்த்தூக்கிப்பாருங்கள் தோழர்களே!

இயற்கைக்குச் சோதனை
முழுமுதற் கடவுள், எம்பெருமான், கயிலைவாழ் கடவுள், பார்வதி சமேதரன், அம்மையப்பன், அர்த்த நாரீஸ்வரன் அருள் திருவிளையாடல்களைக் கேளுங்கள் அவருக்கு அருமருந்தன்னவன் இயற்பகை என்பான். சிவனடியார் கேட்டதையெல்லாம் இல்லையென்னாது அவர் கொடுத்து வந்தாராம். அவர் இவன்பால் மாறாக் காதல் கொண்டு அவனருளையே சிந்தித்து வாழ்ந்து வாராநின்ற காலையில் சிவனார் புறப்பட்டார். எங்கு? தமதன்பன் இரக்கும் சிவ நேசர்க்கு இல்லையென்னாதீயும் இயற்பகையின் பக்தியைப் பரிசோதிக்க. சிவனார் இயற்பகையிடம் சென்றார். சென்று இல்லையென்னாதீயும் இயற்பகை நீதானோ என்று கேட்டார். அதற்குத் தலைவணங்கிய இயற்பகையை நோக்கி ஆயின் உம் இல்லக் கிழத்தியை எம்மோடு அனுப்புக என்றார். இயற்பகையும் மிக மகிழ்ந்து தன் மனையாளை அவருடன் அனுப்பினார். இது முறையன்றெனத் தடுத்த முதியோரையும் அடாது என அறிவுறுத்திய அறிவாளரையும் கூடாது எனக்கூறிய சுற்றத்தாரையும் கொன்று குவித்து, இயற்பகையார் தம் மனையாளுடன் சிவனார் சிறிதும் தடையின்றிச் செல்லுமாறு செய்தார். பின்னர் சிவனார் தம் திருவுருவங் காண்பித்து அவரை ஆட்கொண்டனராம். என்னே! சிவனாரின் திறம்.

தோழர்களே! உங்கள் சிந்தனைக்குச் சற்று வேலை கொடுங்கள். இயற்பகை தன் வாழ்க்கைத் துணைவியைக் கூட மதத்தின்பால் தன் மதியை அடகு வைத்திருந்தமையால் பிறனுடனுடன் பிரியத்தோடு அனுப்பி வைக்கும் நிலையை அடைந்தார். மனைவியை வேண்டிய சிவனார் தானே நேரில் வந்து கேட்டனரா? இல்லை. பிராமணவடிவங்கொண்டு வந்து கேட்டார். யார்? நம்முடைய சிவனார். எப்படிப்பட்ட பிராமண வடிவம். தூர்த்தப் பிராமண வடிவங்கொண்டு வந்தார். இதற்குப் பொருள் திரு.வி.க.நடையிலே கூற வேண்டுமானால் காமாந்தகாரங்கொண்டு கட்டழிந்த தோற்றத்தோடு கூடிய பிராமணன் என்பதாகும். இத்தகைய பிராமணன் கேட்டபோது கூசாமல், எண்ணாமல், ஏதும் கேட்காமல் தம் மனையாளைத் தந்தார் இயற்பகையார். சிவனாருக்கும் வேறு சோதனை கிடைத்திலபோலும், இதைத் தவிர பக்தனைச் சோதிக்க, காமாந்தகாரங்கொண்ட பிராமணனுடன் மனைவியை, அவளை யேதுங் கேட்காமல் அனுப்பி வைத்த மாண்பு எதை விளக்குகின்றது? பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பதையல்லவா? கணவன் பக்தியைத் தானே பரிசோதிக்க வந்தார் கடவுள். தன்னை ஏன் பரிசோதிக்க வேண்டும். தான் ஏன் கணவனை விட்டு அகல வேண்டும் என்ற கருத்து அவர் தம் மனைவியாருக்கு தோன்றவில்லை போலும்! கணவனுக்கு மனைவி அடங்குதல் வேண்டும் என்பது கடமை என்று கொண்டாலும் அது கருத்துக் களங்கம் விளைத்தல் கூடாது.

சான்றாக, பாரதத்திலே ஐவருக்குந் தேவியான பாஞ்சாலியை எடுத்துக் கொள்வோம். அவளைப் பாண்டவர் சூதிலே தோற்றனர். வென்ற துரியோதனன் வீரமுடன் தம்பிக்கு கட்டளையிட்டான். துரௌபதையை சபைக்கு கூட்டிவா வென்று துச்சாதனன் துரௌபதையை அழைத்தான். அவள் தான் வீட்டு விலக்காயிருப்பதால் அரசவைக்கு வரலாகாது என்றாள். துச்சாதனன் அவள் தங்கள் அடிமையென்றும் தருமன் முதலானோர் அவளைத் தங்களிடம் சூதாட்டத்திலே பணயமாக வைத்துத் தோற்றமையால் அவள் தங்கள் சொற்படி நடக்க வேண்டுமெனவும் நவில்கின்றான். கணவனால் கண்ணியமாகப் பந்தயத்திலே தோற்கடிக்கப்பட்ட தான், கணவன் சொற்படி. கருத்துப்படி நடக்க கடமைப்பட்டவள் என்ற அறிந்த பின்னரும், அவள் கேட்கின்றாள் பாண்டவர் என்னை முன் தோற்றனரா அன்றித் தங்களைத் தோற்றபின் என்னை தோற்றனரா என்று. தங்களைத் தோற்றுப்பின் தன்னைத் தோற்றனர் என்பதறிந்தவுடன், தாங்கள் அடிமையாயின பின் தன்னைப் பந்தயம் வைக்க அவர்கட்கு உரிமையில்லை. ஆகவேதான் துரியோதனாதியர்க்கு அடிமையாக நியாயமில்லை என்று தன் கருத்தைக் கூறினாள். அரசவையில் முறையிட்டாள். பிறகு பலாத்காரமாக அவள் துகில் உரியப்பட்டபோது, கண்ணன் அருளை வேண்ட, சேலையவிழ்ந்த நேரத்திலே தட்டாது காட்சியளிக்கும் தனது இயற்கைக்கேற்ப மாதவனும் மங்கை மானங்காத்தான் என்று கதை சொல்லப்படுகின்றது. கடமையைக் கருத்தோடு சேர்த்து வாதிட்ட பாஞ்சாலியின் அளவுக்காவது, இயற்பகையார் தம் இல்லக்கிழத்தி பிராமணரை நோக்கி, ஐயா, என் கணவர்தான் உமக்கடிமை. நானல்ல, அவருக்குத்தான் சோதனை, எனக்கல்ல என்றாவது கூறியிருக்க கூடாதா?

சதி அநுசூயைக்குச் சோதனை
இன்றேல் சதி அநுசூயைபோல் சற்றுத் தம் அறிவால் அன்பர் (கணவன்) செய்கையையும், ஆண்டவனின் வேண்டுகோளையும் அலசிப் பார்த்திருக்கலாகாதா? என்று கேட்கின்றேன், அநுசூயா பதிவிரதா சிரோன்மணி. இரும்புக் கடலையைச் சிற்றுண்டியாக்கித் தரும் பாங்குடைய பத்தினி. விருந்தினரை உபசரிக்கும் உத்தமி. அவர் தம் பெருமை ஏழுலகங்களிலும் எட்டிப் பரவிற்று. அவ்வநுசூயையின் பெருமை தமக்கு இழிவு தருகின்றது. தம் சீரும் சிறப்பும் சிதைக்கின்றது என்று கருதினர் மும்மூர்த்திகளின் மனைவியர். அழுக்காறு கொண்டனர். ஆகவே தத்தம் துணைவரை ஏவி அநுசூயையின் பெருமையைக் குறைத்துச் சிறுமைப்படுத்த சொல்லினர். மூலக்கடவுளர் மூவரும் தத்தம் இல்லக்கிழத்தியின் ஏவலை சிரமேற்கொண்டு சென்றனர். அநுசூயையின் வீட்டிற்கு அவர் தம் அன்பர் (கணவர்) அயலே சென்றிருக்கும்பொழுது துறவிகள் போல மாற்றுருக் கொண்டனர். மங்கை நல்லாளை நண்ணினர். பிச்சைக் கேட்டனர். தருவேன் என்றால் மங்கை, சரி. எங்கள் இச்சைப்படி பிச்சை இடுவையோ என்றனர் மும்மூர்த்திகள். ஆகா, அவ்விதமே உங்கள் இச்சைப்படி பிச்சையிடுவேன் என்றாள் நங்கை. உடனே மூர்த்திகள் மூவரும் அங்ஙனமாயின் நிர்வாணமாக நின்று நீ எமக்கு பிச்சையிடுக என்றனர் வந்த விருந்தினரை உபசரித்தல் தன் கடமை. மேலும் அவர்கள் இச்சைப்படி பிச்சையிடுவாதகவும் உறுதி கூறியிருக்கின்றாள். எனினும் அநுசூயை அவர்கள் மீது ஐயங்கொண்டாள். அவர்களை நோக்கி நீங்கள் கேட்டவண்ணம் செய்தால் முறை ஆனால் அது நீதிக்கு முரண்பாடானது அறிவுக்கு ஒவ்வாதது என்று மறுத்தாள். உடனே கோபங்கொண்டனர் மும்மூர்த்திகளும். எங்களை யாரென்று நினைத்தாய். நாங்கள் மும்மூர்த்திகள். சொன்ன சொல்லை மீறினால் நாங்கள் சபிப்போம் உன்னை என்று உறுமினார்கள். மும்மூர்த்திகள் வந்து கேட்கின்றார்களே என்று மதி தயங்கவுமில்லை. பயங்கொள்ளவுமில்லை. மும்மூர்த்திகள் நீங்களல்ல, மும்மூர்த்திகள் என்று நவின்று நாட்டை நாசம் செய்ய வந்த வேடதாரிகளாகும் நீங்கள் அல்லது மும்மூர்த்திகளேயாயினும் அறிவு மழுங்கி ஆராய்ச்சி மடிந்து மானமற்றவராய் வந்திருத்தல் வேண்டும். இது கேட்கத் தகுந்தது. இது கேட்கத் தகுதியற்றது என்ற பாகுபாடு அறியா மூடர்களே! உங்களை நம்பேன் என்று கூறினாளாம். சொன்ன சொல் தவறாதிருக்க வேண்டுமல்லவா!

பின்னர் தனது கற்பின் மகிமையால் அவர்களைக் குழந்தைகளாக்கிக் கொண்டு பிச்சையிட்டதாக கதை சொல்கின்றது. அதன் உண்மை ஒருபுறம் இருக்கட்டும். கடவுளே நேரே வந்து கேட்டபோதும் தருமநியாயம் எடுத்துச்சொல்லி வாதாடின அந்த அளவு“ககாவது இயற்பகையாரின் மனையாள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாவரும் பக்தியின்பால் சித்தங் கலங்கிச் சீரழிந்துக் கிடந்தனர். மனைவியைத் தாவென் னும் மாண்புமிக்க மகேஸ்வரனையும் நிர்வாண பிச்சையிடு என்று கேட்கும் நீதியற்ற கடவுளையும் பாடும் நிகண்டுகளுமா நமக்குத் தேவை? வேண்டவே வேண்டாம்.

திருவிளையாடல்
இதே பரமசிவன் திருவிளையாடற்புராணத்திலே புரிந்துள்ள லீலையைக் காண்போம். தாய்ப் பன்றி இறந்துவிட்டது. பன்றிக் குட்டிகள் பசியால் பரிதவிக்கின்றன. கண்டார் முப்புரம் எரித்த பெம்மான். உளமுருகினார். உடனே தாய்ப் பன்றியின் உருவம் தாங்கினார் பன்றிக் குட்டிகளின் பசித் தீர்ந்தார். அவற்றைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். பின்னர் அவற்றைப் பாண்டியனிடம் கொண்டு சென்று ஆண்டு அவன் அவைக் களத்திலே வீற்றிருந்த மந்திரிகளை நீக்கி அவர்களுக்கு பதிலாக இவைகளை அங்கு அமர்த்தினான். அத்துடன் விட்டாரா? அம்மந்திரிமார்களின் பத்தினிகளையும் இவைகளுக்குப் பத்தினிமார்களாக அமைத்தார் என்று திருவிளையாடல் புராணம் செப்புகின்றது. இது நாடறிந்த உண்மை. இது தகுமா? முறையா? அறிஞர் ஆற்றும் அறமா? ஆண்டவன் செய்யும் அற்புதமா? ஆபாச வேலையா? அக்கிரமமா? மக்களை மடையராக்கும் வழியல்லவா? இதனைப் பாடும் ஏடும் வேண்டுமா நமக்கு? இதனால் யாது பயன் நாட்டுக்கு. நவிலுங்கள் நாட்டின் எதிர்காலப் பெரியோர்களே!

