குங்கிலியக்கலய நாயனார்
அந்த வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஷ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது அப்கானிஸ்தானிலுள்ள ‘ஹெரத்’ என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.
'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்ட தாடி வைத்திருப்பவர் அறிவுஜீவி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது ஐ.நா வின் போதைப் பழக்கம் தடுப்புப் பிரிவில் வேலை பார்க்கிறார்.
லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை, அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துத்தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.
மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கேதான். ஆஹா! இந்தப் பெண்கள்தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத்தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ பர்தாவில் புகுந்து விடுவார்களே?
நான்தான் தொடங்கினேன். எனக்குக் கனடாக்காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹாமெலின் இந்தப் போதைப்பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன செய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை விடுமே?” என்று கேட்டேன்.
அபகானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப்பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கேதான். இவர் தனியாளாக இதை ஒழித்தும் கட்ட கொடுக்குக் கட்டிக்கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதைதான்.
இகற்குக் கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர்
முந்திக்கொண்டு சொன்னார்:
(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் அதை வாசகாகளுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)
பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை : 'விடக் கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டுதான். சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும். சிலருக்கு சிகரெட தேவை ; இது இல்லாமல் நடுக்காட்டில் அவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக்கொண்டு பைத்தியமாகி வாவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால்தான் கஷ்டம்."
அதற்குக் கனடாக்காரர், "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்குப் பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத்தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதைவிட முடியவில்லையே" என்றார்.
நான் சொன்னேன்: "நான் செருப்புப் போடும்போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகுதான் வலது காலைப் போடுவேன், ஷேவ் எடுக்கும்போது வலது பக்கம் செய்து பிறகுதான் இடது பக்கம். இதுவும் பழக்கம்தானே?"
ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும்போது இடது பக்கம்
குத்தி பிறகுதான் வலது பக்கம் குத்துவாள். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்.”
"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்துப் பார்த்திருக்கிறீர்" என்றார் கனடாக்காரர், கண் களைச் சிமிட்டியபடி.
அதற்குப் பிறகு சம்பாஷணை கீழிறங்கிவிட்டது; வெகு வெகு கீழிறங்கிவிட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.
நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு - மேலே கொண்டு வருகிறீர்களா“ என்று விட்டுத் தொடர்ந்தேன்.
"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா”?
ஜெர்மன்காரர் அந்தச் சமயம், தன் பையில் வைத்திருந்த ஒரு வளைந்த போத்தலை எடுத்தார் அவர் எப்பவும் அதில் குடி வகை வைத்திருப்பார். எந்தக் காடு,மேடு,மலை சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டல் போல் காவிக்கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறு குடித்துவிட்டுச் சொன்னார்
சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி வேண்டும். அதற்குப் பிறகு ஐந்து ரூபாயை அவன் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்கி ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை.”
"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்ப திரும்பச் சாப்பிடுவேன்; களவெடுத்தும்கூட சாப்பிடுவேன் இதுவும் அடிமைப் பழக்கமா?" என்று கேட்டேன்.
அதற்குக் கனடாக்காரர் "ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்குக் குமட்டிக்கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையால் இருக்கும் வரை எடுத்துக்கொண்டே இருப்பாய்; உன் முடிவு உன் வசமே இல்லை” என்றார்.
ஜெர்மன்காரர் சொன்னார்: “இது சொல்லித் தெரிவதில்லை இந்தப் போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக்கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும். தோளிலே ஏகே 47ம் ஆக வீட்டைச் சுற்றியபடி இருப்பான்."
"அன்று கிறிஸ்துமஸ் இரவு. நானும் மனைவிஹயம வெளியே போய்விட்டு ஒருமணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம்.
வீட்டின் கீழே கண்ணாடிகள் உடைந்து சலுசலுவென்று சத்தம். கீழே ஓடிவந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."
« 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்தபடியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்.”
"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டுபோனார்கள். களவுபோனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்குப் பிறகு பொலீஸிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."
“ஒருநாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும் படி. நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு விரைந்து சென் றேன்.”
அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டியபடி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவதுபோல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்தவண்ணம் இருக்கிறது.
"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு வீடுகளில் திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறான், ஆனால், விற்றுவிட்டானாம்.”
“என் மனைவி அவன் முன்னே முழங்காலில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டுவந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்.”
“அவன் கண்களில் கண்ணீர்தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை.'
"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும்தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல்தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்டான்."
“முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால், இரண்டா வது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒருநாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக்கொண்டான். ஒரே ஒரு முறைதான். அடுத்த நாளும் எடுத்தான். அதற்கு அடுத்த நாளும் இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் இதுதான் கடைசித்தரம் என்று நினைத்துக் கொண்டான்.
கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேளை 'சிமிட்டாவுக்கு' காசு சம்பாதிப்பது எப்படி என்பதுதான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடகினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத்தொடங்கின. கடைசியில் ஒருநாள் தங்கை தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டுபோன இடத்தில் பிடிபட்டுவிட்டான்.''
"அப்பத்தான் முதல் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றாடி பொலீஸில் இருந்து. அவனைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால், வீட்டுப் பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை இப்படித் தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒருநாள் தாயாரை அடித்தேவிட்டான்."
"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும்போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்.”
“நானும் மனைவியும் பெஷாவாரை விடும்போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்பக்கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை.”
"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"
ஹாமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில்தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்சிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொட விடும்."
"நான் தீக்குச்சியினால்தான் சிகரெட் பற்ற வைப்பே முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும்போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில்தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை .”
“ஒரு கோடை விடுமுறைக்காகப் பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொறொன்ரோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."
“என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதைத் தொடவே இல்லை. நான் பாக்கிய சாலி."
"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்கவேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?”
"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று. இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோருமுறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்தபடியே இருக்கிறேன்" என்றார்.
நான் சிறுவயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.
“எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்றுதான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும்போதுகூட 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று சொல்லித்தான் தீத்துவார்கள்.
ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும்போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்துவிட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்துவிடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி.
சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டுதான் வருவான். அவனுடைய 'மூடைப் பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி'தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவைத் திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி, மற்றொரு நாளைக்கு அவன் தாயார், இப்படி.
கலாம்
என்று பொட்டு வழி
பார்கள்.
ட்டக்
எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு
ஆரை வைகிறான் என்று வேலி வழியாலும், பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டு ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்.
எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில்தான். அவன் வீட்டுப் படலை அடுத்த ஒழுங்கை வழியாகத்தான் இருக்கும. அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்றுதான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் வீட்டுக்கூரை தெரியும்.
எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்தபடியே அக்கா அவர் சொல்லிக்கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்பப் பதினாறு, பதினேழு வயதிருக்கும்
அக்கா பாடும்போது நான் அவள் முகத்தையே பார்த்தபடி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறிமாறி தவழ்ந்து விளையாடும். அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்.
கனக சபா...பதி...தரி...சனம்
ஒருநாள்
கண்டால்...கலி...தி...ரும்
ஆ......
அக்கா இந்தப் பாட்டைப் பாடுகிறாள். என் தகப்பன் மரக்கட்டிலில் சப்பணம் கட்டிக்கொண்டு இருந்து ரசிக்கிறார்.
மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி, கனகசபாபதி' என்று ஓர் இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டிய படி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக்கொண்டிருப்பதுதான் அவன் வேலை.
ஒருநாள் இந்தக் குடிகாரன் வழக்கம்போல வேட்டியை இழுத்தபடி போறான், சத்தம் போட்டுக் கத்தியபடி எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காது கொடுத்துக் கேட்டபடியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறைபோலும். குடிகாரன் சொல்கிறான்:
"அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கேப்பாரில்லையா?"
அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு டார். கொஞ்ச நாள் பிறகு பாட்டுக்காரரையும் வேண்டாமென்றுவிட்டார்.
இப்படித்தான் ஒருநாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக்கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்குப் போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல், பிறகுதான் உருவம் தெரிகிறது. வழக்கம்போலச் சத்தம் போட்டு பேசியபடியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டுவிட்டு உள்ளுக்கு ஓடிவிட்டேன்.
அவன் வீட்டுக்குப்போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலேதான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க் கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்.
ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம், அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடுதான் படிக் கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத் தான். அவன் அரைவாசி சாப்பிட்டுவிட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டுபோய்க் கொடுப்பான்.
“என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சுப் போட்டு வாறாய்?”
"ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறேனே?” இது அவன்.
"மூன்று நாள் பிள்ளைகளுக்குச் சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?”
எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?
"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் படுங்கி 'ரப்பிலே' செருகிவிட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."
"எடுத்துக் குட்டி, எடுத்துக் குட்டி"
காலால் அவளை உதைக்கிறார்.
மனிதனுடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்ச நேரம் அமைதி. ஊர் முழுக்கக் காதைக் கூர்மையாக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.
அம்மாதான் முதலில் பார்த்தாள், வீட்டுக் கூரை டங் கென்று ஒரு கணம் ஆடியதை "ஐயோ, இஞ்சருங்கோ என்னெண்டு போய்ப் பாருங்கோ" என்று கத்தினாள் அம்மா
"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும், கிணத்தைத் தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்ன ராக உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்குப் போறான் பிறகு அம்மா ."