கடவுள் திருடுகிறார்
பிறிதொரு கடவுள் அவதாரமான கண்ணன் சிறு வயதிலே வெண்ணெய் திருடுகிறான். சற்றுப் பெரியவனான பிறகு பெண்கள் குளிக்குங்கால் அவர் தம் சேலைகளைத் திருடுகிறான். பின்னர் கோபியர்களோடு பற்பல லீலைகள் செய்கின்றான். அர்ஜுனனுக்கு அழகிய அணங்குகள் அநேகரைக் கூட்டி வைக்கிறான். பாரத யுத்தத்திலே சிறந்த ராஜதந்திரத்தைக் கையாளுகிறான். நாலு வருணங்களைப் படைத்தவன் நான் தான் என்று கீதை செய்கிறான். இத்தகைய கடவுளரை ஆதாரமாகக் கொண்டு ஒழுகினால் நம் மக்கள் மாண்புறும் காலம் என்றோ? மதிபெறும் காலம் காணக்கிடைக்குமா? அன்றி அறிவால் ஆராய்ந்து அறமெனப் பட்டதைத் துணைக்கொண்டு செல்வது நேர்மையா? செப்புங்கள் எதிர்காலச் செம்மல்களே!

மதத்தால் மயங்கிய மன்னவன்
கடவுளரின் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஏடுகளின்றி எடுத்துக் காட்டப் புகின் அஃது ஓர் எல்லைக் குட்படாது நீண்டு செல்லும். மதமானது சிறந்த இலக்கியங்களுடே செறிந்து விளங்குவதால் மதியிழந்த மன்னர்கள் எத்துணையர், எத்துணை அறிஞன் பணி நாட்டு நலன் கருதாமல் நாசமாயிற்று. நம் நாட்டிலே ஓர் மன்னன் வேட்டைக்குச் சென்றான். வழியிலே ஒரு குளம். அக்குளத்திலே தவளைகள் கரசர என்று ஓசையிட்டவண்ணமாயிருந்தன. அரசன் மகா சிவபக்தன். சிவ புராணங்களைக் கரைகண்டவன். அவன் காதிலே இந்த கரகர என்ற ஓசை அரகர என்று வீழ்ந்தது. வீழலும் அம்மன்னவன் மனம் மிக நொந்தான். ஏன்? சிவநேசர்கள் குளத்தில் குளிரினால் வாடுகின்றார்களே என்ற ஏக்கத்தால், உடனே காவலாளர்க்குக் கட்டளையிட்டான். அரண்மனைப் பொக்கிஷத்தை குளத்தில் கொண்டு வந்து போடுங்கள். அவை அடியார்கட்கு உபயோகப் படட்டும் என்று தவளைகள் சப்தத்தையும் தவறாகக் கேட்டான். வேந்தன் தவளைக்கட்குப் பொன்னும் மணியும் உதவுமா என்று பகுத்துணர வில்லை. அந்தப் பொன்னும் மணியும் நாட்டிலே நலியும் ஏழைகளின் ஏக்கத்தை எத்துணை எளிதில் போக்கும் என்பதையும் எண்ணினானில்லை குளத்தில் போடும் பொருள் எவர்க்கும் எத்துணையும் பயன்தராது என்பதறியாது மதமெனும் மயக்கத்திலாழ்ந்து பக்தியெனும் பரிதாப வலையில் சிக்கி அறிவை அடகு வைத்துப் பொருளைவாரி மறைந்தான். இதைக் கேட்கும்போது ஏடுகளில் பார்க்கும்போதும் நமக்கு நகைப்புதான் வருகின்றது. அம்மன்னன் பால் இரக்கமும் உண்டாகின்றது. மதப்பற்றினால் மன்னன் மதியிழந்ததைப்போல் மன்னன் வரலாற்றை ஏட்டிலே காணும் நாட்டு மக்கள் எத்தனை பேர் இன்னும் மதியை மதத்தின்பால் மண்டியிட்டுப் பறிகொடுப்பர் என்ற எண்ணம் எமைவாட்டுகின்றது. எனவே இத்தகைய மதம் கலந்த அநாகரிக, ஆபாச, புராணங்கள் நிறைந்த கதைகளைப் பாடுதற்கே ஏடுகள் பயன்படுமானால், அறிவு, ஆராய்ச்சி என்றாவது நம் நாட்டில் உதிக்குமா? ஆண்மை பெருகுமா? ஆற்றல் அதிகரிக்குமா? வாழ்க்கையி“ல் வளம் காண்போமா? வழங்குங்கள் இதற்கோர் நல்ல தீர்ப்பு வாலிபத் தோழர்களே!

இத்தகைய ஏடுகள் மதியை வெருட்டி மனதை விதியில் இருத்தி மக்கள் அறிவை மயக்கி, ஆண்டவன் அருளால் அனைத்தையும் அரைக் கணத்தில் பெறலாம் என்ற ஆசையைக் கிளப்பி மக்கள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முழு மூடர்களாக்குகின்றனர். அதுவுமின்றி நாம் இலக்கியங்களிலே, ஏடுகளிலே மதத்தைப் புகுத்தி ஆண்டவன் திருவிளையாடல்கள் என்றும், அவதாரங்கள் என்றும் அறிவுக்குப் பொருந்தாதவற்றைக் கூறி கடவுளருக்குக் கயமைத்தனத்தையும், கபோதிக் குணத்தையும் ஆபாச ஆசாரங்களையும் ஏற்றி ஏளனத்திற்குள்ளாக்குகின்றோம். கடவுளை மதிகெட்டவனாகக் காட்டுகின்றோம். இவைகளைத் தவிர வேறு ஏடுகளை இக்கால இலக்கியப் பண்டிதர்கள் ஏன் செய்து தரலாகாது?

தற்கால இலக்கியக் கர்த்தாக்கள்
நமது சேதுப்பிள்ளையவர்கள் எழுதுவது வேலும் வில்லும் அதற்கு அடுத்தாற்போன்று, சேதுப் பிள்ளையவர்கள் தம் நூலிலே கம்பராமாயணத்தையும் சுந்தரபுராணத்தையும் சரிவரக் கையாளவில்லை என்று வேறு நூல் ஒருவர் இயற்றுவர். சோமசுந்தரபாரதியாரின் ஏடு தசரதன் குறையும் கைகேயியின் நிறையும் என்பது திரு.வி.க.வின் ஏடு பெரிய புராணத்திற்குப் புத்துரை. மறைமலையடிகளார் நூல் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி பிறிதொரு புலவர் இயற்றுவார் இதிகாசங்களிலே காணும் நீதிகள் என்று இவ்விதம் பழையபத்தாம் பசலியையே திரும்பத்திரும்ப வெவ்வேறு நடையில் கொண்டு வருவதால் நாட்டுக்கு வரும் நன்மை என்ன? நன்கு சிந்தியுங்கள் அறிவு கொண்டு ஆராயுங்கள் கலை பயிலும் காளைகளே!

நமது தற்காலப் புலவர்கள் பண்டையத் தமிழ் மன்னர்கள் வீரத்தை விளக்குங் கவிதைகளை ஏன் பாடக்கூடாது? செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையையும் ஆரிய மன்னான கனக வியசரைப் போரில் வென்ற வீரத்தையும் அவர் தம் முடியினிலே கண்ணகி சிலைக்குக் கல்த்தூக்கி வரச்செய்த பெருமையையும்பற்றி ஏன் ஒரு பரணி பாடக்கூடாது? ஏன் கடாரம் வென்ற தமிழரசர்களைப்பற்றி ஓர் காவியம் இயற்றக் கூடாது? பர்மா வென்ற பராந்தகனைப் பற்றி ஏன் ஒரு புகழ்மாலை இயற்றக்கூடாது. அறிவுபற்றியும், ஆராய்ச்சியின் மேன்மைபற்றியும் அன்றாட வாழ்க்கை வளம்பற்றியும் பலப்பல ஏடுகள் ஏன் எழுதக்கூடாது? இவர்களால் முடியாதா? முடிக்கும் ஆற்றல் இல்லையா? முடியும். ஆனால் முயலுவது கிடையாது. அவர்கள் இத்தகைய நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பூட்டும் பெரும் பணியிலே சிந்தை செலுத்தினால் நாடு நாளடைவில் புத்துணர்ச்சி பெற்றுப் புது வாழ்வு பெறும். பாடவேண்டுமென்றால் பரமன் திருவிளையாடல்களும், பூஞ்சோலைகளும், கோயில்களும் ஸ்தல மகிமைகளுந்தான் கிடைக்கின்றனவா? அன்றாட கஞ்சிக்கு அலையும் தோழனைப்பற்றி உள்ள முருகப் பாடிப் படிப்பவர் மனதில் இரக்கமுண்டு பண்ணலாமே நாட்டிலே உள்ள செல்வம் ஒரு சிலருக்கு மட்டும் பயன்பட்டு, பலருக்குப் பயன்படாது, கோயில்களிலும், மடங்களிலும், ஜமீன்தார்களிடையும் முடங்கிக் கிடப்பதை ஊரறியச் செய்யலாகாதா? நாட்டிலே ஆண்டி-அரசன், ஏழை- பணக்காரன், பறையன்-பார்ப்பான் என்ற மாறுபாடுகளின் இழிதன்மகைளை ஏடுகளின் மூலம் எடுத்தியம்பி மக்களிடை மறுமலர்ச்சிக்கான கிளர்ச்சி உண்டுபண்ணலாகாதா?

இவைகளை விடுத்து பக்தனைப் பரிசோதிக்க மனைவியையும், பிள்ளைக் கறியையும் கேட்கும் புண்மைக் குணத்தைக் கடவுளர்க்கு ஏற்றி அதனைப் பாடுவதால் நாட்டிற்கு நன்மை யாதும் உளதோ? இவைகள் நம்மைக் காட்டுமிராண்டி காலத்திற்கு ஈர்த்துச் செல்லவில்லையா? இதனை முதன் மந்திரி சர்ச்சில் கேள்விப்படின் நமக்கு கி.பி.2045 லாகிலும் சுதந்திரம் வழங்க எண்ணங் கொள்வாரா?

இத்தகைய கதைகளும் புராணங்களும் ஏடுகளும் இலக்கியங்களும் மக்களை கடவுளர்க்குத் திருப்பணி செய்வதிலும் திருவிழாக்கள் செய்வதிலும் அளவிறந்த பணத்தைச் செலவிட ஊக்குகின்றன. இதனால் ஏழை மக்கள் பணம், கல்வி, கேள்வி முதலியவற்றிற்குச் செலவிடப்படாமல் ஆச்சார அனுட்டானங்களுக்கும் ஆண்டவனின் நிவேதனத்திற்கும் அநாவசியமாகச் செலவிடப்படுகின்றது. அறிவு மழுங்குகின்றது. ஆராய்ச்சி குன்றுகின்றது. மடமை மலருகின்றது. மதி மடிகிறது. செல்வம் குறைகிறது. சமய சாதிச் சண்டைகள் வளருகின்றன. அமைதி அழிகின்றது. நாடு நலிகின்றது. நாட்டார் நாசமாகின்றனர். கலை, இலக்கியம், காவியம், யாவும் பண்டைய கலைகளோடு இலக்கியங்களோடு, காவியங்களோடு நின்று விட்டன. அவைகளைச் சுவைப்பதுதான் நன்று. அதுவே போதும்.

தமிழ்நாடு போனாலும் போகட்டும், கம்பராமாயணமே வேண்டும் என்று நாட்டுப்பற்றின்றி கலைப்பற்றே (அதிலும் நாட்டோடு முற்றிலும் தொடர்பற்ற ஏடு) பெரிதும் மிகுந்து பழைய பத்தாம் பசலியையே பெரிதும் பிடித்து நிற்பாராயின், நான் உறுதியாகச் சொல்லுகின்றேன். அப்பண்டிதர்களின் காலமும் இத்துடன் முடிவடைந்தது என்று ஏன் இன்று உலகின் பலப்பல பகுதிகளிலும், ஏடுகளின் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. சான்றாக கசபியான்கா என்ற சிறுவனின் கதையை எடு“த்துக்கொள்வோம். கசபியான்கா என்னும் சிறுவன் தன் தந்தையோடு கப்பலில் சென்றான். கடல் நடுவே கொடிய கப்பற் சண்டை நடந்தது. கசபியான்காவின் தந்தையும் ஒரு கப்பற் சண்டை நடந்தது. கசபியான்களின் தந்தையும் ஒரு கப்பல் தலைவன். அவன் தன் மகனைக் கூப்பிட்டு ஒரிடத்தில் நிறுத்தி, குழந்தாய் நான் அழை“குமளவும் இவ்விடம் விட்டு நகராதே என்று உரைத்து ஏதோ அலுவலாக அப்பாற் சென்றான்.

சிறுவன் கசபியான்கா நல்ல பிள்ளை. தந்தை சொல் தட்டாத தனயன். கடமையை உணர்ந்த பாலன். சண்டையில் சைபியான்காவின் தந்தை உயிர் நீத்தான். இது இச்சிறுவனுக்குத் தெரியாது. திடீரென்று கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலில் உள்ளோர் யாவரும் தமது உயிரைப் பெரிதென மதித்து பலவாற்றானும் உயிர் தப்பி ஓடினர், பாலன் கசபியான்காவை பலர் அழைத்தனர். அவன் போக மறுத்தான். தீ நாற்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டது. அதுகாலையில் பலரும் அவனை வற்புறுத்தினர் உடன் வருமாறு. அவன் தன் தந்தையின் கட்டளையை மீறி நடக்க முடியாது என்று உறுதியுடன் கூறிவிட்டான். அனைவரும் போய் விட்டனர். கசபியான்கா, தந்தாய்! தந்தாய்! நான் போகலாமா, போகலாமா என்று பன்முறை கூவினான். தகப்பன் உயிரோடிருந்தாலல்லவா பதில் கிடைக்கும். எனவே தந்தை சொல்லைத் தலைமேற்றாங்கி அவ்விடத்திலேயே நின்று தீயில் மடிந்தான். தந்தையின்பால் அவன் செலுத்திய அன்பைக் கண்டு பலரும் அவனை போற்றினர். கவிகள் அவனை ஏத்தி ஏத்திப் பாடினர். அப்படிப்பட்ட கசபியான்காவைப் பற்றி இந்த நாளிலே ஏடுகளிலே பொறிக்கும் பொழுது கசபியான்கா தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கடமையைக் கடைப்பிடித்து நடந்து மடிந்தான். ஆனாலும் அவன் தன் கடமையைக் கடைபிடித்தானேயன்றிக் கருத்தோடு ஒன்றிச் செய்தானில்லை என்று கூறப்புறப்பட்டிருக்கிறது. தீயின் வேகத்திலே கடலின் கொந்தளிப்பிலே கப்பல் உடையும் ஒசையின் நடுவிலே தந்தையின் மறுமொழி தனக்கு எட்டாதிருக்கலாம். அன்றித் தன் கூக்குரலும் தந்தைக்கு எட்டாதிருக்கலாம். அன்றி அத்தகைய போராபத்தினின்றும் தப்ப தந்தை சொல்லை மீறினால் குற்றமில்லை யென்று கொண்டிருக்கலாம், கசபியான்கா கடமையைத்தான் கவனித்தான், கருத்தோடு கவனிக்கவில்லை. கருத்துக்கே களங்கம் வந்து விட்டதே என்று முகவுரை தீட்டுகின்றார். அதற்கு மேனாட்டிலே இத்தகைய முற்போக்கான முறைகள் கையாளப்படுகின்ற காலையில் நம் நாட்டில் பழைமை பழைமை என்று பாடித் திரியும் பண்டிதர்கள் தம் பரிதாப நிலைகண்டு நாம் இரங்காது வேறென்ன செய்வது!

கம்பர் செய்த தொண்டு
கம்பராமாயணத்திலே கம்பன் கிட்கிந்தையை வருணிக்குங்கால் அதனையொரு சிறந்த நாடாகக் காண்கின்றான். ஆங்கு வசதியும் மக்கள் சகல கலாவல்லவர்கள் என்றும் சாஸ்திர விற்பன்னர்கள் என்றும், நீதி தவறாது ஆண்டவர் என்றும், பலப்பல ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் மிக அழகுள்ளவர்கள் என்றும், பேசுவதில் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் கூறி முடிவில் அவர்கள் குரங்குகள் விலங்குகள் என்று கூறுகின்றான். இது முன்னுக்குப் பின் முரண்பாடல்லவா!

மக்களின் கருத்திற்கேற்ற நற்குணங்கள் யாவும் படைத்தவர்கள் என்று கூறிய அதே வாயால் அவர்களைக் குரங்குகள் என்று அடுத்தாற்போன்று கூறுவது முறையா? அறிவுடையார் ஒப்பும் உம்மையாகுமா? நேர்மையா? மற்றும் கம்பன் இலங்கையை வருணிக்கும்பொழுது மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்த நகர் என்று கூறுகின்றான். கற்றார் வேதேமோதினர், நகரெங்கும் ஆடல் பாடல் நிரம்பியிருந்தது. ஆங்காங்கு வீணை இசைக் கருவிகளின் ஓசை எழுந்தது என்று சிறப்பாகக் கூறுகின்றான். ஆனால் அங்கு வதிந்தவர்கள் இரக்கமில்லாதவர்கள் என்று கூறுகின்றான். ஆண்கள் மகா கோர உருவினர். நீண்ட வாயும், கோரைப் பற்களும், செம்பட்டை மயிரும், கரிய மேனியும், பெரு உடலும் கொண்டு விகாரமாய் விளங்கினர் என்கின்றான். ஆனால் பெண்களைப் பற்றிக் கூறும்பொழுது மட்டும் அவரது இயற்கையான பெண்களைப் பாடுவதிலுள்ள தனி விருப்பப்படி அழகிகள், அந்தர மாதர்க்கு ஒப்பானவர்கள் என்று கவி தீட்டியிருக்கிறார். ஆண்கள் அழகற்ற விகார உருவினர். ஆனால் பெண்கள் அழகுள்ள அணங்குகள். இதிலே ஆண்-பெண் பொருத்தம் உண்டா. அன்றி நம் நாட்டுத் தற்கால முறைப்படி, காதலின்றிக் கணவன் மனைவியராகச் சேர்க்கப்பட்டாலுங் கூட அவர்கட்குப் பிறக்கும் ஆண்கள் எல்லோரும் அழகற்ற அநாகரிகர்களாயும், பெண்கள் எல்லோரும் அழகுமிக்க அணங்குளாவும் விளங்குவர் என்று சிந“தித்துப் பாருங்கள். இத்தகைய கருத்துக்கள் காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு மாற்றப்பட வேண்டுமா? என்று ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் அறிவிற்கு வேலை தாருங்கள் தோழர்களே!

பழைய ஏடுகளில் நீதிகள் நிறைந்திருக்கின்றனவாம். நீதியின் நேர்மை நடுநிலைமை நவிலப்படுகின்றனவாம். சான்றுகளும் பல பகரப்படுகின்றன. அறவுரை அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றது. உண்மை என இக்கூற்றைக் கொண்டாலும் நல்ல நீதி கொண்ட ஏடுகள் எவையெனத் தெரிந்து கோடல் எளிதன்று. நீதியின் தத்துவம் ஓர் நூலில் ஒருவிதமாயும் பிறிதொன்றில் பிறிதோர் வண்ணமாயுமிருக்கின்றன. அவற்றில் நீதியைப் பற்றியே மக்கள் வாழ்க்கைக்கு வேண்டியனவற்றையே கூறும் நூல் திருக்குறளாகும். எத்தேயத்தார்க்கும் எக்குலத்தார்க்கும் ஒப்ப முடிந்த ஓர் நீதி நூலாகும். சிற்சில இடைஞ்சல் நீக்கப்பட்டின்.

மதப்பித்தர்கள் செயல்
இத்தகைய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எம்மதத்திலும் சேராத இயல்பினராய்த்தான் இருந்திருக்க வேண்டும். அவரையும் இம்மதப்பித்தர்கள் ஏடுகளிலே திருவள்ளுவர் மதவாராயச்சி என மகுடமிட்டு ஒவ்வொருவரும் அவரைத் தத்தமது மதத்தைச் சேர்ந்தவரெனக் கொள்கின்றனர். கூசாமல் கூறுகின்றனர். சான்றுகளாக திருக்குறளிலிருந்து சிற்சில சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக்காட்டி இச்சொல், இச்சொற்றொடர் எந்தம் இறைவனைக் குறிக்குமாகலின் தமிழ் மறையை மலர்வித்த வள்ளுவர் எந்தம் மதத்தைச் சார்ந்தவர். என்னே எந்தம் மதத்தின் மாண்பு! திருவள்ளுவரே கொண்ட தமதம் எம்முடைய மதமெனில் அதன்பால் குற்றங்காணலுங் கூடுமோ? என்று எண்ணி இறும்பூதெய்துகின்றனர். என்னே இவர்தம் இழிமதி. மதம் கலவாத ஏடு ஒன்றாகிலும் இருந்து மக்களுக்குப் பயன்படும் நிலையிலிருந“தால் அதனை மதப்புரட்டிலே சிக்க வைத்து மக்கள் அறிவைப் பாழ்படுத்துகின்றார்களே! இவர்தாம் அவைகளிலுள்ள நீதிகளைச் சுவைப்பவராம்! நேர்மையை அநுபவிப்பவராம் என்னே இம்மதங்களின் மீளாத் தொல்லை! என்று தணியும் இந்த மடமையில் மோகம் மாந்தர்க்கு அன்றே நாடு நலம் பெறும் நன்னாள்.

நீதி நிலையுடையதா?
தவிர, நீதி நீதி என்று கூறுகின்றார்களே, நீதி என்றும் நிலையுடையதா? நிகண்டுகட்குக் கட்டுப்பட்டு நிற்கக் கூடியதா? அல்லவே அல்ல. ஒரு காலத்தில் நீதி மற்றொரு காலத்தில் மாற்றப்படலாம் காலத்தையும் கருத்தையும் கொண்டு. நீதி நிலையற்றது நிலைமைக்கு ஏற்றபடி மாறும். இதுதான் நீதி என்று அறுதியிட்டு கூற எவராலும் முடியாது. மறுமுறையும் கூறுகின்றேன் ஏடுகளிலே எழுதப்பட்ட நீதிகள் என்றும் நிலையுடையனவல்ல என்று எந்தெந்தச் சமயத்தில் மாற வேண்டுமோ மாற்றப்பட வேண்டிய மனப் பண்பு மக்களிடை மலர்கின்றதோ மாற்றித்தான் தீர வேண்டும் என்ற நிலைமை நாட்டில் நீடிக்கிறதோ அன்றெல்லாம் அது மாறும். மாறிக்கொண்டே வரும். மாறிக்கொண்டே போகும்.

சான்றாக ஏ.ஆர்.பி.விதிகள் நகரிலே ஏற்படுமுன்னர் வண்டிகட்கு ஒளிமிகு விளக்குகள் போட வேண்டியது அப்போதைய காலத்திற்கு, நிலைமைக்கு, கருத்துக்கு ஏற்ற நீதி. ஆனால் ஏ.ஆர்.பி. விதிகள் நடமாடத் தொடங்கின. பின்னர் மங்கலான, முற்றும் மறைக்கப்பட்ட விளக்குகளுடனே வண்டிகள் நடமாட வேண்டியது என்பது இப்போதைய காலத்திற்கு, கருத்திற்து, நிலைமைக்கு ஏற்ற நீதி. வலுத்தவன் இளைத்தவனை ஏய்த்தது. ஒரு காலத்திலே நீதி. அது இக்காலத்திலும் செல்லுமா?