நாக்கு வெளியே நீண்டுவிட்டது. ராசக்கா முகட்டில் இருக்க ஒரு சேலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்துக் கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒருகணம் பிந்தியிருந்தால் மரணம்தான்.
சின்னத்தம்பிக்கு வெறி முறிந்துவிட்டது. தலையில் கை வைத்தபடி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துகத்தென்று கத்துகிறார்கள்.
கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்.
"ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ இந்தச் சனியனை இனி நான் தொடமாட்டேன். இது சத்தியம்” என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
முதல் நாள், வேட்டியைக் கட்டியபடியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத் தம்பி, இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதேதான்.
அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருந்தி விட்டான் என்று .
நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக் கொண்டே வாறான்.
"விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது. என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க!
கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மெளனம் பிறகு கனடாக்காரர் சொன்னார்.
‘“இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால், அதை வெளியேற்றுவதுதான் மிகவும் சிரமம்.”
"அதிலும் நோய் விலகும் அறிகுறிகள் (withdrawal Symptoms) அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனைதான். இதிலே மீள்வது மிகவும் அரிது” என்றார் ஜெர்மன்காரர்.
அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation Centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால், பத்திலே ஒருவர்தான் மீண்டு வருவார்கள்.
“எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆப்பிரிக்காவில் நான் வேலை செய்தபோது அந்தப் பரிச்சயமேற்பட்டது” என்று நான் கூறினேன்.
அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பெனி. ஆப்பிரிக்காவின் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்ப்யூட்டர் பிரிவில்தான் நான். எனக்குக் கீழே நாற்பது பேர்.
அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக்கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும்தான்.
கம்ப்யூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால், அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவதுபோல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு சொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங் களைக் கற்றுக்கொண்டு விடுவான்.
நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத் துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்.
இரவு பகலாகக் கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டி ருந்தது. அப்போதுதான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது.
இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு ஊற்றிக்கொண்டார். நான் தொடர்ந்தேன்.
அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சு தான். அதிலே ஒரு நீலக் கண் அழகி, பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்.
பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஓர் ஆணை வலையில் வீழ்த்தி இழுத்துக்கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத்தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஒருவித குடிவகையைச் சிறு சிறு ‘பொலிதீன் பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்து கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்த வுடன் இன்னும் கேட்கும். கொடுத்துக்கொண்டே இருக்க வேணும்.
கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக்கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கிவிட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.
ஆப்பிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டும் விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்.
ஒருநாள் அவன் என்முன்னே நிற்கும்போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம் அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது.
ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒருசிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் ப்ரோகிராம் விபரங்கள்; இந்தக் கம்ப்யூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில் இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்பு கள்தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டுவிட்டேன்.
இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்குக் கிலி பிடித்துவிட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக்கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடிவிட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்திவிட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால், நான்தான் கடைசி.
அப்பத்தான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பி வைத்தேன். எனக்கு அவன் மீது அன்புதான் சுரந்தது. கோபம் வரவில்லை . அவன் எவ்வளவு ஓர் இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின.
நான் ஒபுக்குவை மறந்தே விட்டேன். ஆனால், ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
ஐயா,
உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்ப் யூட்டர்தான் இன்று எனக்குச் சோறு போடுகிறது.
நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்துவிட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறாள்.
ஒபுக்கு . இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாக விருந்தது.
ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றிவிட்டு மறுபடியும் போத்தலைப் பையிலே வைத்தார்.
"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படிச் செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்” என்றேன்.
ஜெர்மன்காரர், "ஆமாம், இன்று இதுதான் கடைசித் தடவை நாளை விடியும் வரை” என்றார்.
நாங்கள் சிரித்தோம்.
மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் – என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை, வாலுமில்லை . குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே என்று கேட்டான்.
"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா என்று கேட்டேன்.
"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்” என்றான்.
"திருக்கடவூரிலே சுவாமிக்குத் தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்துக் குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்டபடியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.
"ஒருநாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியைக் கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார், ஆனால், வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறிகொடுத்தார்.”
"தன் வயமிழந்து, மதிமயங்கி, தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய அவன் காலில் விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியைப் பெற்றுக்கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசியை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்.''
"இது என்னத்தைக் காட்டுகிறது ?" என்றேன். "அவருடைய பக்தியைத்தான் " என்றான் நண்பன்.
"இல்லை , இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction)தா என்றேன் நான்.
அருமை! அருமை! எல்லாம் ஒருவித பயக்க வயக்கமே!
ReplyDeleteஅருமை...
ReplyDelete