நீதியைக் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப நடுநின்று வழங்கும் ஏடுகள் தோன்றித்தான் தீரும். அத்தகைய நூல்களை இந்நாட்டு நாவலர்கள், பண்டித மணிகள், சொற் செல்வர்கள் செய்து தரல் வேண்டும். அதுவே முறை. பழைய நீதிகளிலும் இன்றைக்கும் இயைந்து வருவனவற்றை வேண்டா மென்று எந்தப் புல்லறிவாளனும் புகலான். எனவே என் சொற்கேட்டு எவரும் மருள வேண்டாம். மனம் வைத்து மக்களுக்குப் பணிபுரியும் ஏடுகள், இனப்பற்றை மிக்கூட்டும் இலக்கியங்கள், கடவுளைக் கயவனாக்காத கதைகள், வாழ்க்கை வளமுற வழிகாட்டும் கயவனாக்காத கதைகள், வாழ்க்கை வளமுற வழிகாட்டும் வாழ்க்கைச் சரிதங்கள், வரலாறுகள், கற்பனைகள், காவியங்கள் செய்து தர முன்வாருங்கள், வாருங்கள் என்று வரவேற்கின்றேன் வாலிபத் தோழர்களே! என் சொல்லைக் கேளுங்கள். கேட்டுச் சிந்தியுங்கள். செயலுக்கு வேண்டுவதா? செம்மைப்பட வழி காட்டுமாய காட்டும் என்று கருத்தில் பட்டால் கலங்காது போரிடுங்கள். வெல்வீர் விரைவிலே. வீழ்த்துவீர் வீணரை, நாட்டுக்கு நலம் பயப்பீர்! என்று உங்கள் சிந்தனையைச் சற்றுத் தூண்டிவிடுகின்றேன். சீர்தூக்கிப் பாருங்கள். அறிவினால் ஆராய்ந்து பாருங்கள் அறம் எது என்று அதன் வழி நடவுங்கள். நலன் எய்துங்கள்.

உலகிலே உத்தமர்களின் ஓயா உழைப்பினாலும் அறிவாளிகளின் குன்றாத ஆராய்ச்சியாலும் உண்டாக்கப்படும். விஞ்ஞானக் கருவிகள் ஆகாய விமானங்கள், பறக்கும் குண்டுகள் முதலிய இன்னபிற புதுமைகள் எல்லாம் நம்முடைய பண்டைய புராண இதிகாசங்களிலிருந்து காப்பியடித்தவை என்று கழறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளல் போன்ற ஏமாளித்தனம் அல்லவா! நாட்டிலே ஆகாய விமானம் ஆகாயத்திலே பறக்கும். கிராமத்தான் அதுகண்டு அதிசயமுறுவான். ஆ! ஆ! இந்த வெள்ளைக்காரன் என்ன கெட்டிக்காரன் என்பான். அத்தருணம் அண்டையிலே இருப்பார் ஓர் இராமநாத சாஸ்திரிகளோ! அல்லது சோமசுந்தர குருக்களோ! எவராவது உடனே உரைப்பார். என்ன அப்பா பெரிய அதிசயத்தைக் கண்டுவிட்டாய். நம்முடைய புராணத்திலே இல்லாத ஆகாய விமானமா? இராமாயணத்திலே புஷ்பக விமானத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நேற்றுக்கூடக் கேட்டாயே, அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய். அந்தக் காலத்திலே இல்லாத விமானமா? எல்லாம் நம்முடைய வேதங்களிலிருந்து காப்பியடித்தவைதான். இன்னும் ஒரு சிறிய விஷயம் பார். அதோ பறப்பது என்ன? கருடன்.
கருடன் என்ன நேராகப் பறக்கிறது. பார்ப்பதற்கு ஆகாய விமானம் போல இல்லையா? அந்தக் கருடனைப் பார்த்துதான் அவனும் (வெள்ளைக்காரனும்) காப்பியடித்திருக்கிறான். அந்தக் கருடன் மெக்கானிசம் தான் அந்த ஏரோப்பினேனில் இருக்கின்றது. வேறென்ன? என்று வாய் வேதாந்தம் பேசுவர். அப்படியா சங்கதி நான் என்னுமோண்ணு பார்த்தேனே என்று ஒரு அலட்சியப் பேச்சு பேசிவிட்டு வழி நடப்பான். கிராமத்தான் இத்தகைய உரையாடல் ஊரிலே, நாட்டிலே இல்லையென யாரும் இயம்ப முடியாது. இத்தகைய மனப்பான்மை நாட்டிலே வளரும் மட்டும் நாடு முன்னேறுமா?

அக்கினியாஸ்திரம் வாயுவாஸ்திரங்கள் எங்கே?
மேலும் தற்காலத்திலேயுள்ள குண்டு, தீக்குண்டு முதலியனவெல்லாம் பழையகால வாயுவாஸ்திர அக்கினியாஸ்திரங்கள் தான் என்று வீண் பெருமை பேசுகின்றனர். அத்தகைய அஸ்திரங்கள் அந்தக் காலத்தில் இருந“தனவோ? இல்லையோ? என்பது ஒருபுறமிருக்கட்டும். அவை நமக்குத் தெரியா. ஆனால் இக்காலத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அவைகளைக் காணலாம். எங்கு? ஏழை பாட்டாளிகளின் வீட்டில். ஏழை பாட்டாளி நாளெல்லாம் உழைத்து நலிந்து மாலையில் ஆயாசம் தீர அமுதரசத்தைப் (கன்னை) பருகி ஆனந்தமாக உள்ளே நுழைந்து அவன் தனது மனைவியை அறையும் அறைதான் அக்கினியாஸ்திரம். அதைப்பெற்று அவள் அழுவதால் வழியும் கண்ணீர் நமக்கு வருணாஸ்திரத்தின் வனப்பை நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அதைக்கண்டு அக்குடியன் விடும் பெருமூச்சே வாயுவாஸ்திரமாகும். இத்தகைய அஸ்திரங்களைத்தான் அன்றாட வாழ்க்கையிற் காண்கின்றோம். தீக்குண்டு அக்கினியாஸ்திரத்தைக் கண்டு உண்டாக்கியது என்று கூறுவது அறியாப் பாலகரும் எள்ளி நகையாடத்தக்க ஏமாற்றும் வித்தை. புதியனவெல்லாம் நம் நாட்டுப் பழம்பெரும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்று பேசிப் பூரிப்பதிலே பெருமை ஏதாவது உண்டா? இல்லை. முக்காலும் இல்லை. இதனால் வீண் வீறாப்பு பெருகுகிறது. மதி தேய்ந்து மந்தமடைகிறது. அறிவு அசட்டை செய்யப்படுகிறது. பழையனவற்றில் பெருமை உண்டு. புதியனவெல்லாம் பழமையைக் கண்டு தான் செய்தவை என்றாலும் அவை இன்று எங்கே? எங்கே, எங்கே என்று கேட்கின்றேன். அந்நியனிடம் சோரம் விட்டு அண்ணாந்து ஆர்ப்பாட்டம் செய்கிறாயே. அது உனக்குப் பெருமையா? சிறுமையா? உன் நாட்டிலே இருந்தது என்று உரத்து உரத்துப் பேசுகின்றாயே அந்த வீரம் இன்று எங்கே? எங்குப்போய் ஒளிந்தது? சமத்துவம் பண்டைய ஏடுகளிலே சரமாரியாகப் பரவிக் கிடக்கின்றதென்கின்றாயே, அந்தச் சமத்துவம் இன்று நாட்டிலே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் சல்லிக்காசு பெறுமான அளவுகூட அகப்படவில்லையே. பழமை வீரம் பேசுவது பயனளிக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள் நாட்டுக்கு நலம் தருமா? பயனளிக்காது என்பதில் பிழையில்லை. தராது என்பதில் தப்பிதம் இல்லை. இதனால் தமிழனின் மானம் பறிபோகிறதென்பதற்கோர் தடையில்லை.

எது தன்மான உணர்ச்சி?
எடுத்துக்காட்டாக, கூடகோபுரம் போன்ற மாடமாளிகையிலே, மக்களொடு மாண்புற வாழ்ந்த மனிதன் ஒருவன், கால நிலைமையாலோ கருத்தழிவினாலோ, கர்வத்தாலோ, கயமைத் தனத்தாலோ பிறரின் படுமோசத்தாலோ வறிஞனானான் என வைத்துக் கொள்வோம். அவனது மாட மாளிகை மாற்றானுக்கு உரிமையாய் விட்டது. சிலகாலம் சென்றபின் அவ்வறியனான முன்னாள்செல்வன் தன் நண்பன் ஒருவனோடு அவ்வீதி வழியே செல்லப் புறப்படுங்கால் அவனது மானம் அவனை அவ்வீதியில் காலெடுத்து வைக்க விடாது. அவன் தன்மானமுடைய வனாயிருந்தால் தவறி அவ்வழி புக நேரினும் அவ்வீட்டை ஏறெடுத்துப் பாரான். தன்மான முள்ளோன் தன் நண்பன் அம்மனையின் மாண்பைக் குறித்துப் பேசினும் தலைகவிழ்வான். மனையைப் பார்க்க மனமில்லாததால் நண்பன் அதுபற்றி அவனோடு உரையாடப் புகினும் இரண்டொரு சொற்களால் தன்னிலையை உணர்“த்தாது உணர்த்தி வேறு போக்கில் உரையாடலைத் திருப்பி அவ்விடம் விட்டு விரைவிலே நகர்வான். அதுதான் மனிதனின் தன்மான உணர்ச்சி. அது ஒவ்வொரு உயிர்க்கும் வேண்டும். மிக இன்றியமையாததும் கூட ஆனால் தன்மானமற்ற தன்மையாளன் தூரத்தே வரும்பொழுதே, நண்பன் வேறு வழி செல்லப்புகினும் தடுத்து, நமது மனை மகா நேர்த்தியானது இதோ இந்த வீதியில்தான் உள்ளது. பார்த்துப் போகலாம் வா, ஆகா! அதன் அழகே அழகு, அதனை வைத்து அநுபவிக்கக் கொடுத்து வைக்க வேண்டும், சுற்றிலும் பூங்காவென்ன, நடுவே நடுவேயுள்ள கண்ணாடிகளின் நேர்த்தியென்ன? என்று இன்னும் பலப்பல பேசுவான். முடிவிலே அது ஒரு காலத்திலே நம்மிடமிருந்த மனைதான், அப்பொழுதிருந்த சீரும் சிறப்புமென்ன, என்னை இவன் ஏமாற்றி இம்மனையைப் பறித்துக் கொண்டான். இருந்தாலும் நான் அநுபவித்து ஆண்ட அரண்மனைதானே என்று உள்ளம் நெகிழ்வான். உற்சாகம் காட்டுவான். இதுபோன்ற தன்மைதானே நம் தற்காலப் பழம்பெருமை பேசும் வீரர்களின் செயல்.

மிக நல்ல உவமை
இன்னும் சற்று விளங்க உரைக்க வேண்டுமானால், சான்று சற்றுக் கடுமையாக இருக்கும் என்ற போதிலும் உங்கள் மன்னிப்பு கிடைக்கும் என்ற மனப்பான்மையோடு ஒன்று கூறுகின்றேன். சோலையிலே இருவர் உல்லாசமாக உலவுகின்றனர். உரையாடல் மிக உன்னதமாயிருக்கின்றது. இருவரும் இளவயதினர். இளமை விருந்தை நுகர்கின்றனர் வசந்தகாலத்திலே. ஒருவர் ஆண், மற்றொருவர் பெண். மனமொத்த காதலர்கள் என்றுதான் மாசற்ற மனத்தினர் எண்ணுவர். அது சமயம் இருவர் அவ்வழியே வருகின்றனர். அழகான இக்காட்சியைக் கண்டு களிப்படைகின்றனர். ஆனால் இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து என்ன ஐயா! ஏதோ ஒரு மாதிரி பார்க்கிறீர், எல்லாம் எம்மிடமிருந்துதான் அவள் யாரோவென்று நினைக்காதீர் அவனோடு சல்லாபமாக இருக்கின்றாளே யென்று அவள் என்னுடைய மனைவியாக இருந்தவள்தான். அவள் அழகென்ன? அற்புத குணமென்ன? எனக்கும் அவளுக்கும் இருந்த பொருத்தம் தான் என்ன என்று எக்காளமிடுதற்கு ஒப்பாகுமென்று கூறுகின்றேன். தப்பிதமா? முறையல்லவா? நேர்மையோடு நினைத்துப் பாருங்கள் நேயர்களே!

பெரும் பெரும் பண்டிதர்களும் புலவர்களும் நாவலர்களும் இத்தகைய பழம்பெருமையில் பாசம் வைத்து நாட்டைக் கருதாமல் ஏடுகள் செய்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனரே. இந்த நிலைகண்டு என் மனம் பெரிதும் வருந்துகின்றது. எண்ணத்திலே ஏக்கம் உண்டாகிறது என்று நீங்கும் இந்த வீண் பெருமையென்று. சிந்தித்தவண்ணமே இருக்கின்றேன். காலம் இதனை மாற்றும் வருங்கால உலகம் இதற்கோர் வழிகோலும் என்ற நம்பிக்கைதான் மேலும் மேலும் சலியாதுழைக்க ஊக்குகின்றது. உரிமைக்காக, மக்களின் வாழ்க்கை உரிமைக்குப் போரிடும் உணர்ச்சியில் உள்ளம் ஊடுருவிச் செல்கின்றது.

அநுமான் சொல் செல்வனாம்!
சமீபத்தில் நான் ஒரு பண்டிதருடன் உரையாடி கொண்டிருந்தேன். அதுபோழ்து உலகிற் சிறந்த செல்வர்கள் யாவர் என்ற விவாதம் ஏற்பட்டது. பண்டிதர் பதட்டமின்றிக் கூறினார். டெமாஸ்தனிஸ், பர்க், அநுமான் ஆகிய மூவரும் சொற்செல்வர்கள் என்று அநுமான் சிறந்த சொற்செல்வனாம். இது கேட்டு என் நிலை கலங்கிற்று. பழைமை மோகம் பண்டிதர்களின் பகுத்தறிவு எத்துணை பாழ்படுத்தியுள்ளது. பாழ்படுத்துகின்றது என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானேன். என் செய்வது? டெமாஸ்தனிஸ் சிறந்த சொல்செல்வன் என்பதை ஒப்புக்கொள்ளலாம். பர்க் விஷயத்தில் கூட சிறிது ஐயப்பாடு நேர்கிறது. பர்க் பேசுகின்ற பொழுது உணவுக்கு மணி அடிக்கிறது. என்ற வாசகம் நினைவுக்கு வருகின்றது. பர்க் பேசுவதில் வல்லவன். ஆனாலும் கேட்போர் உள்ளத்தைத் தன்பால் திருப்பும் திறமற்றவன் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கின்றது. ஆனால் கடல் தாண்டிச் சீதையின் இருப்பிடமறிந்து இலங்கையைக் கொளுத்தின அநுமனையும் இவ்வரிசையில் சேர்ப்பது என்பதை நினைக்குந்தோறும் நகைப்பு மேலிடுகின்றது. அநுமானது திருவுருவப் படத்தைப் பார்க்கும் எவராவது அவரது வாய் வனப்பைக் காணும் எவராவது அநுமானும் சொற்பெருக்காற்றவல்லன் என்று நினைப்பரோ? நினைக்கத்தான் இடமிருக்கின்றதா? தாடைகளின் அமைப்பைக் காணும்போது உடல்நூல் வல்லார் தம் சிந்தனைக்கு விருந்தாகும் கேள்வி இது. தாடைகளின் அமைப்பை விடுத்து சொற்செல்வன் என்று கொண்டாலும் கொள்வோம். உலகச் சொற்பொழிவாளர் வரிசையிலே அநுமானும் ஒருவன் என்று பிறதேசத்தவர் கேள்விப்பட்டு நம்மை உங்கள் சொற்செல்வன் அநுமனின் சொற்செல்வங்கள் எங்கே? சொற்பெருக்கங்கள், சொற்போர்கள், அறிவுரைகள், அறவுரைகள், ஆராய்ச்சித் தொடர்கள் எங்கே? நாங்கள் காண வேண்டும் அவனுடைய ஆற்றலை, எடுத்துக் காட்டுங்கள் அவனுடைய ஏடுகளை என்று கேட்டால் இதற்கு யாது விடை பகர்வர் எம்மனோர், எம்புலவர் பெருமக்கள்? ஏதாவது இருந்தால்தானே பதில் வரும். கம்பன் கவிதைபால் கரைகாணாக் காதல் கொண்டு நாட்டு வளப்பமறியாத கவிதா ரத்தினங்களால் காணப்படும் சொற்செல்வர் வேறு எவ்விதமிருப்பர்?

செய்யத்தக்க வேலைகள்
இக்கால பண்டித மணிகள் பழமை விரும்பிகள் பழமையில் உள்ள புன்மையை விடுத்து கருத்துக்குக் களங்கம் விளைக்கும் இடங்களை எடுத்து மக்களுக்குப் பயன்படுமாறு அவற்றைச் செய்து தரலாகாதா? நீதிபற்றித் தனி ஏடு ஒன்று அமைக்கலாம். அதிலே பல புலவர்களின் கருத்தையும் ஒருங்கு திரட்டிக் குவிக்கலாம். காதல்பற்றித் தனியேடு செய்யலாம். அதிலும் பல பண்டிதர்களின் கருத்துக்கள் இடம்பெறச் செய்யலாம். அதுபோலவே நட்பு, மதம், போர், அரசாட்சி முதலியனபற்றி விழுமிய கருத்துக்களைப் பண்டைய ஏடுகளிலிருந்து எடுத்துத் தனித்தனியே தொகுத்து மக்களிடை பரப்பலாகாதா? இதுபோன்றே, தொல்காப்பியம், திருக்குறள் இவற்றையும் உரைகளையும் சிறு சிறு தொகுதிகளாக வெளியிட முடியாதா? பலரின் மாறுபட்ட கருத்துக்களையும் அவற்றில் தெளிவுறப் பொறிக்கலாகாதா? அதனைக் காணும் மக்கள் எது நன்றோ அதனைக் கொள்வர் தத்தம் கருத்திற்கேற்ப பழமை போகக்கூடாது எனக் கச்சையை வரிந“து கட்டுவோர் இம்முறையை கோடல்முறை, அதுவன்றிப் பழைமையைப் பாகுபடுத்தி பகுத்தறிவோடு பார்க்கத் துணிவின்றேல் பழமை பாழாகும் என்பதைக் காலப்போக்கு அவர்களுக்கு எடுத்துக்காட்டும். ஆராய்ச்சிக்கு முதலிடம் தாருங்கள் பண்டிதர்களே!

எச்சரிக்கை!
பண்டிதர்களே, புலவர்களே, நாவலர்களே, இலக்கிய கர்த்தாக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! சிந்தியுங்கள் என்பதுதான் அது. அறிவோடு சிந்தியுங்கள்! நடுநிலை என்று எண்ணுங்கள். ஏடுகளைப் பாருங்கள். எத்துனை வேறுபாடுகள் உள்ளனவென்று. ஏடுகளால் நாட்டிற்கு விளைந்த நன்மையைக் கணக்கெடுத்துப் பாருங்கள். பார்த்து சிந்தித்து, சீர்தூக்கி நல்ல முடிவுக்கு வாருங்கள். அதன் வழி நடவுங்கள். பருத்தறிவைப் பயன்படுத்துங்கள். காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த இலக்கியங்களை இயற்றுங்கள். இன்றேல் உங்கள் காலம் பழைய புராணங்களோடு நிற்க வேண்டிய, தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை செய்கின்றேன். எச்சரிக்கையை கோமாளியின் கூத்தென்று ஏமாளித்தனமாக எண்ணாதீர். நிலைமை நிச்சயம் மாறும் என்பதைப் பற்பல நாட்டு வரலாறுகளைப் படித்துப் பார்க்கின் உணரலாம். காலம் அறிந்து கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நிலைமையறிந்து நீதி வழங்குங்கள். நாட்டையறிந்து ஏடுகள் இயற்றுங்கள். மதத்தைப் புகுத்தி கலையைக் கறைப்படுத்தும் கயமைத்தனத்தைக் கைவிடுங்கள். அதனால் மக்களை மக்களாக வாழச் செய்வீர்கள். மற்று நிர்வாணப் பிச்சை கேட்கும் ஆண்டவனைப் பாடின மக்களை நிர்வாண காலமாகிய காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் இழிசெயல் புரிந்தோராவீர். மக்கள் மதியைக் குறைத்த குறைமதியாளராவீர்.

மதத்திற்கெனத் தனி எடு இயற்றுங்கள் மதம் வேண்டுமேல். அழகான கதைகளிலே, ஆராய்டச்சிமிக்க ஏடுகளிலே ஆண்டவன் அவதார லீலைகளைப் புகுத்தி அறிவைப் பாழ்படுத்தாதீர். அது அறமல்ல. அறிவுடைமையுமல்ல. ஆராய்ச்சிக்கு அணைபோடாதீர். ஆண்டவனுக்குரிய ஏடுகள் என்று தனியே தயாரியுங்கள் ஆண்டவனைவிட்டு அகலமுடியாவிட்டால். அதற்காக ஏடுகள் எல்லாம் எம்பெருமானுக்கே அர்ப்பணம் என்ற நிலைமை வேண்டாம். அதை மாற்றுங்கள். அதுதான் நீதி. நேர்மை கூட படித்த இளைஞர்கள் பகுத்தறிவு கொண்டு எதனையும் துருவித் துருவி ஆராய முற்பட்டு விட்டனர். நீங்கள் எத்துணை மண்டலங்கள் தவமிருந்து தத்துவார்த்தங்கள் கண்டு அவர் ஆராய்ச்சியை அலட்சியப்படுத்தியபோதிலும் உமது தத்துவார்த்தம் நிலைக்காது. பாமர மக்களைப் பகுத்தறிவாளர்களாக்கப் பாங்குள்ள ஏடுகள் எழுதித் தாருங்கள். இன்றேல் உலகம் உம்மை மதியாது என்பது எனது துணிவு. உண்மை உரை, நாட்டைக் கருதாவிடின், நாட்டின் நலிவு நாளடைவில் உம்மையும் பற்றும். எனவே ஆண்மையோடு அருந்தொண்டாற்ற முன்வாருங்கள். உலகம் உம்மைப் போற்றும் நாடு உம்மை ஏத்தும். ஆனால் நீவீர் சிலரின் சீற்றத்தைப் பெரிதெனவும் மதவாதிகளின் மமதையை மாலை எனவுங் கருதி மனம் தடுமாறி எங்களுக்கு எதிர்ப்பிரசாரம் செய்யாதிருப்பதே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் நல்லறமாகும். இதையேனும் நீங்கள் செய்ய முற்படலாமல்லவா?

நாட்டின் நன்மையைக் கருதி நலமுள்ள ஏடுகளைப் பண்டிதர்கள் இயற்றித் தராவிடில் நாளடைவில் நாடு இழிநிலையடையும். செவி சாய்ப்பார்களா இலக்கிய கர்த்தாக்கள் செயலில் இறங்குவார்களா கற்றுணர்ந்த கலாவல்லுநர்கள் எது எப்படியாகிலும் நாம் அபாய அறிவிப்பை அறிவித்துக் கொண்டு அறிவின் வழி யேகுவோம். எதிர்ப்பாரைக் கண்டு பின் வாங்கோம்.

தோழர்களுக்கு வேண்டுகோள்!
மாணவத் தோழர்களே! உங்கள் நேரத்தை நெடுநேரம் எடுத்துக் கொண்டேன். ஏதோ விருந்து கிடைக்குமென்று வந்தீர்கள். ஆனால் மருந்துதான் கொடுத்துள்ளேன். மருந்து என்றதும் மருள வேண்டாம். மருந்தை உண்டு உணர்வோடு ஒன்றிச் சுவைக்குங்கால் உண்மை தெரியும். கேட்டவற்றைச் சிந்தனையிலே கொண்டு சீர்தூக்கிப் பாருங்கள், அறிவுக்கு ஒத்ததைக் கொள்ளுங்கள். நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பு வேண்டுமா? வேண்டாமா? நாட்டு நலன் கருதா ஏடுகள் நமக்கு தேவையா? மதங்கலந்த ஏடுகள் மதியை வளர்க்குமா? அன்றி மதியை மறைக்குமா? மடமையைப் போற்றுமா வென்று எண்ணுங்கள். ஆண்டவனின் அற்புத குணங்கள் என்பவை அறிவுக்கு ஆராய்ச்சிக்கு, நாகரிக நாட்டார்க்கு நல்ல குணங்கள் என்றாவது ஏற்படுமா என்றும் கருத்திலே கருதுங்கள். இலக்கிய பண்டிதர்களின் இயல்பு நல்ல முறையில் இருக்கின்றதா வென்று இரவும் பகலும் பகுத்துணருங்கள். எது முறையோ அதன் வழி நடவுங்கள். எதிர்ப்புக்கு அஞ்சாதீர். ஏளனத்தைக் கேட்டு ஏமாறாதீர். மதத்தின் முன் மண்டியிடாதீர். கடவுளைக் கண்டு கருத்தழியாதீர். அறிவே துணை மானமே மனிதனை மனிதனாக்குகிறது என்பதை உணருங்கள். உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள். சமத்துவம் நாடுங்கள். சகோதரத்துவம் கோருங்கள். சாதி மத பேதத்தைச் சாடுங்கள். தோல்வி கண்டு சலிப்புறாதீர். மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர். சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். அதன் வழி செயலாற்றுங்கள் செம்மல்களே! உங்கள் யாவருக்கும் எனது நன்றி.

(-முதல் பதிப்பு: 1945. தமிழ் உலகம் காரியாலயம், சென்னை.)

Wednesday, July 7, 2021

புவியீர்ப்புக் கட்டணம்


புவியீர்ப்புக் கட்டணம்


கடிதத்தை உடைக்கும் போதே அவனுக்குக் கை நடுங்கியது.அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். 

இது மூன்றாவது நினைவூட்டல், மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. 

இப்போது, உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை, அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை புவியீர்ப்புத் துறை உண்டாகியிருக்கவில்லை . 

'அம்மையே! 

சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?

புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'

'நீங்கள் யார் பேசுவது? 

'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன். 

'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை? 

இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொரு முறைபரிசீலிக்க முடியுமா?

'இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன் சென்ற மாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். 

ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்குத் திடீரென்று என்ன நடந்தது

"என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது. 

அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே?. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்


'அம்மையே, உங்கள் கையேடு மகா மிகவும் பாரமாக உள்ளது எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஒடி விடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.


புரியாதது எப்படி அநியாயமாகும். நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல் வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?

அம்மையே புவியிப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ஆதியிலிருந்து அது இருந்து கொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கூட இருந்திருக்கிறது என்று சொல்கிறார்களே. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. 

இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால் எப்படி?

ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்குத் தோன்றவில்லை? 

தண்ணீரை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்கவதற்கு அனுமதிக்கிறோம். 

சமையலுக்கு வாயு தருகிறோம். மின்சாரம் தருகிறோம். எல்லாவிதக் கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். 

ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், யோசித்துப் பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம் வாழ முடியுமா? 

கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாட முடியுமா? 

ஒன்றுக்குப் போவது போல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?


அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவை யெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால், உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?

அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்புக் கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் அதனை முற்றிலும் பயன்படுத்தியும் அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்ய வேண்டியிருக்கும்….

அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்தத் துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன் எனக்கு தேசப்பற்றும் பூமிப்பற்றும் புவியீர்ப்புப் பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.'

'வணக்கம். 

'ஹலோ .' 

'ஹலோ .'

அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?' 

'நான்தான், சொல்லுங்கள்?

ஐயா, நான் புவியீர்ப்புத் துறையிலிருந்து பேசுகிறேன். 

நீங்கள், கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'

'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்தில் இருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்ட முடியாது என்று சொல்லவில்லையே, எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டி விடுவேன்.'

'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை பத்தாது, நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்குத் தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? 

இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.

 "சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.'

மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்….

'சொல்லுங்கள்….

'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டு வருகிறதே. அது ஏன்?

நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்க வில்லையா?

'இல்லை , அம்மையே.'

அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். 

புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார் உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'

'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'

'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'

'நீங்கள் எல்லை மீறிப் பேசுகிறீர்கள்?'

'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்குக் காரணம் கூறினேன். இந்தத் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையைக் கணிசமாகக் குறைத்து விட்டார்களே .'

அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்குத் தெரியும்?.

'நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். 

உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்தத் தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'


'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்குப் பயணம் போயிருந்தோம். அதற்குக் கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன் படுத்தவில்லையே?


ஐயா. இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்ககிறது.  உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக் கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்தத்தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. 

நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்குச் சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தைச் செலுத்திவிட்டோம். 

இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.'

நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னைத் திக்கு முக்காட வைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'

'சரி, கேளுங்கள்.'

'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா ?' 

இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்க முடியுமா? 

இப்பொழுது செவ்வாய் கிரகத்தைத்தாண்டி அல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'

'மன்னியுங்கள். என்னுடைய மூளையைப் பிரகாசிக்க வைத்து விட்டீர்கள். இன்றே புவியீர்ப்புக் கட்டணத்தைக் கட்டி விடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'

'முதலில் செய்யுங்கள்.'

 'ஹலோ '

'ஹலோ

ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.'

அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் வைத்துக் கொண்டு இல்லையென்கிறேனா? 

காற்று வரி "வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர்க் கட்டணம் கட்டினேன் ,மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'

அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் பணத்தைக் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.'

"அதன் காரணம் உங்களுக்குத் தெரியும்தானே "

இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.


மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்து விடுவார்கள். தண்ணீர்க் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்புக் கட்டணம். கட்டாவிட்டால் அதைத் துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.'

'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்தத் துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?"

'நீங்கள் என்னுடைய நாலாம் வகுப்பு உபாத்தினிபோல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'

'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?"

'அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'

'சரி, துர்தேவதைகள் போன பிறகு பேப்பரைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'

'அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்க முடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'

'செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்புக் கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'

அப்படியா?

'அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை., ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக் கூடாது என்று தீர்மானித்தோம்.'

பிறகு என்ன நடந்தது?'

அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கி விட்டோம். மனிதர் ஒரு தடவை பூமியைச் சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்து விட்டார்.. 

திரும்பவும் அவரைப் பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'

'உண்மையாகவா!

மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால், ஒரு பிரச்சினை?

'அது என்ன ?'

'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு விண்வெளி உடையின் விலை, இன்ன பிற செலவுகளை மாத மாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டி முடித்து விடுவார்.

2196 மாதங்களா? 

'ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.

'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'

'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவை கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'

'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.''


'ஹலோ .'

'ஹலோ '

'உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டி விடுவதாக புகழ்கிறார்கள்.'


'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே! 


'நான்தான் பூமிப்யணத்துறையில் இருந்து பேசுகிறேன் 

இது என்ன புதுத்துறையா?' 

என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்று கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.

'என்ன கட்டணம்?'

பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்குத் தெரியும். ஒருமுறை பூமி சூரியனைச் போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள். இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல், இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.

அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும் போதே புல்லரிக்கிறது.

முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள் பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்,


'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பி விடுகிறேன். 

ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?

இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.

'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்குப் பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'

'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'

 'அப்படியா, சொல்லுங்கள்.'

'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால், நாங்கள் கட்டணத்தைக் கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.'

'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லா விடில் புள்ளி விழாத சிவந்த ஆப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும் போதே மனம் புளகிக்கிறது. அம்மையே,

பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிகக் கட்டணம் கட்டலாம் அல்லவா?

பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்குத் தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது, அளவுக்கு அதிகமான பொதி கொண்டு போனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'

'உதாரணமாக?

பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்ட வேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது

அம்மையே, உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பி விடுவேன்.'

'நல்லது. அது என்ன சத்தம்?' 

'ஒன்றுமில்லை . பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்

'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தைக் கட்டிவிடுங்கள்.'

‘உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சிதரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று"

'என்ன ?'

'நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்த பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது, சின்னஞ்சிறு சுற்றும் என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனே கட்டிவிடுகிறேன்.'

'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'

'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. 

அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை !

அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்



Tuesday, July 6, 2021

சுவருடன் உரையாடும் மனிதர்

சுவருடன் பேசும் மனிதர்

'

கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்தும் இடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு,மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள்.

ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுன்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், 'என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்களே,  அவர் சொல்வார், 'என்ன செய்வது. என்னைப்போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்து விடுவேன். இங்கே எல்லோருமே மோசம். அதுதான் முடிவெட்டுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.'

நானும் ரோனியைப் போல அவருடைய உதவியாளர் களிடம் தலையைத் தரமாட்டேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும் வாடிக்கைக்காரர்களுடன் என் முறைக்காகக் காத்திருப்பேன். ரோனியிலே எனக்குப் பிடித்தது அவசரமின்மை . நிதானமாக, தொழில் சுத்தமாக வேலையை முடிப்பார். எப்படி வெட்ட வேண்டும் என்று கேட்க மாட்டார். என்ன சைஸ் கிளிப் என்று கேட்கமாட்டார். பிடரியில் நேர் வெட்டா அல்லது குறைவெட்டா என்றெல்லாம் கேட்கமாட்டார். ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் அவரிடம் குறிப்பு உண்டு. தையல்காரரிடம் இருப்பது போல, மருத்துவரிடம் இருப்பது போல. அதைப் பார்த்து தன் வேலையைச் செம்மையாக முடித்துவைப்பார்.

அவரிடம் எனக்குப் பிடிக்காத ஓர் அம்சமும் இருந்தது. 'ரோனி விளையாட்டுப் பிரியர். அவர் தலைமுடி வெட்டும்போது, முதல் நாள் நடந்த ஐஸ் ஹொக்கி பற்றி அல்லது கூடைப்பந்து பற்றி அல்லது பேஸ்போல் பற்றி ஓயாது பேசுவார். விளை யாட்டைப் பற்றி தெரியாது என்று சொன்னால் கனடாவில் ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள்..

ஆகவே, முதல் நாள் நான் அதற்குத் தயாரிக்க வேண்டும். – தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்வேன். அடுத்த நாள் முடி திருத்தும்போது  ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி அவரை மகிழ் விப்பேன். அன்று முடிவெட்டு உத்தமமாக அமையும்.

ஆனால், எத்தனை வருடங்கள்தான் இந்த நாடகத்தை ஆட முடியும். எனக்கும் அலுப்பு பிடித்தது. நான் வேறு இடத்தில் முடிவெட்ட ஆரம்பித்தேன். அது 20 நிமிட தூரத்தில் இருந்த பெரிய நிலையம், பெண்கள் பகுதி தனியாக இயங்கியது.. ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே கலகலப்பு. நான் வாயே திறக்காத  ஒரு வேலைக்காரரிடம் போகலாம் என்ற முடிவில் இருந்து. என்னுடைய முறை வந்தபோது, புதன்கிழமை என்ற வாசகம் எழுதிய தடித்த உடையை வியாழக்கிழமை அணிந்திருந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் என் முடியை வெட்டத் தயாராயிருப்பதாகச் சொன்னார்.  ஒருநாள் பிந்திய ஆள் என்றாலும் அவர் தலையைச் சரித்து புன்னகைத்த விதம் எனக்குப் பிடித்துக்கொண்டது.

அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை . கருமமே கண்ணாகி அவர் முடியை வெட்டி முடித்ததும் கண்ணாடியில் பார்த்தால் அது வெகு நேர்த்தியாக இருந்தது. ஒரு கலைஞனின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கைகள் வண்ணத்துப் பூச்சி போல துரிதமாக இயங்கின. 

தலையிலே ஆடிக் கொண்டிருக்கும் ஆயிரம் முடிகளில் ஒரு மயிரை மட்டும் அவர் கத்தரிக்கோல் தேடி லாவகமாக வெட்டும். அவ்வளவு நுட்பமான கலைஞன்.

அடுத்த முறையும் அவர்தான் வெட்டினார். அதற்கு அடுத்த முறை சென்றபோது அவருக்காகக் காத்திருந்து அவர் முடிவெட்ட ஆரம்பித்தபோது ஒரு சம்பவம் நடந்தது. முடி திருத்துபவரைப் பார்த்தால் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். கண்கள் பழுப்பு நிறத்திலும் முடி கறுப்பாகவும் இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் எல்லாம் வித்தியாசமாகவே தோன்றின. 

வாடிக்கைகாரர்களிடம் பேசும்போது அவருடைய உச்சரிப்பு அரேபியர்களுடையதைப் போல  இருந்ததையும் கவனித்தேன்.

அன்று பெண்கள் பகுதியில் இருந்து மிக நாகரிகமாக உடையணிந்திருந்த ஒரு பெண் இவரிடம் வந்தாள். கறுப்பு காலணியும்சிவப்பு கையுறையுமாக பார்த்தவுடனேயே இவள் அரேபியப் பெண் என்று சொல்லிவிடலாம். வயது முப்பதுக்குள்தான் இருக்க வேண்டும் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள் போல ஒருகையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்றாள். ஏதோ அரபு போன்ற மொழியில் வேகமாகப் பேச அந்த மனிதர் ஒரு வார்த்தையில் ஏதோ சொன்னார். அந்தப் பெண் மீண்டும் சங்கிலித் தொடர் போல் நிற்காமல் பேசினாள், இவர் மறுபடியும் சுருக்கமாகப் பதில் கூறினார். 

அவள் தொடர்ந்து ஏதோ கேட்க உனக்குக் தெரியவில்லையா? எனக்கு அரபு மொழி தெரியாது என்று உரத்து ஆங்கிலத்தில் சொன்னார். 

ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வது போலவே அவள் நகர்ந்து சற்று எரிச்சலாகவே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இவர் ஒருவித பதற்றமும் இன்றி முன்புபோல அமைதியாக என் முடியை வெட்டிக் கொண்டிருந்தார். 

நான் முதன்முதலாக இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் ஈராக்கில் இருந்து போருக்கு முன்னர் சதாம் காலத்தில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். 

அந்தப் பெண் தலையலங்காரம் செய்ய வந்திருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவள் பேசும் அரபுவை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டிருக்கிறாள். இவர் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். 

ஈராக்கில் இருந்து புலம்பெயர்ந்த ஒருவருக்கு அரபு மொழி தெரியாது என்பதை அவள் நம்பவில்லை. அதுதான் கோபமாகச் செல்கிறாள்.

எனக்கு ஆச்சரியம். நான் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஈராக்கியர் இவர்தான். ஆதி காவியமான கில்காமேஷ் இலக்கியம் பிறந்த நாடு என்று எனக்கு ஈராக்கில் மதிப்பு உண்டு. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சுமேரிய எழுத்தில் எழுதிய அந்தக் காவியம் இன்றும் களிமண் தட்டைகளில் அங்கே பாது காக்கப் படுகிறது.

"நான் அவரிடம் கேட்டேன். எப்படி உங்களுக்கு அரபு மொழி தெரியாமல் போனது?”

'நான் ஈராக்கில் பிறந்தாலும் அநேகமாக வெளிநாடுகளில் தான் வளர்ந்தேன். என்னுடைய தந்தையார் ஈரான், சிரியா போன்ற  நாடுகளில் வேலைசெய்தார். நான் பொறியியல் படிப்பு படித்தவன். ஈராக்கில் தொடர்ந்து வாழமுடியாமல் தஞ்சம் கேட்டு கனடாவுக்கு வந்தோம். என் மகன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறான் 

நான் இங்கே தனியாகத்தான் வாழ்கிறேன்.'

பொறியியல் படித்துவிட்டு இந்தத் தொழிலுக்கு எப்படி - வந்தீர்கள்?'

'நான் மாத்திரமில்லை . என் போல பலபேர் வந்து இங்கே முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள் – ஆங்கிலத்தில் இன்னொரு முறை என்னால் பொறியியல் படிக்க முடியவில்லை. ஆனால், எனக்கு இந்தத் தொழிலில் ஒரு மோகம் என்று சொல்லலாம்,. மூன்று மாதப் பயிற்சியில் முடி வெட்டப் பழகிவிட்டேன் இதுவும் பொறியியல் போலத்தான். 

மிகப் பெரிய கலை. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்குப் போகமுன்னர் ஒரு புது விசயம் கற்றுக்கொண்டு போவேன்

என்னால் நம்பமுடியவில்லை இந்த மனிதரை அதிசயத்தோடு பார்த்தேன். இனிய புன்னகை மாறாமல் தொழிலில் கவனமாக இருந்தார். 

 'நீங்கள் இன்னும் ஆரம்பக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்?

நான் படித்தது பாரசீக மொழி. அது தொழிலுக்காக, வீட்டு மொழி அராமிக்.'

அராமிக்கா? கேள்விப்பட்டதில்லையே.'

'அப்படி ஒரு மொழி இருக்கிறது. என் மகனுக்கும் கொஞ்சம் தெரியும். என் மனைவியும் நானும் வீட்டிலே அதுதான் போசுவோம். போனவருடம் என் மனைவி இறந்துவிட்டார். 

எனக்கு இங்கே என் மொழி பேசுவதற்கு ஒருவருமே இல்லை . 

கனடாவில் இந்த மொழி பேசுபவர்கள் சிலர் இருப்பதாகக் கேள்வி. ஆனால், அவர்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை.'

அராமிக் மொழி பேசும் நாடு என்று ஏதாவது உண்டா?

'அப்படி இருந்தால் அது பெரிய வரம் அல்லவா? நான் Syrian Othodox Churchஐ சேர்ந்த கிறிஸ்தவன். சதாம் ஆட்சியில் நாங்கள் பட்ட கொடுமைகளைச் சொல்லி ஆற்ற முடியாது. உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், துயரம் என்னவென்றால், அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை . 

சிதறிப்போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், சிரியா போன்ற பல நாடுகளில் சிறுசிறு குழுக்களாக வாழ்கிறார்கள். 

அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். 

உலகத்தில் முதன் முதலாக சட்டத் தொகுப்பை வழங்கியவன் 3700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் மன்னன் ஹமுராபி ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பதற்குத்தான் அவன் சட்டம் இயற்றினான்


இன்று நாங்கள் ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கிறோம்.'

கனடா நீங்கள் தேர்ந்தெடுத்த நாடுதானே. இங்கே உங்களுக்கு முழுச்சுதந்திரம் உண்டல்லவா?

'நண்பரே, இது சொர்க்கம் இதில் என்ன சந்தேகம். இங்கே வந்தபின் நான் நினைத்தேன்; 

ஒடுக்கப்பட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் ஒரேயொரு நாள் என்றாலும் கனடாவில் வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குச் சுதந்திரக்  காற்று என்பது என்னவென்று தெரியவரும். நான் சொன்னது எங்கள் மொழியை. இன்று அது அழிந்து கொண்டு வருகிறது. எங்கேயெல்லாம் எம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்கள் மொழி விழுங்கப்படுகிறது. ஆபத்தில் இருக்கும் மொழி என்று எங்கள் மொழியை அறிவித்து விட்டார்கள். இன்னும் சில வருடங்களில் அது அழிந்து போகக் கூடும்.

அப்படி நிச்சயமாகச் சொல்லமுடியுமா?

அப்படித்தான் அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தால் நான் அராமிக் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். 

சுவர்களுடன் அராமிக்கில் பேசுவேன். 

பழக்கம் விட்டுப்போய்விடுமே என்ற பயம். 

"நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது."


இப்பொழுது அவர் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார். 

சற்று எட்ட நின்று தலையை இரண்டு பக்கமும் சரித்து என் முடியை உன்னிப்பாகக் கவனித்தார். 

பின்னர் முகத்தைப் பார்த்தார். திடீரென்று 'ஷாம்பூ போடவா?' என்றார். நான் சம்பாஷணை தொடரவேண்டும் என்பதில் ஆவலாயிருந்தேன். சரி என்று தலையாட்டினேன்.

'நான் நிறையப் பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?'. 

நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். 

அங்கே எங்கள்  மொழியை சிங்களம் விழுங்கிக் கொண்டிருக்கிறது'

உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய  மொழி அல்லவா?' 

அது உண்மை இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. 

கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுககு முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் அகப்பட்டிருக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.



எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை.

எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால், உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா ?' 


இல்லை .


' 'உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா ?


' 'இல்லை .' 


'அப்படியானால் உங்கள் மொழிக்கும் என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை .'


'எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?'


'நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சம வயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். 

அவர்களுககு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல், அவர்களுடைய மொழி இனிமேல் அழியவே அழியாது.'


''நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?' 


'நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால்தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. 


உங்கள் மொழி தமிழ்நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?


'ஆனால், இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.'


'மாநிலம் வேறு, நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். மால்ட்டா 4,00,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழியவேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். 

உங்கள் நாட்டுக்குச் சமீபத்தில் இருக்கும் மாலைத்தீவு, அதை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடைய சனத்தொகை 3.50,000. அவர்களுடைய மொழி திவேஹி. 

அது அழியுமா ? எப்படி அழியும்? 3,00,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லேண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக்,அது அழியுமா?. 

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.'


 நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லா விட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?


ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். 

அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால், கைகள் வேறு யாருடையவோ கைகள் போலத் துரிதமாக வேலை செய்தன.

அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்க முடியும். 

உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். 

அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. 

அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றைச் சேமிக்க 'வேண்டும். ஆவணப்படமாகவும் ஒலி வடிவமாகவும் கணிமைத் 'தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். 

ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாசாரம் அழிவதற்குச் சமம். 


கீழே விழுந்த முடியைத் திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேடியாக மறைந்துவிடும்.

நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன். ' ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. 

அதுபோலவே அதன் வளர்ச்சிக்கும், எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. 

ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருடகால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை  ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுககே புரியும்….


பதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். 

திருப்தியாகவிருந்தது. 

காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். 


ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்து இருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை

எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.


நான் சாக்கடையில் 

விழுந்து கிடக்கிறேன். 

என் கண்கள்

நட்சத்திரங்களில்.


நான் என் மொழிமீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை .

அவர் என்னை மூடியிருந்த போர்வையைக் கையிலே விரித்துப் பிடித்தபடி ஒரு மாட்டுச் சண்டைக்காரர் போல நின்றார். தத்தம் மொழிகளை இழந்துகொண்டுவரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும் என்னுடையது போலவே இருந்தது. 


எப்படி இவரிடம் விடை பெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை . ஒருவர் அந்தச் சமயத்தில் எதைச் சொல்லக்கூடாதோ அதைச் சொன்னேன்.

‘நண்பரே, அழிவை நோக்கி பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த தனிமனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்.'

'என்ன, அப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா? 


அது "யேசு" பேசிய மொழி அல்லவா?


நான் திடுக்கிட்டேன். கடந்துபோன பிறகும் முடிவெட்டு நிலையக் கதவுகள் நெடுநேரம் ஆடின.


Monday, July 5, 2021

கச்சி ஏகம்பனே

உன்மத்தராயிருந்தோம்


"கச்சி ஏகம்பனே”

முறையிட்டுக்கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.

ஏகம்பனாம், ஏகம்பன்!

பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய, மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு 'கச்சி ஏகம்பனே' என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?

சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்!

கள்ளிப் புதரும் கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஓரிடமும் இல்லையா? இருந்தால் அதற்கு முறையிடும்! உம்முடைய கண்ணீரை அதற்குச் சொரியும்!

விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது - எல்லா ஆண்களையும்போல; ஆனால், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் - அவள்தான் சரசா - அவளுடைய மனசை ஒருகணமாவது அறிய, அறிய முற்பட, முயன்றிருக் கிறீரா?

கை கூசாமல் பேனாவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனால், இதை அவள் - அந்தப் பட்டுப் போன்ற உடலைப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் - பார்க்க நேரிட்டால்...!

நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?

சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்தபோது, நான் திடுக்கிட்டு விட்டேன்.



இப்படியும் ஓர் அழகா! சாதாரண புடவைதான் உடுத்தியிருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை, முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அந்தச் சாதாரண சேலை.

அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.

அந்தக் கண்கள் - அந்த நீல விழிகள் - அதன் விலை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. நிலமகள் ஒருத்திதான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.

பாவம், அவளுக்கு எப்போதுமே சேலை உடுத்தத் தெரியாது சிறு பெண்தானே!

'சடக், சடக்' என்று சேலை சத்தம்போட வெகு சிரமத்துடன் அவள் நடப்பாள்.

சிறு குழந்தைகள், 'குறு குறு'வென நடை பழகும்போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினால் அள்ளி அணைத்துக் கொள்வோமே, அத்தகைய வேட்கைதான் அவள் நடையைக் காணும் போதெல்லாம் தோன்றும்.

அந்தச் சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங்கள் அந்தப் பாதங்களின் கீழ் துடித்தவண்ணம் நசிகின்றனவோ என்று நான் வியப்பதுண்டு.

பொறாமை யாரைத்தான் விட்டது!

"சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறாள் போல இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறை யிட்டபோது நான் திகைத்து விட்டேன்.

சரசாவா? என்னால் நம்பவே முடியவில்லை.

ஆனால், அன்றிரவு, அந்தப் பாவ காரியத்தை நான் செய்ய வேண்டியதாகிவிட்டது.

மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே வந்தாள். அவள் கையிலே கனத்த சூட்கேவஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.

“மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?”

"சரசா... விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. பிரின்சிப்பல் 'கூட 'டிஸ்மிஸ்' பண்ணும்படி உத்தரவு கொடுத்து விட்டார். எனக்கும்தான் பரிதாபமாக இருந்தது. ஆனால், நான் என்ன செய்ய முடியும்!”

"மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ்வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?”

“என்னை விரும்பினார் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. 'குற்றம்' என்று உணர்ந்த பின்புகூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் நடந்துகொண்டோம்.

“மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்குப் பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என்னைப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள்...''

“ஆனால்... யோசித்துப் பாருங்கள் மிஸ்... நாளைக்கு சமு தாயத்தில் என்னை , காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக நடத்தப் போகிறார்களே, அது பரவாயில்லையா?”

"நீங்களும் ஒரு பெண்தான், உங்களைவிட யார் என் குறையை நன்றாக உணர முடியும்?"

அவள் கடைசியாகக் கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது!

"குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட்டதுதானா பள்ளிக்கூடம்? அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவல்லவா?"

நான் என்ன பதில் கூற முடியும்? "சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி நடந்தது?”

வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினாள் அவள்.

நான்தான் திணறிப் போனேன்.

“மிஸ், நான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை ... ஆனால், இன்னும் மூன்று நாட்கள்... மூன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக்கூடாதா?”

அவள் விம்மி விம்மி அழுதாள்.


இதோ... இந்த 'ஸ்வெட்டர் இதை எதற்காகப் பின்னுகிறாய்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறீர்கள்; நான் மறைத்துவிட்டேன். அவருடை பிறந்த தினம்.அது இன்னும் மூன்றே நாளில் வருகிறது.ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைக் இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?"

"இனிமேல் நான் அவரை எப்படிக் காண்பேனோ?” என்று அவள் விம்மிய போது என்னால் அவளைத் தேற்றக்கூட முடிய வில்லை .

நர்ஸ் படிப்புக்குப் போனாலும் அவள் என்னை மறந்துவிட வில்லை . அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம்...

“எதிர்காலம் இருள்; மனதிலே இருள்; வழியிலே இருள்; என் தந்தை முகத்தில் எப்படி விழிப்பது!

“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவது போன்று படலைக் காலைத் தள்ளினேன்.

“வாசல் திண்ணையிலே என் தந்தை - அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர் - சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரெண்டு வயதே ஆன என் அருமைத் தங்கை. அக்கா படிக்கவேண்டுமென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி - அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

"சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?” என்று குரல் தழுதழுக்கக் கேட்டபடி கைகளை என் பக்கம் நீட்டித் தடவினார்.

"ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய நெஞ்சம் சுக்கு நூறாகச் சிதறி நான் மாண்டு போகவில்லை?

"மூன்று மாதத்தில் சரசாவும் ஒரு நெசவு ஆசிரியை ஆகி விடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்” என்று இரவும் பகலும் கனவு கண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் - வெட்கமில்லாமல் - என் குற்றமெல்லா வற்றையும்


"அடித்து உதைத்திருந்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்

“கையிலே பிசைந்து கண்ணீர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி - அதையும் சகித்தேன்.

"என் தங்கை - அந்தச் சிறுமி - காரணம் விளங்காமலே என் கால்களைக் கட்டி அழுதபோது - அதையும் அந்தச் சிறுமி யின் விலையில்லாத கண்ணீரையும் சகித்தேன்!

"உயிரைப் போக்கிக்கொள்ள எனக்குத் தெரியாமலில்லை. ஆனால்... ஆனால்.....

"கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயுகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களை நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

"ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திரனை எட்டிப் பார்ப்போம்.

"கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகலவென்று காரணமின்றிச் சிரிப்போம்.

"திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக்கொள்வார். வானத்து நட்சத்திரங்களையெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார்.

"அந்த வானத்து மீன் மேலும், பூரண சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.

“உறுதிகள் கோடி செய்தோம்.

 "உன்மத்தராயிருந்தோம். 

"ஆமாம் - உன்மத்தர்தாம்.

"இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் நட்சத்திரக் கூட்டங்களும், இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக் கொண்டு கிடக்கின்றன?

"ஓ நட்சத்திரமே, நீ அவருடைய உறுதிமொழியை இன்னமும் நம்புகிறாயா?

“ ஏ,பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட----?“


"அந்த ராஜு - இந்தப் பேதையை மறந்துவிட்டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனோ உலகத்து அவதூறுகளையெல்லாம் எவருக்காக ஏற்றுக்கொண்டேனோ, அவருக்கு 'சரசா' என்பவள் உயிரோடு இருக்கிறாள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?

"கண்ணீரால் நான் வரைந்த அத்தனை கடிதங்களுக்கும் அவர் பதிலே எழுதவில்லை .

"காரணம் என்ன தெரியுமா? 

"மிஸ், எழுதவே கைகூசுகிறது.

"எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப் படுகிறாராம். ஊரிலே என் பெயர் கெட்டுப்போய்விட்டதாம்.

"ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடக்கூடியதா?”

பயிற்சி முடிந்ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனிமேலாவது அவள் அவனை மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மையிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும்கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன செய்தி.....

"நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில்.... இத்தனை நாளில், என்னை ஒருமுறைகூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை . நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். நான் வேறு என்ன செய்ய முடியும்?”

"அவர் ஆண்! நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப்பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா, சொல்லுங்கள் மிஸ்!"

அவள் விசித்து விசித்து அழுதாள்.

என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினாள்.

என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக்கொண்டு 'இந்த விரல்களின் ஸ்பரிசத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா' என்று கூறியவர் கேவலம் இரண்டரை வருடத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?"

இன்னொரு நாள் வியர்க்க, வியர்க்க அவள் வந்திருந்தாள்.

"ஏது இந்த நேரம்?" என்றேன். 

“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று

மாற்றலாகிப் போகிறார்; அவருக்குப் பிரியா விடை நடநதது. இடையிலே வர முடியவில்லை" என்று கூறிவிட்டு, பெரியதொரு பெருமூச்சு விட்டாள்

தேர்தல் சமயம் அது; ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்பது,பத்து

அப்பரேஷன் கேஸ்களாவது வந்தவண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஓய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர் கூட லீவு போட்டுவிட்டார்.

இரவு ஒருமணி இருக்கும். பதினொராவது ஆப்பரேஷன் நடந்து கொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ்வொன்றாக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த்திருந்தது. கடமையைச் செய்ய வேண்டுமென்று ‘லின்ட்' துணியினால் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.

ஏனோ விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டுக் கூர்மை யான பார்வை ஒன்றை வீசினார் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒருகணந் தான்! ஒருவருமே பார்க்கவில்லை.

சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்றுதான் அந்த "டோம்' விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம்கூடத் தயங்கவில்லை. தான் இன்னொருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை . அவள் நினைத்திருந்தால்... ஒரு உதட்டின் அசைவிலே... ஆனால், அவள், அதை விரும்பவில்லை.

இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?

ஆனால் அவளுக்கு, அதை விளம்பரம் செய்யத் தெரியவில்லை. பெண் பேதையென்பதற்கிணங்க, நம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள்.

வழக்கம்போலப் பருத்தித்துறை பஸ் அவளைக் கவ்வியங் காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து



அவள் வீடு வெகு சமீபத்தில்தான் இருந்தது. செங்குந்தான் பாட சாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப்போனால் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனால் அந்தப் பூனைக்கண் இரட்டையர்களின் கடை வாயில் அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.

அதை அவள் கடக்கும் போதெல்லாம் 'விசில்' சப்தமும் விரசமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பிவிடும் சரசாவுக்கு.

இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கிலியன் தோப்பு தென்கோடிப் பக்கமாகப் போவாள்.

அன்றும் அப்படித்தான்.

பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிராக சைக் கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒருகணம் 'திக்' என்றது.

அவன்தான். ராஜுதான்.

சந்தி கழித்து அவன் சமீபமாக வரும்வரைக்கும் படக் படக் கென்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ண க் குமுறல்கள். 'எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப்பார், யாராவது பார்த்து விட்டால், ' என்ன எண்ணங்கள் அவளை நிறைத்தன. நடையைத் தளர்த்திக்கொண்டு ஆசையோடு நின்றாள்.

இதோ ராஜு வந்து விட்டான். உற்றுப் பார்க்கிறான்' என்று அவளுடைய உள்ளுணர்ச்சிக் கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.

ஆனால், அவன் நிற்கவில்லை. போயே போய்விட்டான்!

அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து. சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாகவல்ல; பின்சீட்டில், பீடி குடிக்கும் ஓர் அருமையான நண்பனை ஏற்றிக்கொண்டு.

"உன்னை நான் அடையாளம் கண்டுவிட்டேன். இருந்தும் என் மன உறுதியைத் தளரவிடவில்லை . பார்த்தாயா? பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரைகுறை சிரிப்பில் இவ்வளவு வஞசனை எப்படி ஒட்டிக்கொண்டது?

சைக்கிள் மின்வேகத்தில் அவளைக் கடந்தபோது “நேர்ஸ் உடுப்பிலை சோக்காயிருக்கடா!” என்று அந்த அழகான நண்பன்


சொல்லியது நாராசமாய்க் காதில் விழுந்தது. 'கொல்' என்ற சிரிப்பு அதற்குச் சுருதி கூட்டியது.

"அருமை ராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத்திற்குப் பலியா

னாய்?"

"மிஸ், என்னுடைய ராஜு, அந்த அருமை ராஜு, அவர் எப்போதோ இறந்து விட்டார்...'' என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல் இருக்க முடியும்?

பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். நர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த்தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைந்திருந்தன. 'கடமை, கடமை' என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.

"மிஸ்! ராஜு வந்திருந்தார். சாதாரண காய்ச்சல்தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனால்... ஆனால்... நிரம்ப வும் மாறிவிட்டார்.

"நர்ஸ் என்றால் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றொரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றிவிட்டார்.

“நர்ஸ்' என்றால் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;

"அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வையிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே - இன்று வெறி - ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி

நின்றது.

"உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினார். மற்ற நோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.

"நர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானால் ஒரு சொல், ஒரேயொரு சொல் அப்போது கூறியிருக்கலாமே. உடனே


நின்றிருப்பேன்.இன்று, நோயாளிகள் எல்லோரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.

“நான் அவர் சொல்லியபடி எப்படி நடக்க முடியும்?”

சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னைவிட வேறுயார் நன்றாக அறிய முடியும்! அவள் என்ன சொன்னாள்? அது எனக்குத்தான் தெரியும். “மிஸ் நான் இப்படித்தான் இருப்பேன்”

“என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித்தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் நான் கற்பனை செய்ய முடியும். ஆனால்... ஆனால்... என் பழைய ராஜு எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”

அதற்குப் பிறகு கண்ணீர்தான் அவள் உள்ளக்கிடக்கையை எனக்குக் கூறியது.

அவள் இனிமேல் மணமே செய்துகொள்ளமாட்டாள். அது எனக்குத் தெரியும்.

மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக்கொள்ள மட்டும் தெரிகிறது.

ஏகம்பனாம்! ஏகம்பன்

விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற்புதமாக வருகிறது.

சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய,அறிய முற்படிமுயன்றீரா?

இப்பொழுது கவலைப்பட்டு என்ன  ஆகப்போகிறது.?